வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப் படும் – நாலடியார் 89
நேரிசை வெண்பா
அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும்
வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக்
கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம்
அவற்றினும் அஞ்சப் படும். 89
- பிறர்மனை நயவாமை, நாலடியார்
பொருளுரை:
வில்லம்பும், தீயும், ஒளிர்கின்ற கதிர்களையுடைய சூரியனும் வெதும்பிச் சுட்டாலும் வெளிப் பொருளையே சுடும்; அழன்று கவலைப்படுத்தி உள்ளத்தைச் சுடுவதனால் காமம் என்பது அவற்றைப் பார்க்கிலும் அஞ்சப்படும்.
கருத்து: காமம் என்பது உள்ளத்தை வெதுப்புங் கொடுமையுடையது.
விளக்கம்:
அம்பு பெரும்பான்மைக்கு உரிய ‘சுடும்' என்னும் வினையை ஏற்றது.
நன்றாய்ச் சுடுகின்றபோது வெம்பிச் சுடவேண்டுதலின், அவ்வியல்புபற்றி அச்சொல் இரண்டிடங்களிலுங் கூறப்பட்டது.
புறம் என்றது, "பைம்புறப் படுகிளி"1 என்புழிப்போல உடம்பை; உடம்பைச் சுடுதலினும் உள்ளத்தைச் சுடுதல் கொடுமை யாதலின், அவற்றினும் அஞ்சப்படும் என்றார்.
உள்ளம் சுடப்பட்டால், அதனால் உடம்பும் உயிரும் வாடுதல் ஒருதலையாகலின், அது கொடுமையுடையதாயிற்று.
மேலும் ஆறாத முறையிற் சுடுதல் தோன்றக் கவற்றிச் சுடும் எனவுங் கூறப்பட்டது.