தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர் அண்ணா- தொபரமசிவன் பேட்டி

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமான ஒருவரான பேராசிரியர் தொ.பரமசிவன், நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர். ‘திராவிடம்’ எனும் சிந்தனை எப்படித் தமிழ் மண்ணில் உருக்கொண்டது, அதற்கான வரலாற்று – பண்பாட்டுப் பின்னணி என்ன என்று தர்க்கபூர்வமாக நிலைநாட்டியவர். பண்பாட்டுத் தளத்தில் அண்ணாவின் பங்களிப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

உங்கள் வாழ்வில் அண்ணா எப்படி நுழைந்தார்?

நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்துவிட்டார். அது அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம். பத்து வயதிலேயே ‘திராவிட நாடு’, ‘முரசொலி’ வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடைய வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது ஞாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள். கல்லூரியில் நான் படிக்கும்போது, வகுப்பிலுள்ள 63 மாணவர்களில் 60 பேருக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பு இருந்தது. தனது வீடு, தெரு, சாதி தாண்டி மாணவனுக்கென ஒரு பொது உலகம் இருந்தது. அவர்கள் பேசுவதற்கும் சண்டை போடுவதற்கும் ஏதோ ஒரு தத்துவம் இருந்தது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டியும் அண்ணா எல்லோர் மத்தியிலும் செல்வாக்கோடு இருந்தார். தமிழால், தமிழ் அரசியலால் அவர் எல்லோரையும் இணைத்தார்.

திராவிட அரசியலும் தமிழ் அரசியலும் வேறுவேறு இல்லையா?

தமிழ்தான் இங்கே திராவிட அரசியலுக்கான உயிர். திராவிடம் என்று எதைச் சொல்கிறோம்? இரு விளக்கங்கள் கொடுக்கலாம். இனம் சார்ந்து ஆரியர், திராவிடர் என்று இங்குள்ள இரு இனங்களில், எல்லா இடங்களையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முற்படும் ஆரியப் பண்பாட்டுக்கு மாற்றாக, பன்மைத்துவத்தைப் பேசுகையில் திராவிடம் பேசுகிறோம். அடுத்து, இடம் சார்ந்து தென்னகத்தை – கர்நாடகம்,

ஆந்திரம், தெலங்கானா, கேரளம், தமிழ்நாடு – இணைந்த பகுதியைக் குறிப்பிடுகையில் திராவிடம் பேசுகிறோம். ஆரியம் – திராவிடம் வரலாற்று வேறுபாடுகள் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப் பட்டவை. பண்பாட்டுத் தளத்திலும் இந்த வேறுபாடுகள் பல விஷயங்களில் இன்றளவும் நீடிக்கின்றன. தென் மாநிலங்களிலும் திராவிட மொழி பேசுபவர்களுக்கென்றும் தனித்த பண்பாடு இருக்கிறது. பிராமணர்கள் அல்லாத எல்லா சாதிகள் மத்தியிலும் பொதுவான அம்சங்கள் நிறையவும், ஒவ்வொரு சாதிக்குமான சின்னச் சின்ன பண்பாட்டு அசைவுகள் இருப்பதையும் பார்க்கிறேன். ஓர் உதாரணத்துக்கு, இந்தச் சமூகங்களில் தாய்மாமனுக்குள்ள மரியாதையைச் சொல்லலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சப்பாடாகத் தொடர்கிறது இது. ஆரியப் பண்பாட்டில் இது கிடையாது. அடுத்து, இறந்தவருக்கு, சடலத்துக்குக் கொடுக்கப்படும் மரியாதை. நிறைய சொல்லலாம். திராவிட அரசியல் என்பதன் அடிநாதம் அவரவருக்குரிய பிரதிநிதித்துவம், அதிகாரத்தை அவரவருக்குக் கொடு என்பதுதான்.

இங்கே அரசியல், பண்பாடு எல்லாவற்றிலும் பிராமணியத்தின் ஆதிக்கம் இருப்பதால், பிராமணியத்துக்கு எதிரான இயக்கமாக அது உருவெடுத்தது. ஆனால், தொடக்கம் முதலாகவே பிராமணர்களை எதிரியாக்கவில்லை. இன்னும் ஒருபடி மேலே போய் பிராமணர்களையும் இயக்கத்தினுள் கொண்டுவந்தார் அண்ணா. சமூகரீதியாக பிராமணர்கள் மட்டும் அல்லாது, இங்கேயே வந்து தங்கிவிட்ட மாற்றுமொழியினரையும் உள்ளடக்கும் விதமாகத் தமிழையும் தமிழுணர்வையும் இணைப்புச் சங்கிலியாக்கினார். ‘திராவிட நாடு’ என அவர் முன்வைத்த நாட்டினுடைய நிர்வாகமும்கூடத் தெளிவாக மலையாளிகளுக்கு, தெலுங்கர்களுக்கு, கன்னடர்களுக்கு, தமிழர்களுக்கு என்று அவரவருக்கான தனி நிலத்தையும் அங்கே அவரவர் சுயாட்சியையும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. ஒரு கூட்டரசாக அது இயங்கலாம் என்று அவர் நினைத்தார். ஆகையால், திராவிட அரசியலும் தமிழ் அரசியலும் வேறுவேறு அல்ல. தமிழ் அரசியலுக்குக் கூடுதல் தத்துவ பலத்தைத் தருவது என்று திராவிட அரசியலைச் சொல்லலாம்.

அண்ணா உண்டாக்கிய முக்கியமான பண்பாட்டு மாற்றங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

இந்தியத் துணைக் கண்டத்தில் சாதிக்கும் பிராமணியத்துக்கும் உள்ள செல்வாக்கை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார். அதனால்தான், அரசியல் தளத்தில் பங்கெடுக்கும் ஒரு இயக்கத்தின் லட்சியத்தில் சாதி ஒழிப்பையும் முக்கியமான ஒன்றாக்கினார். சகலத்திலும் பிராமணியம் கலந்திருப்பதால்தான் ஒவ்வொரு தளத்திலும் அதற்கு மாற்றான ஒன்றை நிறுவ முற்பட்டார். தமிழ்நாட்டு அரசியல் களத்திலிருந்து சாதிப் பெயரை ஒழித்ததே அண்ணாவின் சாதனைகளில் ஒன்றுதான். ‘இஸ்ரோ’வின் தலைவராக இருந்த விஞ்ஞானியே மாதவன் நாயர் என்று சாதியைக் கூடச் சூடிக்கொள்ளும் நாடு இது. எங்கே சாதியொட்டு இல்லாத அரசியல்வாதி இருக்கிறார், தமிழ்நாடு தவிர? ‘சாதி கேட்பது கேவலம்’ என்ற உணர்வை இங்கே ஒரு தலைமுறைக் காலகட்டத்துக்குள் இங்கே கொண்டுவந்துவிட்டார். சாதனை இல்லையா இது? சங்க இலக்கிய மரபை அவர் மீட்டெடுத்தார். அதன் வழி புதிய மதிப்பீடுகளை உருவாக்கினார். தமிழ்நாட்டின் அரசியலுக்கு என்று தனிக் கலாச்சாரத்தை உருவாக்க முற்பட்டார். எல்லோரையும் உள்ளணைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.

பொங்கல் பண்டிகைக்குப் புது உருவம் கொடுக்க முற்பட்டாரே! ஒரு சமூகம் இளைப்பாறிக்கொள்கிற நிகழ்ச்சி திருவிழா. பண்டிகையும் அப்படித்தான். இது அந்தந்தப் பகுதி மக்களோடும் உற்பத்தியோடும் மண்ணோடும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சமூக மாற்றம் என்பது அரசியல் தளத்தில் மட்டுமே நிகழ்வது கிடையாது என்பதும் பண்பாட்டுத் தளத்தில் வேர் பிடிக்காத மாற்றம் நீடித்து நிலைக்காது என்பதும் அண்ணாவுக்குத் தெரிந்திருந்தது. அதனுடைய விளைவாகவே தமிழர்த் திருநாளான பொங்கல் பண்டிகைக்குப் புத்துயிர் கொடுத்தார் அண்ணா. எல்லோரையும் ‘தமிழர்கள்’ என்ற அடையாளத்தின் கீழ் ஒன்று திரட்டும் இலக்கும் சமத்துவ லட்சியமும் அதன் பின்னே இருந்தன.

பிற்பாடு, கருணாநிதி ஆட்சியின்போது தமிழ்ப் புத்தாண்டு என்று தை முதல் தேதியிலிருந்து கணக்கைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதும்கூட இதன் தொடர்ச்சிதான். ‘இந்து – இந்தி – இந்துஸ்தான்’ எனும் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்கிற கொள்கையின் கீழ் இந்தியாவைக் கொண்டுவரும் பண்பாடுகள் அனைத்துக்கும் மாற்று வழிகளைச் சிந்தித்தவர் என்று நீங்கள் அண்ணாவைப் படிக்கும்போது விளங்கிக்கொள்ளலாம். அண்ணாவைப் பொறுத்த அளவில் இந்தியக் கலாச்சாரம் என்று ஒன்று கிடையாது; வேண்டுமானால், இந்தியக் கலாச்சாரங்கள் என்று சொல்லலாம். ஏனென்றால், கலாச்சாரங்களின் தொகுப்பே இந்தியா. இதற்கு வழிகாட்டும் நிலமாகவே தமிழ்நாட்டை அண்ணா கனவு கண்டார். அதற்கான பாதையாக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்த பேச்சு, எழுத்து, உரையாடல்கள், வாசிப்பு வெளியை வெகுமக்கள் நோக்கி நகர்த்தினார்.

கடவுள் எதிர்ப்பு திராவிட இயக்கத்துக்கு ஒரு சுமைதானே?

அப்படிக் கிடையாது. பெரியாரை, அண்ணாவை முழுமையாகப் படித்தவர்கள் எவரும் கடவுளர்களை அவர் தாக்கிப் பேசியதன் நோக்கம் சாதி ஒழிப்பு என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வார்கள். பெரியார், அண்ணா இருவருமே நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களைச் சமூகக் கேடுகளாக நினைத்தனர். அதனாலேயே தாக்கினார்கள். “நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தை நான் வெறுக்கிறேன்” என்பதைப் பல இடங்களில் பேசியிருக்கிறார் அண்ணா. பெரியார் கடவுள் மறுப்பைத் தூக்கிப் பிடித்தது வைதீக எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்புக்காகத்தானே தவிர, ஆன்மிக எதிர்ப்பு என அதைப் பார்க்க முடியாது. பிள்ளையார் சிலையைத்தான் பெரியார் உடைத்தார், சுடலைமாடன் சிலையை அல்ல.

பெருந்தெய்வ – சிறுதெய்வ அரசியலெல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருக்கும்?

பிராமணியம் உள்ளவரை நீடிக்கும். நாட்டு தெய்வங்களை மக்களின் தெய்வங்களாகப் பார்க்கிறேன். இந்த ஆன்மிகம் மக்களுடைய ஆன்மிகம். அதாவது, இது நிறுவனமயமாக்கப்பட்டது கிடையாது. இன்றைக்கும் கிராம தெய்வங்களுக்கான திருவிழாவில் மத எல்லைக்கு அப்பாற்பட்ட கூடுகை, பங்கேற்பைப் பார்க்க முடியும்.

கடவுளுக்கும் மக்களுக்கும் குறுக்கே யாரும் இல்லாமல் வழிபட முடியும். கிராம எல்லையில் நிற்கிற வீரனை நீங்கள் தொட்டுக் கும்பிடலாம். படையல் போடும்போது குடும்பப் பெரியவர்தான் பல இடங்களில் பூஜைசெய்கிறார். இந்த ஜனநாயகம் நிறுவனமயமாக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டில் கிடையாது. அது நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு ஆளை நிறுத்துகிறது; சம்பிரதாயங்களை நிறுத்துகிறது.

இதன் மூலம் கிடைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும் அதன் வழியாகக் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தையும் கொண்டே பிராமணியம் வாழ்கிறது. எப்போது வரை மேல், கீழ் என்ற அடுக்குமுறை இருக்கிறதோ அப்போது வரை அதற்கு எதிரான கலகங்களும் நீடிக்கத்தான் செய்யும். நான் என்ன சாப்பிடுகிறேனோ, அதை என் தெய்வம் சாப்பிடுகிறது. நான் கறி சாப்பிட்டால் என் தெய்வமும் கறி சாப்பிடும், நான் மது குடித்தால்

அதுவும் மது குடிக்கும். இதுவும்கூட ஒரு உயர்தர சமத்துவம்தானே? அப்படிப்பட்ட மக்களின் தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும்?

அண்ணாவின் பெருமையாக நீங்கள் தமிழ் அரசியலைக் குறிப்பிட்டீர்கள். ஆனால், தமிழகத்தில் தமிழரல்லாதோர் – தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் உள்ளிட்டோரும் – அரசியலில் கோலோச்சுகிறார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்வது?

இவையெல்லாம்தான் பெரியாரின், அண்ணாவின், திராவிட இயக்கத்தின் சாதனை என்று சொல்கிறேன். தமிழ் அரசியலுக்குப் புத்துயிர் கொடுத்தவர் அண்ணா. அப்படிக் கொடுக்கும்போது மத, இன வெறியூட்டாமல், இந்த மண்ணின் உணர்வைப் பெறும், தமிழுணர்வைப் பெறும் ஒவ்வொருவரும் தமிழர் என்பதை அடிப்படையாக்கினார். பிராமணரல்லாதோர் இயக்கமாகப் புகழ்பெற்ற ஒரு இயக்கத்தின் வழிவந்த கட்சியில் ஜெயலலிதா என்ற பிராமணர் எப்படித் தலைமைக்கு வந்தார்

என இதைப் பார்க்கக் கூடாது. அந்த இயக்கத்தை அவரும் உள்வாங்கினார் என்றும் அதனால் தலைமை ஏற்றார் என்றும்தான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் 69% இட ஒதுக்கீடு சாதனையில் ஜெயலலிதாவுக்கும் பங்கு இருக்கிறது, இல்லையா? எம்ஜிஆர் தன்னை ஒரு மலையாளியாக

நினைக்கவே இல்லையே! டெல்லி ஆதிக்கத்துக்கு எதிராக எம்ஜிஆரும் ஜெயலலிதாவும்கூடப் பேசியிருக்கிறார்கள்.

இனவுணர்வை மதவுணர்வு வெல்ல முடியுமா?

முடியவே முடியாது. ஏனென்றால், இனம் உங்கள் பிறப்போடும், உடலோடும் உயிரோடும் கலந்திருக்கிறது. மதம் நீங்கள் நினைத்த மாத்திரத்தில் மாற்றிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது. மேலும், மதம் எந்தக் காலத்திலும் இனத்துக்கான அடையாளமாக இருக்கவே முடியாது. ஏனென்றால், மதம் மாறும்போது அடையாளம் மாறுவதில்லை. இத்தாலியில் இருக்கும் கிறிஸ்தவமும் தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவமும் ஒரே இன அடையாளமாக என்றுமே மாற முடியாது.

சரி, அண்ணாவின் மிகப் பெரிய சாதனையாக எதைச் சொல்வீர்கள்?

தமிழ் நிலப்பரப்புக்குத் தமிழ்நாடு எனப் பெயரிட்டது. இந்த உலகம் உள்ளளவும் தமிழ்நாடு என அவர் சூட்டிய பெயர் நிலைக்கும். அது அவரது கனவைக் காலமெல்லாம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும்!

எழுதியவர் : என்.சுவாமிநாதன் (25-Mar-19, 4:46 am)
பார்வை : 38

சிறந்த கட்டுரைகள்

மேலே