பொல்லாச் சிறுவர்வாய்த் தீச்சொல் விடத்தினும் வெய்தாம் - கொடுஞ்சொல், தருமதீபிகை 154

நேரிசை வெண்பா

செருக்குமிகு பொல்லாச் சிறுவர்வாய்த் தீச்சொல்
வெருக்கொள் விடத்தினும் வெய்தாம் - சுருக்காக
அவ்விடத்தைப் போக்கின் அகலுமால் அத்தீச்சொல்
எவ்விடத்தும் போகாதே எண். 154

- கொடுஞ்சொல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளச் செருக்குடைய பொல்லாச் சிறுவர் வாய்த் தீச்சொல் விடத்தினும் கொடியது; அந்த விடத்தை மந்திரத்தால் போக்கலாம்; இந்தக் கொடுஞ்சொல் எவ்விதத்திலும் நீங்காது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சிறுவர் என்றது பருவ நிலையைக் கருதி அன்று; அறிவு பாழ்போய் வறிதுரையாடிச் சின்னத்தனமாய்த் திமிர்ந்து திரியும் புன்மக்களைக் குறித்து நின்றது.

கடுந்துயர் விளைத்து நிற்கும் கொடுமை நோக்கி அவர் வாய்ச் சொல்லை விடத்தினும் கொடிது என்றது.

பாம்பின் பல் விடம் உடம்பில் பட்டு உதிரந் திரிந்து உயிர்க் கேடு செய்தலால் அதனை இடையே மந்திர மருந்துகளால் தடை செய்து நீக்கி விடலாம்; தீம்பர் வாய்ச்சொல் செவிவழியே உள்ளத்துள் பாய்ந்து உடனே உயிரை வதைத்தலால் தீரா விடமாய் இது பேரிழவு கூட்டிவிடுகின்றது.

தீயர் வாய்ச் சொல் தீயினும் விடத்தினும் தீயதாம்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே
நாவினால் சுட்ட வடு. 129 அடக்கமுடைமை

தீயினால் சுட்ட செம்புண் ஆறுமத் தீயிற் றீய
வாயினால் சுட்ட மாற்றம் ..ஆறுமோ வடுவே அன்றோ? - பாரதம்

சுடுதீயினும் படுபழிச் சொல் கொடிது என இவை குறித்திருத்தலறிக. குலை துடிக்கச் செய்யும் அதன் கொடுமை புலனாம்.

“Of all the griefs that harass the distressed,
Sure the most bitter is a scornful jest;
Fate never wounds more deep the generous heart,
Than when a blockhead’s insult points the dart.” - Johnson

புல்லன் இகழ்ந்து கூறும் பழிச்சொல்லே துன்பங்கள் எல்லாவற்றினும் கொடுந்துன்பமாம்; மேலோர் உள்ளத்தை அது வதைப்பது போல் தீ விதியும் வருத்தா’’ என ஜான்சன் என்னும் ஆங்கில ஆசிரியர் கூறியுள்ளதும் ஈண்டு அறியத்தக்கது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-19, 4:25 pm)
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே