சினிமாப் பாடல்கள்
சினிமாப் பாடல்கள் சென்று தொடுவன அழிவின்மை கொள்கின்றன. அவ்வளவாகப் புகழ்பெறாத பாடல்கள்கூட எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன. சினிமாப்பாடல்களில் பெருங்கலைஞர்கள் இடம்பெறுவதென்பது அவர்களை இன்னொருவகையில் அழிவற்றவர்களாக ஆக்குகிறது. அவ்வகையில் மலையாளத்தில் இரு பாடல்கள் குறிப்பிடத்தக்கவை
டேஞ்சர் பிஸ்கட் என்னும் [நாலாந்தரப்] படத்திற்காக ஸ்ரீகுமாரன் தம்பி எழுதி தட்சிணாமூர்த்தி இசைமைத்து ஏசுதாஸ் பாடிய பாடல் இது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உத்தரா சுயம்வரம் கதகளி காண்பதற்கு
உத்ராட இரவில் சென்றிருந்தேன்
பொற் சரிகை போட்ட பூஞ்சேலை அணிந்து அவள்
நெஞ்சு தொடுக்கும் அம்புகளுடன் வந்திருந்தாள்
இரயிம்மன் தம்பி அளிக்கும் சிருங்கார சொற்களின் போதை
இரு கனவின் மேடைகளில் கரைந்து சேர்ந்தது
இதயத்தின் ஆட்ட அரங்கில் அறுபது திரிகள் எரியும்
கதகளி விளக்குகள் எரிந்து நின்றன
குடமாளூர் சைரந்த்ரியாக வந்தார். மாங்குளம் பிருஹந்நளையானார்
ஹரிப்பாடு ராமகிருஷ்ணன் வலலன் ஆனார்
துரியோதன வேடமிட்டு குரு செங்ஙன்னூர் வந்தார்
வாரணாசியின் செண்டை உயிர்கொண்டு எழுந்தது
ஆயிரம் கனவுகள் தேர்கள் சமைத்த இரவில்
நான் அர்ஜுனன் ஆனேன் அவள் உத்தரை ஆனாள்
அதன்பின் ஆட்டவிளக்கு அணைந்தது
எத்தனை எத்தனை தலைமறைவுகளை நான் இன்றும் தொடர்கிறேன்
--------------------------------------------------------------------------------------------------------------
நவராத்திரி பூஜை பற்றிய சினிமாப்பாடல் இது. ஏசுதாஸ் அவரே பாடி அவரே நடித்திருக்கிறார். நிறகுடம் என்னும் படம். பிச்சு திருமலை எழுதி ஜயவிஜய இசையமைத்திருக்கிறார்கள். [ ஜயவிஜயன் செம்பையின் மாணவர்கள். மேடைப்பாடகர்கள். இவர்களின் ஜயனின் மகன்தான் நடிகர் மனோஜ் கே ஜயன்]
நட்சத்திர தீபங்கள் மின்னின நவராத்ரி மண்டபம் அணிகொண்டது
அரசத்தலைநகர் மீண்டும் சுவாதித்திருநாளின்
ராக சுக சாகரத்தில் நீராடியது
ஆறாட்டுப் படிக்கட்டிலும் யானைக் கொட்டிலிலும்
ஆனந்தமாக லட்சம் மக்கள் நிறைந்து நின்றனர்
சதிர் தொடங்கியது சங்கீதப் போதையில்
மக்கள் அசைவிழந்தனர்
செம்படை தாளத்தில் சங்கராபரணத்தில்
செம்பை வாய்ப்பாட்டு பாடினார்
வடிவேலு அரசர் முன்னால் முன்னாளில் காணிக்கைவைத்த
வயலினில் சௌடய்யா புகழ்தேடினார்
மிருதங்கத்தில் பாலக்காட்டு மணி நெய்த
லய தாள அலைகள் எழுந்து எங்கும் எதிரொலித்தன
நாலம்பலத்திற்குள் நாடகசாலைக்குள்
அமைதியானவர்களாக மக்கள் அசைவிழந்து நின்றனர்