வாக்குரிமை

வாக்குரிமை (Suffrage, அல்லது franchise) என்பது பொது மற்றும் அரசியல் தேர்வுகளில் வாக்களிக்கும் உரிமை ஆகும்.[1][2][3] சில மொழிகளில் வாக்களிப்பது இயங்கு வாக்குரிமை என்றும் (active suffrage) தேர்தலில் நிற்பது உயிர்ப்பற்ற வாக்குரிமை (passive suffrage), என்றும் குறிப்பிடப்படுகின்றன; [4] இவ்விரண்டும் இணைந்து முழுமையான வாக்குரிமை எனப்படுகின்றது.[

பொதுவாக வாக்குரிமை வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதை ஒட்டியே வரையறுக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அரசியல்
தீர்வுகளையும் முனைப்புகளையும் முன்னிறுத்தி நடத்தப்படும் பொது வாக்கெடுப்புகளுக்கும் பொருந்தும்.

வாக்குரிமை தகுதிபெற்ற குடிமகன்களுக்கு அவர்களது வாக்களிக்கும் வயது நிறைந்தவுடன் அளிக்கப்படுகின்றது. வாக்குரிமைக்கான தகுதிகளை அரசு அல்லது அரசியலமைப்பு வரையறுக்கிறது. சில நாடுகளில் தங்கியுள்ள வெளியாட்டினருக்கும், குறிப்பாகத் தோழமை நாட்டினருக்கு, அளிக்கப்படுகின்றது. (காட்டாக, பொதுநலவாய குடிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிகள்).[6]

வாக்குரிமை
நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சி மன்றம், ஊராட்சி மன்றம் ஆகியவற்றிற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. தேர்தல்களில் நாட்டின் குடிமக்கள் தங்கள் வாக்குகளை வழங்கிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு வாக்களிப்பதற்குக் குடிமக்களுக்கு உள்ள உரிமையை வாக்குரிமை என்கிறோம்.

முக்கியத்துவம்
நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின் குடிமக்களுக்கே உண்டு என்பது குடியரசின் தத்துவம். குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வாக்குரிமை மூலம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பயன்படுத்தித் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்துத் தங்கள் சார்பில் அரசை நடத்திவர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர். எனவே, மக்களாட்சி நடைபெறும் நாட்டில் வாக்குரிமை மிக இன்றியமையாத ஒன்றாகும்.

கட்டாய வாக்குரிமை
பெல்ஜியம், ஆஸ்திரேலியா, செக்கோஸ்லோவாக்கியா, மெக்சிக்கோ முதலிய சில நாடுகளில் தேர்தலில் எல்லோரும் வாக்களித்தாகவேண்டும் என்ற சட்டம் உள்ளது. வாக்களிக்காதவர் தக்க காரணம் காட்டவில்லையென்றால் அபராதமோ சிறைத் தண்டணையோ விதிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச வயது
இந்தியாவில் வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது நிரம்பி இருக்க வேண்டும்.

வாக்குரிமை அற்றவர்கள்
அயல்நாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் அயல்நாட்டவர்களுக்கும், வேறு காரியங்களுக்காகத் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கும் வாக்குரிமை கிடையாது. சிலர் ஒரு நாட்டின் குடிமக்களாக விரும்பி வந்து தங்கி இருப்பார்கள். அவர்கள் சில ஆண்டுகள் குடியிருந்த பிறகே அந்த நாட்டின் நிலையான குடிமக்களாக முடியும் என்று ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் உண்டு. இந்தக் காலக்கெடு முடியும் வரையிலும் அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. நாட்டின் குடிமக்களிலும் சித்த சுவாதீனம்றவர்களும், கடுமையான குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுச் சிறையிலிருப்பவர்களும் வாக்களிக்க முடியாது.

பண்டைக் காலத்தில் வாக்குரிமை
வாக்களிக்கும் முறையைப் பண்டைக்கால முதலே தமிழர்கள் அறிந்திருந்தனர். அக்காலத்தில் ஊராட்சி மன்றங்களுக்குத் தேர்தல் மூலம் அவர்கள் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஊர்மக்கள் ஒரு பொது இடத்தில் கூடுவார்கள். அங்குக்கூடியவர்களில் பெரும்பான்மையோர் யாருடைய பெயரைச் சொல்கிறார்களோ அவர் உறப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இது தவிர ‘குடவோலை’ என்னும் இரகசிய வாக்கெடுப்பு முறையும் அக்காலத்தில் இருந்தது. ஊர்மக்கள் தாங்கள் விரும்புகின்றவர்களின் பெயர்களை ஓலை நறுக்குகளில் எழுதி ஒரு குடத்தில் போடுவார்கள். பின் அக்குடத்தை ஒரு பொது இடத்தில் வைத்து ஓலைகளை எண்ணுவார்கள். யாருடைய பெயர் அதிகமான ஓலைகளில் இருக்கிறதோ அவர் உறுப்பினராகத் தேர்வு பெறுவார். பண்டைய கிரேக்க, ரோமானியர்களுக்கும் வாக்களிக்கும் முறை தெரிந்திருந்தது. எனினும், பிரதிநிதித்துவ நிறுவனங்கள் ஏற்பட்ட பின்னரே இக்காலத்தில் வாக்குரிமை மிகுதியாகச் செயல்பட்டு வருகிறது.

எழுதியவர் : (17-Apr-19, 9:15 pm)
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே