நாம் தமிழர் என்று பாடு----------------------பாரதிதாசன் இறப்பு---------ஏப்ரல் 21, 1964 அகவை 72 -------------------பாவேந்தர் பாரதிதாசன் நினைவு ---------
பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
பாரதிதாசன் 21.4.1964 அன்று காலமானார்.
நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு – தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!
போம்படி சொல் அயலாட்சியைப் பொழுதோடு-விரைவில்
போகாவிட்டால் அறிவார் அவர் படும்பாடு.
நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு-தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு?
தீமை இனிப் பொறுக்காது நம்தமிழ் நாடு-நாம்
தீர்த்துக் கெண்டோம் அவர் கணக்கை இன்றோடு!
மூவேந்தர் முறை செய்தது நம் தமிழ் நாடு-தாய்
முலைப்பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு
கோவிலுக்குள் வேண்டாம் பிறர் தலையீடு-பகை
குறுகுறுத்தால் பொறுக்காதெம் படைவீடு!
நாவலரும் காவலரும் ஆண்டதுஇந்நாடு-நிமிர்ந்து
நாம்தமிழர் நாம்தமிழர் என்றுபாடு
நாவைப்பதா நம் சோற்றில் கோழிப்பேடு?-தமிழா
நாம்தமிழர் நாம்தமிழர் என்று பாடு!
முத்துக்கடல் முரசறையும் முத்தமிழ் நாடு-நீ
முன்னே்றுவாய் தமிழ் மறவா ஒற்றுமையோடு
நத்துவதை ஒப்பிடுமா நம்வீடு மறவா?
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு
தத்தும் தவளைக் கிடமா முல்லைக்காடு-நம்
தமிழகத்தில் கால்வைப்பதா இந்திப்பேடு
நத்தை உறவாடுவதா சிங்கத்தோடு-தமிழர்
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு!
– பாவேந்தர் பாரதிதாசன்