விழுமிய நூலுயர்ந்த மெய்ப்பொருளைத் தாங்கி புல்லியின்பம் செய்யும் - நூல், தருமதீபிகை 193

நேரிசை வெண்பா

விழுமிய நூலுயர்ந்த மெய்ப்பொருளைத் தாங்கி
வழுவின்றி வாய்ந்து வயங்கி - அழகமைந்த
மெல்லுடம்போர் நல்லுயிரை மேவிநிற்றல் போலென்றும்
புல்லியின்பம் செய்யும் பொலிந்து. 193

- நூல், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அழகு நிறைந்த மெல்லிய உடம்பில் நல்ல உயிர் அமைந்து நிற்றல் போல் உண்மைப் பொருள்களை மருவி உயர்ந்த நூல் ஒளி மிகுந்து என்றும் இன்பம் புரிந்து வருகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

விழுமிய - மிகவும் மேன்மையான; விழுமம் என்னும் சொல் சீர்மை நீர்மைகளை உணர்த்தி வரும்.

சத்தியம், சாந்தம், சீலம் முதலிய உத்தம நலங்கள் தோய்ந்து உள்ளதை நல் உயிர் என்றது. அந்தத் திவ்விய சீவன் எவ்வழியும் இன்பமாய் இனிதமர்ந்திருத்தல் போல் மேலான நூலும் ஞாலம் நலமுறக் கோலம் கொண்டு நிற்றலால் அஃது இங்ஙனம் உவமிக்க வந்தது. மெல் உடம்பு சொல்லுக்கும், நல் உயிர் பொருளுக்கும் ஒப்பாம்.

உள்ளம் உணர்ச்சிகளைப் பொருந்தி நின்று உயர்ந்த மகிழ்ச்சிகளை விளைத்து வருதல் கருதி புல்லி இன்பம் செய்யும் என்றது, புல்லுதல் - பொருந்தல், தழுவல்.

புறத்தே உருவப்பொலிவும் அகத்தே இனிமைப் பண்பும் நிறைந்த ஒரு அருமைத் திருமகன் போல் சிறந்த நூல் செவ்வி சுரந்து திகழ்கின்றது.

சொல்லிலும் பொருளிலும் சுவை சுரந்து பல்வகை நலங்களும் படிந்து எல்லாரும் மகிழ்வுற இனிது எழுந்துள்ளதே நல்ல நூல் ஆம். அது சீவநதி போல் யாவருக்கும் ஆதரவருளும்.

காட்சிக்கும் கருத்துக்கும் இன்பம் பயந்து யாண்டும் மாட்சி புரிந்து வருகின்ற அதன் ஆட்சி நிலையை அறிய அழகும் குணமும் அமைந்த விழுமிய குலமகனை உவமை குறித்தது.

என்றும் இன்பம் செய்யும் என்றது வருகின்ற சந்ததிகளுக்கெல்லாம் அறிவு நலங்களை உதவி ஒரு சிறிதும் குன்றாமல் என்றும் நிலையாக நிலைத்துவரும் அதன் நிலைமை தெரிய வந்தது.

வெளியே மொழியில் இனிமையும், உள்ளே கருத்தில் அருமையும் கனிந்து செவிக்கும் சிந்தைக்கும் இனியனவாய்ச் செழித்து விளங்குவனவே சீரிய நூல்களாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Apr-19, 8:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே