412 ஐம்பூதமாகிய செல்வமும் திருத்தந்தையாகிய ஆண்டவனும் - பொருளாசை ஒழித்தல் 8
அறுசீர் விருத்தம்
காய் 4 / மா தேமா
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
பூதமதி னொன்றுநமைத் தாங்குமன்னை யொன்றுநாமும்
..புசிக்கும் உண்டி
மாதரையில் ஒன்றுரிய சமையலாளொன் றுநம்மெய்க்கு
..வளச்சாந் தாற்றி
பேதமின்றி மற்றொன்று நாமூரும் வாகனமாம்
..பின்னு மாதி
நாதனே தந்தையெனிற் செல்வமிது போலுமுண்டோ
..நவிலாய் நெஞ்சே. 8
- பொருளாசை ஒழித்தல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
”மனமே! ஐம்பெரும் பூதங்களில் ஒன்றான நிலம் நம்மைத் தாங்கும் தாய். ஒன்று நாம் சாப்பிடும் உணவுடன், தரையிலிருந்து பெற்று அருந்தும் நீர்.
ஒன்று உணவினைச் சமைக்கும் நெருப்பாகிய சமையலாள். இன்னொன்று நம் உடம்பிற்கு இதம் தரும் விசிறியாகிய மெல்லிய காற்று.
மற்றொன்று நாம் போக்குவரவு செய்ய இடந்தரும் ஊர்தியாகிய வானம்.
மேலும் ஆதி பகவனே தந்தையாக இருக்க இவை போன்ற செல்வம் வேறுண்டோ என்று சொல்” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.
சாந்தாற்றி - விசிறி