சுபதினம் காண்போம்

======================
கொண்டாட்ட நாட்க லென்றுக்
கூடி மகிழ்ந்த தினங்கள்
திண்டாட்ட நாட்க லாகித்
தீயாய்ச் சுடுவ தாலே
வண்டாகிச் சிறக சைத்து
வானில் பறந்தக் கோலம்
நண்டாகிப் பொந்தில் நிற்கும்
நரக நிலைமை ஆச்சு
**
தொழிலாளர் தினமும் கூட
துக்க தினமாய் மாறும்
இழிவான நிலைமை கண்டோம்.
இன்னும் மாறா துயரால்
விழிநீரைச் சிந்தி சிந்தி
வேதனை கொள்வோர்க் நெஞ்சில்
அழியாத சோகம் நீங்க
ஆறுதல் பூக்கள் செய்வோம்.
*
மேதின மென்று இந்த
மேதினி கண்ட நாளும்
தீதினத் தாரா லேதும்
தீங்குகள் நேர்ந்து இதுவும்
சாதின மாகு மென்று
சகலரும் அஞ்சி நிற்கும்
சூதினை மறந்து விட்டு
சுபதின மாகக் காண்போம்.
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (30-Apr-19, 8:48 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 55

மேலே