அவனை தேடுகிறேன்

மறக்கவே நினைக்கிறேன் முடிந்தவை யாவையும்

பிறக்கவே நினைக்கிறேன் புதியதோர் உலகத்தில்

பறக்கவே நினைக்கிறேன் சிகரந்தொடு நோக்கத்தில்

சிறக்கவே முனைகிறேன் வாழும் முறைமையில்



இருள்காணும் கண்களுக்கு ஒளிக்காட்ட நினைக்கிறேன்
பொருள்காணும் பேர்கட்கு பொருள்வார்க்க நினைக்கிறேன்
வருமானம் என்போர்க்கு வழிகாட்ட நினைக்கிறேன்
பெறுமானம் என்போர்தம் மதிப்புணர்த்த நினைக்கிறேன்

தன்மானம் என்போர்க்கு துணையாக நினைக்கிறேன்
தமிழ்மானம் காப்போர்தம் செருப்பாக நினைக்கிறேன்
இலக்கற்ற சிந்தனையின் நிலைமாற்ற நினைக்கிறேன்
அழக்கற்ற நெஞ்சத்தின் வலியாற்ற நினைக்கிறேன்

விழுகின்ற பொழுதெல்லாம் விதியென்று நினைக்கிறேன்
எழுகின்ற பொழுதெல்லாம் எளிதென்றே நினைக்கிறேன்
புல்லென்று நினைப்போர்க்கு பலம்காட்ட நினைக்கிறேன்
சொல்லொன்றும் சொல்லாமல் செயலாற்ற நினைக்கிறேன்

தடைமீறி நடக்கின்ற நதியாக நினைக்கிறேன்
விடைமீறி நிற்கின்ற புதிராக நினைக்கிறேன்
வருவது எதுவாகினும் எதிர்கொள்ள நினைக்கிறேன்
பெறுவது எதுவாகினும் பகிர்ந்துண்ண நினைக்கிறேன்

உற்றதுயர் தொடர்ந்தாலும் முன்னேற உழைக்கிறேன்
உழைக்கின்ற முனைப்பில்தான் துயரங்கள் கடக்கிறேன்
மற்றதுயர் வரும்வரைக்கும் சூழுந்துயர் மடியிலே
சற்றையர்ந்து தூங்கவே களைப்பினால் நினைக்கிறேன்

பெற்றவர் மனம்போல வாழவே நினைக்கிறேன்
மற்றவர் பார்வைக்கு மலிவாக இருக்கிறேன்
கற்றதமிழ் சுவையள்ளி ஊருக்கு உரைக்கிறேன்
மற்றவர்கள் அதையுணரா பேதைமையை வெறுக்கிறேன்!!

மண்படைத்து மண்மீது மேவும்பல உயிர்ப்படைத்து
பெண்படைத்து பெண்வழியே பெறும்சுகம் பலபடைத்து
கண்படைத்து கண்வழியுணரும் கருத்தும் படைத்தான்
கண்படைத்து கருத்தடைத்த கயவனை தேடுகிறேன் !!


எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (15-May-19, 1:25 pm)
பார்வை : 87

மேலே