அன்பே யோகம் - ------------------தா நீலகண்ட பிள்ளை

அன்பே யோகம் - தா. நீலகண்ட பிள்ளை;
பக்.150; ரூ.80; செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ. நகர், சிட்லபாக்கம், சென்னை - 600 064.

18 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. "பக்தி இலக்கியங்கள் மனிதர்களை செழுமைப்படுத்தத் தோன்றியவை' என்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் "பா'க்களோடு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். திருமூலர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், புனிதவதியார், கம்பன் ஆகியோரின் பாடல்களில் பிறரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்கிற கருத்தே மேலோங்கியிருந்தது என்பதை உணர்த்தும் ஆசிரியர் "அன்பே யோகம்' என்று நூலுக்கும் தலைப்பிட்டது பொருத்தமானதே.

இந்த இலக்கியங்களின் ஆசிரியர்களைப் பற்றியும், ஆழ்வார்களின் வரலாறையும், சித்தர்கள் குறித்த தகவல்களையும் ரசிக்கும்விதமாக எழுதியிருப்பதைப் பாராட்டலாம்.

உதாரணத்திற்கு இந்நூலில் ,
"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பெரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே'

என்ற திருமூலரின் பாடலின் மூலம் அன்பே சிவம் என்பதை எளிய நடையில் விளக்கியுள்ளார்.

""வாசி என்ற மூச்சினை அடக்கி யோக சித்தியால் உடலில் உள்ள மூலாதாரம் நாபி, இதயம் இரைப்பையின் நடு, கழுத்து, தலை, உச்சி என்ற ஆறு இடங்களில் மனதை நிலை நிறுத்தி குண்டலினியை எழுப்பி மேலேறச் செய்து சித்தி பெற்றவரே சித்தர்'' போன்ற அரிய, பயனுள்ள தகவல்களை இந்நூலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

நன்றி :- தினமணி, 24-06-2013

எழுதியவர் : தா. நீலகண்ட பிள்ளை; (22-May-19, 7:39 pm)
பார்வை : 13

மேலே