முதுமொழிக் காஞ்சி 79
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பாரம்வெய் யோர்க்குப் பாத்தூண் எளிது. 9
- எளிய பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், பிறர் பாரத்தைத் தாங்குதலை விரும்புவார்க்குப் பகுத்துண்டல் எளிது.
'பெருமையை விரும்பினார்க்கு' என்றும் பிரதி பேதம் உண்டு.
பதவுரை: பாத்தூண் - தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்களுக்குப் பகுத்துண்ணுதல்
பாத்தூண் (பாத்து + ஊண். பாத்து - பகுத்து).
'தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்' - நன்னெறி.
ஆதலால் பகுத்துண்டல் அவர்க்கு எளிதென்பதாம்.