எது ஆத்திகம் எது நாத்திகம்
எது ஆத்திகம் ?
எது நாத்திகம் ?
என்று பல பேருக்குப் புரியவில்லை.
நெற்றியில் குங்குமம் வைத்தால் ஆத்திகவாதி,
வைக்காவிட்டால் நாத்திகவாதி என்று அப்பாவியாகப் பலரும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதாவது குங்குமத்தில்தான் கடவுள் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.
குங்குமம்,விபூதி
வச்சா என்ன ? வைக்காட்டி என்ன ?
ஆன்மிகம் என்பது குங்குமத்திலா இருக்கிறது ?
ஆன்மிகம் வேறு. இதுபோன்ற சடங்குகள் வேறு.
இதைப் புரிந்து கொள்ளாதவர்களே ஆன்மிகத்தையும் குங்குமத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.
வள்ளலாரை விடவா ஒரு ஆன்மிகவாதி இருந்துவிட முடியும் ?
வள்ளலார் ஒருபோதும் விபூதியோ குங்குமமோ அணிந்ததில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆன்மிகம் என்பதோ நாத்திகம் என்பதோ விபூதி குங்குமம் அணிவதிலோ அணியாமல் இருப்பதிலோ இல்லை.
பொட்டு வச்சா ஆன்மிகவாதி என்று நம்புவதால்தான் சாமியார் என்று பல கேடிகள் பொட்டு வைத்துக்கொண்டு, காவி உடுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.
கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் பொட்டு வைக்கலாம், வைக்காமலும் இருக்கலாம்.
கடவுள் இருக்கிறது என்று சொல்பவர்களும் பொட்டு வைக்கலாம். வைக்காமலும் இருக்கலாம்.
ஏனெனில் குங்குமம் என்பது ஒரு இயற்கைப் பொருள். மரச்சாந்து.
கடவுளே இல்லை என்கிறபோது குங்குமம் மட்டும் கடவுளுக்கு உரியாதாகச் சொன்னால் எப்படி ஏற்பது ? என்பது நாத்திகவாதிகளின் கேள்வி.
ஆன்மிகம் என்பது குங்குமத்தில் இல்லை. நாத்திகம் என்பது குங்குமம் வைக்காத வெறும் நெற்றியிலும் இல்லை.
எனவே ஒருவர் விரும்பினால் வைத்துக்கொள்ளலாம், விரும்பாவிட்டால் வைக்காமலும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம் சார்ந்தது.
கடவுள் என்பது இயற்கைதான் என்பதை உணரவில்லையென்றால் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் ஆன்மிகவாதிகளாக இருக்க முடியாது.
இதனைப் புரிந்து கொண்டால் ஆத்திகமென்பதே நாத்திகமாய் இருப்பதையும் நாத்திகம் என்பதே ஆத்திகமாய் இருப்பதையும் உணரமுடியும்.
இதனை உணர்ந்து கொள்ளாதவர்களே
ஆத்திகமென்றும் நாத்திகமென்றும் வேறுவேறாக நினைத்துப் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
********