புயலை அருந்தும் இலைகள்
புண்படுத்திய இந்த நாளை
கருணையோடும் மன்னிப்போம்.
நீயும் உன்னைத்தவிர
நானும் பேசாது கடந்த இந்நாள்.
தாளில் கொட்டப்பட்ட
வார்த்தைகளில் எங்கும்
உன் சிக்கலும் மென்மையான
பைத்திய மனப்பாங்கும்
ஓடி ஓடி அலறுகிறது.
முன்பின்னாய் நீ நகர்த்தி
பின் தகர்த்து தளர்த்திய
எந்த சொல்லும் உன்னை
விஞ்சிக்கொண்டே இருக்கிறது.
தோல்வியின் நயவஞ்சகமான
இறுதித்திருப்பத்திலும் நீயே
வெற்றிக்கு பலியாகிறாய்.
நீ சொற்களில் குளித்தும் உண்டும்
வரிகளின் ஊடாய் காளியின்
ஒற்றனைப்போல் செருக்குடன்
திரிந்து கொண்டிருந்தாலும்...
உன் ஒற்றைக்கவிதையை
தூக்கிப்போகும் ராஜாளி முன்
கதறி அழுவதை விடவும்
வேறொன்றும் செய்வதில்லை.
அடுத்த நாளின் மந்தையில்
இன்னொரு ஓரத்தில் மீண்டும்
நானும் நீயும் பேசாது...