ஸ்ரீ உவேசாமிநாதமுனிகள்



சங்க இலக்கியம் காலம் பொ.மு. 500 முதல் பொ.யு. 200 முடிய இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். நாம் அந்த ஆராய்ச்சிக்குள் போகவேண்டாம். தமிழ் மற்றும் சங்க இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று தெரிந்துகொண்டால் போதுமானது.

திருமங்கை ஆழ்வார் திருநெடுந்தாண்டகத்தில் “செந்திறத்த தமிழ் ஓசை வடசொல் ஆகி” என்கிறார். செம்மை மொழியாக விளங்கும் தமிழின் ஓசையாகவும், வட மொழிச் சொற்களாகவும் எம்பெருமான் விளங்குகிறான் என்கிறார் ஆழ்வார். வட மொழியையும் தமிழையும் பல காலமாக ஒன்றாகவே சனாதன தர்மத்தில் கருதியிருக்கிறார்கள். இன்று உ.வே என்று ஸ்ரீவைஷ்ணவப் பெரியவர்கள் பெயர்களுக்கு முன் போட்டுக்கொள்வது உபய வேதங்கள் தமிழ் மற்றும் வடமொழியைக் குறிக்கும்.

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகம் - தமிழ் எங்கிருந்து எங்கே பேசப்பட்டது என்று தொல்காப்பியம் உரை சொல்லுகிறது.

இனிமையும், நீர்மையும் தமிழ் என்று கூறலாம். தமிழைத் தெய்வ மொழியாக உயர்த்தி உணர்ச்சிப் பெருக்குடன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடிய பாசுரங்கள் வாய்மொழியாகப் பரவின. மரபு வழி உரைகளும் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாகப் பரவின. பக்தி இலக்கியம் என்பது சங்க நூல்களில் ஒரு வகை என்றே கொள்ளவேண்டும்.

இந்த முன்னுரையின் ஆரம்பத்தில் ‘க’ என்ற எழுத்தைப் பார்த்திருப்பீர்கள். இது தமிழ் எண் 1ஐக் குறிக்கும். இன்று இதை யாரும் உபயோகிப்பதில்லை. அதுபோல தமிழில் செய்யப்பட்ட பல அருமையான விஷயங்கள் காலப்போக்கில் மறைந்து போயின.



பொ.யு. 823ல், மின்சாரம், இயந்திரங்கள் இல்லாத காலத்தில் சோழர்கள் ஆட்சி செய்த கடலூர் பக்கம், வீர நாராயண ஏரிக்கு அருகில் காட்டுமன்னார் கோயில் என்ற கிராமத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள் அவதரித்தார். இவருடைய இயற்பெயர் ஸ்ரீரங்கநாதன். சுருக்கமாக நாதமுனிகள் என்று அழைக்கப்பட்டார். இளம் வயதில் யோகம், இசை என்று எல்லாவற்றிலும் தேர்ச்சிபெற்றவராக இருந்தார்.

தன் தகப்பனார் ஈச்வர பட்டாழ்வாருடன் குடும்பமாக வடநாட்டு யாத்திரைக்குப் புறப்பட்டார். மதுரா, சாளக்கிராமம், துவாரகை, அயோத்தி முதலான இடங்களுக்குச் சென்று சேவித்துவிட்டு யமுனைக் கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் யமுனைத் துறைவன் என்ற பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருந்தார். சில வருடங்கள் கழித்து...

பொயு 1855ல் உ.வே சாமிநாதையர் பிறந்தபோது இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். தமிழகத்தில் இரயில் வண்டிகள் ஓடத் தொடங்காத காலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் உத்தானபுரத்துக்கு அருகிலுள்ள சூரியமூலை எனும் ஊரில் இசையறிஞர் வேங்கடசுப்பையர், சரசுவதி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சாமிநாதன். செல்லமாக ‘சாமா’ என்று அழைப்பார்கள். தமிழ் மற்றும் வடமொழியில் நூல்களைப் படித்தார். அன்றைய காலலட்டத்தில் கிராமப் பள்ளிக்கூடங்களில் தமிழ் எண்களே வழக்கமாக இருந்தன. இவற்றை உவே.சா இளமையிலேயே கற்றுக் கொண்டார். பாடம் கற்றுக்கொண்ட விதத்தை உவேசா இப்படிச் சொல்லுகிறார்

“கிருஷ்ண வாத்தியார் கிழவர். அவரிடம் பல பிள்ளைகள் படித்தார்கள். அவர் தமிழ் இலக்கியங்களில் நல்ல பழக்கமுடையவர். ஆத்திசூடி, மூதுரை, மணவாள நாராயண சதகம் முதலிய சதகங்கள், இரத்தினசபாபதி மாலை, நாலடியார், குறள் முதலியவற்றையும் கணக்கையும் அவரிடம் கற்றேன். நாலடியார் குறளென்னும் நூல்கள் அவ்வளவு இளம்பிராயத்தில் நன்றாகப் பொருளறிந்து கற்பது சாத்தியமன்று. ஆயினும் அவற்றை மனப்பாடம் செய்யும்படி கிருஷ்ண வாத்தியார் மாணாக்கர்களை வற்புறுத்துவார். எழுத்தாணியால் ஏடுகளில் எழுதியும் கறடா (மட்டி)க் காகிதத்தில் கொறுக்காந் தட்டைப் பேனாவால் எழுதியும் திருத்தமாக எழுதிக் கற்றுக்கொண்டோம். கையெழுத்து நன்றாக இராவிட்டால் குண்டெழுத்தாணியால் கட்டை விரலில் உபாத்தியாயர் அடிப்பார். அவரிடம் படித்தவர் யாவரும் எழுதுவதில் நல்ல பழக்கத்தைப் பெற்றனர்.

அவரிடம் படித்த நூல்களெல்லாம் எனக்கு மனப்பாடமாயின. வீட்டிலும் என் தந்தையார் தினந்தோறும் பாடங்களைப் பற்றி விசாரிப்பார். நாளுக்கு ஐந்து செய்யுட்கள் பாடம் பண்ணி அவரிடம் ஒப்பிக்க வேண்டும். இல்லையெனில் அவரது தண்டனைக்கு உட்பட நேரும்.”

ஏழாம் வயதில் தமிழ் மீது அவருக்கு மோகம் வந்தது...



ஒருநாள் காட்டுமன்னார் பெருமாள் ‘வீரநாராயணபுரத்துக்கு வாரும்’ என்று கனவில் சொல்ல, நாதமுனிகளும் யமுனைத் துறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு பல திவ்ய தேசங்களைச் சேவித்துவிட்டு மீண்டும் வீரநாராயணபுரத்துக்குக் குடும்பத்துடன் வந்து சேர்ந்தார்.

அங்கே இருக்கும் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கும்போது ஒரு நாள் மேல்நாட்டிலிருந்து (மேல்கோட்டை) சில ஸ்ரீவைஷ்ணவர்கள் மன்னார் கோயிலுக்கு வந்து பெருமாள் முன்பு நம்மாழ்வார் பாசுரமான ‘ஆராவமுதே...’ என்கிற திருவாய்மொழியின் பாசுரங்களைச் சேவிக்க (பாட) செந்தமிழில் தேன் போன்ற அர்த்தங்களை நாதமுனிகள் சுவைக்கத் தொடங்குகிறார். ஆனால் வந்தவர்கள் பத்து பாசுரங்கள் பாடிய பிறகு ‘ஆயிரத்துள் இப்பத்தும்’ என்று முடிக்க, நாதமுனிகள் ஆழ்வாரின் தித்திக்கும் தமிழ்ப் பாசுரத்துக்கு அடிமையாகி “ஆயிரத்துள் இப்பத்தும் என்கிறீர்களே அப்படியானால் இப்பிரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க...

உ.வே.சாமிநாதையர் ஏழாம் வகுப்பில் சடகோபையங்காரிடம் தமிழ் கற்றார். அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்...

“எனக்குத் தமிழில் சுவை உண்டாகும் வண்ணம் கற்பித்த முதற் குரு சடகோபையங்காரே. பொம்மை (பாவை)களைக் காட்டிக் குழந்தைகளைக் கவர்வது போலத் தமிழ்ச் செய்யுட்களின் நயத்தை எடுத்துக்காட்டி என் உள்ளத்துக்குள் அந்த இளம்பருவத்தில் தமிழ் விதையை விதைத்தவர் அவரே.”

சிறுது சிறிதாக ஊட்டிய தமிழ் அமுதை, சுவையை அவர் வாழ்நாள் முழுவதும் தேட வைத்தது. உ.வே.சா கூட ஒரு காலத்தில் எட்டுத்தொகையை ஏட்டுத்தொகை என்றுதான் படித்துள்ளார் என்று நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது. ஐம்பெரும்காப்பியங்கள் என்று தெரியுமே தவிர அக்காப்பியங்கள் என்னென்ன என்று தெரியாது. அக்காலத்தில் கோயில்களிலும், மடங்களிலும், சிலரின் வீடுகளிலும் ஓலைச்சுவடிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் அவை முடங்கிக் கிடந்தன.



“எங்களுக்கு இந்த பத்து பாசுரங்கள் மட்டும் தான் தெரியும்.. வழி வழியாக இதை நாங்கள் சொல்லுகிறோம்.”

வருத்தத்துடன் நாதமுனிகள் “அந்தப் பத்து பாசுரங்களையும் மீண்டும் ஒரு முறை சேவியுங்கள்” என்று விண்ணப்பிக்க அவர்கள்,

ஆரா-அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*
நீராய் அலைந்து, கரைய உருக்குகின்ற நெடுமாலே!*
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை*
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே!

என்று ஆரம்பித்து

...

வாரா அருவாய் வரும் என் மாயா! மாயா மூர்த்தியாய்!*
ஆரா அமுதாய்! அடியேன் ஆவி அகமே தித்திப்பாய்!*
தீரா வினைகள் தீர என்னை ஆண்டாய்! திருக்குடந்தை
ஊராய்!* உனக்கு ஆட்பட்டும் அடியேன் இன்னம் உழல்வேனோ?

*உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்*
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்

என்று முடிக்க முதல் பாசுரத்தில் ‘திருகுடந்தை’ என்ற சொல்லும் ‘குருகூர் சடகோபன்’ என்ற சொல்லும் அவர் நெஞ்சில் பசுமரத்தாணி போலப் பதிந்தன. திருகுடந்தைக்கு என்ற கும்பகோணத்துக்குப் புறப்பட்டார்.

1887ல் சீவகசிந்தாமணியை ஆராய்ந்தபோது அதில் பல மேற்கோள்கள் கிடைத்தன. எல்லாம் பல தமிழ் நூல்கள். பத்துப்பாட்டு என்ற ஒரு நூல் உண்டு என்று அப்போதுதான் உ.வே.சா அவர்களுக்குத் தெரிந்தது. அதைப் பற்றி ஆராய வேண்டும் என்ற ஆவல் உண்டாகியது. கும்பகோணத்திலிருந்து பரம்பரை வித்துவான்களுடைய வீடுகளைத் தேடி திருநெல்வேலி பயணத்துக்குத் தயாரானார். தந்தையிடம் சொன்னதற்கு “சிரவணத்துக்கு இங்கே இருக்க வேண்டும்... இப்பொழுது போக வேண்டாம்” என்று தடை போட்டார். சிரவணத்தைக் காட்டிலும் பத்துப்பாட்டு அவருக்குப் பெரிதாக இருந்தமையால் தந்தையிடம் தக்க சமாதானம் சொல்லி திருநெல்வேலிக்குப் புறப்பட்டார்.



இந்தக் காலத்தில் இருப்பது போல, உணவு, தங்கும் இடம், வண்டிகள் என்ற எந்த வசதிகளும் இல்லாத, ஏன் சாலைகள் கூட இல்லாத, காடும் மேடுகளும் கடந்து கும்பகோணம் வந்த ஸ்ரீமந் நாதமுனிகள் அங்கே திருகுடந்தை கோயிலுக்குச் சென்று ஆராவமுதனைச் சேவித்து அங்குள்ளவர்களிடம் இந்தப் பத்துப் பாசுரங்களைப் பாடிக்காட்டி, மீதம் உள்ள 990 பாசுரம் இங்கே யாருக்காவது தெரியுமா என்று கேட்க, அவர்கள் “எங்களுக்கும் இந்தப் பத்து பாசுரம்தான் தெரியும்” என்றபோது நாதமுனிகள் ‘குருகூர் சடகோபன்’ என்ற வார்த்தையில் உள்ள திருக்குருகூர் நோக்கி நடக்கத் தொடங்கினார்... பல நாட்கள் நடந்த பின் அவர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் திருநகரிக்கு வந்து சேர்ந்தார்.

இரவு எட்டு மணிக்கு ஒரு தகர பெட்டியுடன் உ.வே.சா ரெயில்வே ஸ்டேஷனுக்கு ஒற்றை மாட்டுவண்டியில் வண்டிக்காரனுடன் பேசிக்கொண்டே சென்றார். போகும் வழியில் வண்டி எதன்மேலோ மோதிக் குடைசாய்ந்து அவர் மீது பெட்டி விழ.. தொடர்ந்து என்ன செய்வது என்று யோசித்துவிட்டு ஸ்டேஷன் நோக்கி நடக்கத் தொடங்கினார். நல்லவேளையாக அங்கே புகைவண்டி கிளம்பாமல் நின்றுகொண்டிருக்க அதில் ஏறினார்.

நடுராத்திரி தஞ்சாவூர் வரும்போது ஒரு காட்டில் வண்டி நிற்க, ரெயில்வே அதிகாரிகள் உ.வே.சா அவர்களைத் தூக்கக் கலக்கத்தில் எழுப்பி, முன்பிருந்த வண்டியில் தீப்பிடித்துவிட்டது, அதனால் வண்டிகளைக் கழற்றிவிட வேண்டும்.. வேறு வண்டியில் ஏறிக்கொள்ளச் சொல்ல... மறுநாள் காலை திருநெல்வேலிக்கு வந்து சேர்ந்தார்.



ஆழ்வார் திருநகரி வந்த ஸ்ரீமந் நாதமுனிகள் கோயிலுக்குச் சென்று பொலிந்த நின்றபிறானையும் அங்கே இருக்கும் பெரியோர்களைச் சேவித்து திருவாய்மொழி ஆயிரம் பாசுரங்கள் பற்றி விசாரிக்க,

“கேள்விப்பட்டிருக்கிறோம்... ஆனால் எங்களுக்குத் தெரியாது...” என்றார்கள்.

“அடடா... அடியேன் இதைத் தேடிக்கொண்டுதான் இங்கே வந்தேன்..”

“இங்கே நம்மாழ்வார் (சடகோபன்) சிஷ்யர் மதுரகவியாரின் வம்சத்தவர் ஒருவர் இருக்கிறார்.. நீங்கள் எதற்கும் அவரைக் கேட்டுப்பாருங்கள்.”

“யார் அவர்... எங்கே இருக்கிறார்..?”

“அவர் திருநாமம் பராங்குசதாஸர்... “ என்று அவர் இருக்கும் இடத்தைக் காண்பிக்க, நாதமுனிகள் பராங்குசதாஸரைத் தேடிச் சென்றார்.

திருநெல்வேலியில் கனகசபை முதலியார் ஸ்ப்ஜட்ஜாக இருந்தார். அவர் உ.வே.சா அவர்களுக்குப் பழக்கமானவர். ஏடு தேடி வரும் விஷயத்தை அவருக்குக் கடிதம் மூலம் முன்பே அனுப்பியிருந்தார் உவேசா. அவர் வீட்டை அடைந்தபோது “உங்களுக்கு இப்போதுதான் ஒரு கடிதம் எழுதி தபாலுக்கு அனுப்ப இருந்தேன்... உங்களிடம் சொல்ல வேண்டியவற்றை இந்தக் கடித்ததில் எழுதியிருக்கிறேன்” என்று கடித்ததைக் கொடுக்க, அதில்

“நான் தங்களுக்கு வாக்களித்தபடி ஏட்டுச் சுவடிகள் விஷயத்தில் உதவி செய்ய இயலாதவனாக இருக்கின்றேன். இளமை முதற்கொண்டு என்னுடைய நண்பராயுள்ள ஸ்ரீ.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குச் சில ஏட்டுச் சுவடிகள் வேண்டுமென்று எழுதியிருந்தார்கள். நான் தேடித் தருவதாக அவர்களுக்கு வாக்களித்திருக்கிறேன். தங்களுக்கு வேண்டியனவாகச் சொன்ன புஸ்தகத்தையே அவர்களும் கேட்டிருக்கிறார்கள். அதனால் தங்களுக்கு உதவி செய்ய இயலாதென்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பக்கங்களில் வந்து தேடிச் சிரமப்படவேண்டாம்.”

இதைப் படித்த உ.வே.சா முதலியாரை நோக்கி “மெத்த ஸந்தோஷம். நீங்கள் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தமையால் உங்களைத் தேடி வந்தேன்... இந்தப் பக்கங்களில் எனக்குப் பழக்கமுள்ள பிரபுக்களும், வித்துவான்களும் இருக்கின்றார்கள். அவர்கள் மிக்க அன்போடு எனக்கு உதவி செய்வார்கள். ஆதலால் நான் போய் வருகிறேன்” என்று கைலாசபுரத்தில் இருந்த வக்கீல் அன்பர் ஸ்ரீ.ஏ.கிருஷ்ணசாமி ஐயர் வீட்டுக்குச் சென்றார். அவர் “நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். என்னுடைய நண்பரும் வக்கீலுமாகிய சுப்பராய முதலியாரென்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கின்றார். அவருக்கு ஒரு கடிதம் எழுதித் தருகின்றேன்” என்று அவர் உவேசா அவர்களை ஆழ்வார் திருநகரிக்குச் அழைத்துச் சென்றார். அங்கே...



நாதமுனிகள் பராங்குசதாஸரை தேடிச் சென்று அவரிடம் திருவாய்மொழி பற்றி விசாரிக்க, “திருவாய்மொழியும், மற்ற பிரபந்தங்களும் நீண்ட காலத்துக்கு முன்பே மறைந்துவிட்டன. எங்களுடைய பரமாசாரியாரான ஸ்ரீமதுரகவிகள் நம்மாழ்வார் குறித்து ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பதினோரு பாசுரங்களை அருளியுள்ளார். அதுதான் எங்களுக்குத் தெரியும்.”

இன்னொரு விஷயம் என்று பராங்குசதாஸர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது...

உ.வே.சா லஷ்மண கவிராயரென்று ஒருவருடைய வீட்டிற்குச் சென்று பார்த்தபோது ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன. பல பழைய நூல்களும் இலக்கணங்களும் பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. எல்லாவற்றையும் பிரித்து பிரித்துப் பார்த்தபோது தேடி வந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை.

லஷ்மண கவிராயர் “எங்கள் வீட்டில் அளவற்ற ஏடுகள் இருந்தன. எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவியார் தம் புருஷர் இறந்தவுடன் சொந்த ஊருக்குப் போகும்போது இங்கிருந்து சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்” என்றார். “பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு போயிருக்க வேண்டும்” என்றார். அவர் மேலும் “ஒரு விஷயம் மறந்துவிட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார் இருக்கிறார். அவருக்கு எனக்கும் இப்பொழுது சண்டை. என்னுடைய வீட்டிலிருந்து வேலைக்காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்துவிட்டான்.அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம். ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்திவிட்டேன்” என்றார்.

உ.வே.சா “எனக்காக உங்கள் மாமனாரிடம் விரோதம் பாராட்டாமல், தமிழுக்காகக் கேட்டு வாங்கி வாருங்கள்” என்றபோது, கவிராயரும் “சரி” என்று ஒப்புக்கொண்டார். இரவு அவர் வீட்டில் திண்ணையில் சோகமாக உ.வே.சா உட்கார்ந்து, சில ஸ்ரீவைஷ்ணவர்கள் சொன்ன பழைய உரைகளைக் கேட்டுக்கொண்டு இருந்தபோது அவர் மனம் அதில் ஈடுபட முடியவில்லை. அவர் மனம் முழுக்க பத்துப்பாட்டு அகப்படவில்லையே என்ற கவலையில் இருந்தது. அந்த சமயம்...



கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற பாசுரத்தை நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரத்துக்கு அடியில் அவரை தியானித்து, பன்னிரண்டாயிரம் முறை சொன்னால் நம்மாழ்வார் உங்கள் முன் தோன்றுவார், அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என்றார். உடனே யோகத்தில் வல்லவரான நாதமுனிகள் சடகோபனை தியானித்து பாசுரங்களை பன்னிரண்டாயிரம் முறை சேவித்து (சொல்லி) முடித்தார். அப்போது...

திருவீதியில் பெருமாளும் நம்மாழ்வாரும் உற்சவத்துக்கு எழுந்தருளியபோது உ.வேசா அவர்கள், பெருமாள், நம்மாழ்வாரை தரிசனம் செய்து இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தை தரிசித்தேன்; அவரைப் பார்த்து “ஸ்வாமி! வேதம் தமிழ் செய்தவரென்று தேவரீரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூல் ஒன்றைத் தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன். தமிழுக்குப் பெருமையருளும் தேவரீருக்கு நான் பட்ட சிரமம் தெரியாததன்றே! நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா என்று சொல்லிப் பிரார்த்தித்தேன். உள்ளம் அயர்ந்து போய், ‘இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை’ என்ற முடிவிற்கு வந்தமையினால் இங்கனம் பிராத்தனை செய்தேன்.

பெருமாளும் ஆழ்வாரும் கடந்து செல்ல நிலா ஒளி நன்றாக வீசியது. அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக்கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார். கோயில் பிரசாதம் என்று நினைத்தேன். ஆனால்...



ஸ்ரீமந் நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் காட்சி தந்து “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, அதற்கு நாதமுனிகள் “திருவாய்மொழி முதலிய பிரபந்தங்கள் வேண்டும்” என்று கேட்க, ஆழ்வாரும் அவருக்கு “தந்தோம்” என்று திருவாய்மொழி மட்டும் அல்லாமல் மற்ற ஆழ்வார்களின் அருளிசெயல்களையும் அதன் அர்த்தங்களையும் அவருக்குத் தந்தருளினார். அதை நாதமுனிகள் தொகுத்து, இசை அமைத்து இன்றும் ஸ்ரீவைஷ்ணவக் கோயில்களிலும், இல்லங்களிலும் பிரபந்தம் சேவிக்கப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் ஸ்ரீமந் நாதமுனிகள்.

கவிராயர் “இந்த புஸ்தகத்தைப் பாருங்கள். இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது; பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்லி வாங்கிவந்தேன்” என்று கூறி, மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார்.

உ.வேசா அதனைப் பிடுங்கிப் பார்த்தபோது, நிலாவின் ஒளியில் சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் கண்ணில் பட, அவருக்கு உண்டான சந்தோஷத்தை விவரிக்க வேண்டுமா? அன்றிரவு தூக்கம் இல்லாமல் மறுநாள் காலையில் திருக்கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து நன்றியைக் கூறி, மேலும் தான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலமாக செய்தருள வேண்டும் என்று பிராத்தித்துவிட்டு அவர் பயணத்தைத் தொடர்ந்தார். இன்று பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று நாம் படிக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் இந்த தமிழ்த் தாத்தாதான்.



உதவிய நூல்கள்:
நிலவில் மலர்ந்த முல்லை,
என் சரித்திரம்,
சுவடிப்பதிப்பின் முன்னோடிகள்,
ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரம் நூல்கள்.

- சுஜாதா தேசிகன்
27.02.2019
சுஜாதா நினைவு தினம்

நன்றி: வலம் பிப்ரவரி 2019 பிரசுரம்+++++++
=======================================================================================================================
தினசரி தேதி கிழிக்கும் காலண்டரால் என்ன பயன் ?

TUESDAY, FEBRUARY 19, 2019


தமிழ் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் திரு உ.வே.சாமிநாதையர் பற்றி பள்ளியில் எங்கோ படித்த ஞாபகம். ஆனால் அவரைப் பற்றி விரிவாகத் தமிழ் பாட நூல்களில் எங்கும் கிடையாது. ( இப்போது இருக்கிறதா என்று தெரியாது).
சங்க நூல்களின் ஓலைச்சுவடிகளைத் தேடி தன் வாழ்கையைக் கழித்தார் என்று மட்டும் நம் எல்லோருக்கும் தெரியும். உ.வே.சா பற்றிப் பத்து வரிகள் எழுதுங்கள் என்றால் நிச்சயம் பலருக்கு அது ஒரு சவாலகவே இருக்கும்.
சில மாதங்கள் முன் எங்கோ ஒர் ஓலை சுவடியை அவர் தேடிய அனுபவம் பற்றி யாரோ சொல்ல, அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். தேடும் போது உலகத் தமிழ் மாநாடு புத்தகம் ஒன்று கிடைத்தது. அதில் தமிழ்த் தலைவன், தமிழரைத் தலை நிமித்திய தலைவன் என்று வரிசையாகத் திராவிடத் தலைவர்களின் பெயர்களும் படங்களும் முகப்பில் இருந்தது ஆனால் உ.வே.சா படமோ அல்லது அவரைப் பற்றி ஸ்டாம்ப் சைசுக்கு கட்டுரையோ சாஸ்திரத்துக்குக் கூட அதில் இல்லை. காரணம் நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.
தேடுவதை தொடர்ந்த போது இணையத்தில் அவர் எழுத்துகள் பல கிடைத்தது. ஒரு விஷயம் பலரிடம் போகும் போது முதலில் சொன்ன விஷயம் மாறிவிடும். அது போலத் தான் இணையத்தில் கிடைக்கும் உ.வே.சா கட்டுரைகளும். காலச்சுவடு உ.வே.சா எழுதிய நூல்களையும் பதிப்பித்துள்ளார்கள், இது சிறந்த பதிப்பாக இருக்கிறது.
உ.வே.சா எழுத்தை படிக்கும் போது நூறு வருடம் முன் எழுதிய எழுத்து போல அல்லாமல், இன்று நாம் படிக்கும் எளிமையான உரைநடையில் அலங்காரங்கள் எதுவும் இல்லாமல் சிக்கரி கலக்காத காபி போலச் சுவையாக இருக்கிறது.
உ.வே.சாமிநாதையரின் ஆசான் மீனாட்சிசுந்திரம் பிள்ளை. அவரது குருபக்தி விசேஷமானது. சாமிநாதையர் பிள்ளையவர்களின் முடிவு வரை அவர் பக்கத்திலேயே இருந்திருக்கிறார். அவரது குரு மரணப்படுக்கையில் இருக்கும் போது நள்ளிரவுக்கு மேல் நினைவிழுந்த பிள்ளையவர்களின் பக்கத்திலேயே கண்விழித்திருக்கிறார். ஆசிரியர் கண்விழித்து ஏதோ சொல்ல வாயெடுத்திருக்கிறார். அது திருவாசகமென்று புரிந்து கொண்டு சாமிநாதையர் திருவாசகத்தில் அடைக்கலப் பகுதியை வாசித்தார். பிள்ளையைத் தமது மார்பில் தாங்கிக் கொண்டார் அவர் நெற்றியில் விபுதி இடப்பட்டது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது.
இதைப் படித்த போது ஆனந்த விகடனில் சுஜாதா பற்றி நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது
“அவருடன் 27ம் தேதி மாலை அவரது கடைசித் தருணங்களில் இருந்தபோது, அருகில் அமர்ந்து அவருக்குப் பிடித்த பாசுரங்களைப் படிக்கத் தொடங்கினேன். படிக்கத் தொடங்கிய சமயம், உயிர் அவரைவிட்டு வேகமாகப் பிரிந்துகொண்டு இருந்தது. உயிர் பிரிந்தபோது படித்தது, 'சிற்றஞ் சிறுகாலே...' என்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம். ஒரு தீவிர சுஜாதா ரசிகனாக இதுதான் அவருக்கு என்னால் கடைசியில் செய்ய முடிந்தது.”
நான் தேடி சென்ற கட்டுரை கிடைத்து, அதைப் படித்த போது இன்னொரு ஆச்சரியம் காத்துக்கொண்டு இருந்தது. அதை ஒரு கட்டுரையாக இந்த மாதம் வலம் பத்திரிக்கையில் எழுதியிருக்கிறேன். மனதுக்கு நிறைவான கட்டுரை.
- சுஜாதா தேசிகன்
19.2.2019
டெய்லி காலண்டர் கிழிக்கும் போது
உ.வே.சா பிறந்த தினம் என்று தெரிந்துக்கொண்ட நாள்.
Posted by தேசிக
-------------
FRIDAY, NOVEMBER 23, 2018
திருவரங்க மாலை
சமீபத்தில் ஸ்ரீரங்கம், உறையூர் சென்ற போது சில விஷயத்தைக் கண்டு ரசிக்க முடிந்தது.

கூட்டமே இல்லாத உறையூரில் நம்மாழ்வார் சன்னதியில் சுவரில் இருக்கும் ஓவியங்கள். குறிப்பாக நம்மாழ்வாரிடம் பல திவ்ய தேசத்துப் பெருமாள் ‘நம்மைப் பாடு, நம்மைப் பாடு’ என்று போட்டிப்போட்டுக்கொண்டு வரும் காட்சி.

நம்மைப் பாடு, நம்மைப் பாடு என்று போட்டிப் போடும் பெருமாள்கள் !
நல்ல கூட்டத்தில் க்யூவுல் இருக்கும் போது சில நன்மைகள் ஏற்படுகிறது உதாரணமாகப் பெரிய பெருமாள் சன்னதிக்கு முன் குலசேகரப்படியும், அதற்குப் பக்கம் இருக்கும் திருமணத் தூண்களை பார்த்து ரசிக்க முடிந்தது.
SATURDAY, NOVEMBER 17, 2018
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்

நம்பிள்ளை - பின்பழகராம் பெருமாள் ஜீயருடன் - ஸ்ரீரங்கம்


ஸ்ரீவைஷ்ணவத்தில் மூன்று சொற்களை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா. இந்த மூன்று சொற்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

மேலே படிக்கும் முன் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இந்தக் கட்டுரையில் பல ஆசாரியர்களின் பெயர்கள் வரப் போகிறது அதனால் கொஞ்சம் நிதானமாகப் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
(முடிந்தால் ஒரு பேப்பர் பேனா கொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டு வாருங்கள்)

பிள்ளை என்றால் என்ன ? லோகாசார்யார் என்றால் என்ன ? என்று பார்த்துவிடலாம். அதற்கு சற்றே பின் சென்று நம்பிள்ளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். இங்கேயும் ‘நம்’ என்றால் என்ன ‘பிள்ளை’ என்றால் என்ன என்று பார்க்க வேண்டும் !
-----------------------------
TUESDAY, NOVEMBER 6, 2018
ஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது ?
Image may contain: one or more people


’பேசும் அரங்கன்’ என்பார்கள். இந்த தலைப்பில் ஒரு புத்தகம் கூட வந்திருக்கிறது ( ஸ்ரீ முரளி பட்டர் எழுதியது )

கட்டுரையின் தலைப்புக்கு நேற்று எனக்கு விடை கிடைத்தது !

’அரங்கன் பேசுவாரா ?’ என்று நாத்திகர்கள் போல நாம் பேசினால் பேச மாட்டான். நம் மனது அவனுடன் லயித்துவிட்டது என்றால் அவன் பேசிக்கொண்டே இருப்பான். ’நீ’ நம்ம ஆளு என்று தன்னுடன் சேர்த்துக்கொள்வான்.

ஸ்ரீரங்கத்தில் ‘பெரிய அவசரம்’ பற்றிப் போன செவ்வாய்க்கிழமை அடியேன் எழுதிய சாதாரண ஃபேஸ்புக் பதிவில்

“என்றாவது ஒரு நாள் எனக்கு நம்பெருமாளுடைய ஈரவாடை கைலியைப் பிழிந்த

பிரசாதம் கிடைக்கும் என்று நம்புகிறேன் !” என்று எழுதியது நினைவிருக்கலாம்.

நேற்று (ஞாயிறு) ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். ’காவிரி துலா ஸ்நானம்’ செய்ய கிளம்பு போது ‘அம்மா மண்டபம்’ போகிறீர்களா கீதாபுரம் டிரைப் பண்ணுங்களேன்” என்ற

அட்வைஸை ஏற்றுக்கொண்டு அங்கே ‘டிரை’ பண்ணச் சென்ற போது காவிரியின் ஓசை ‘பொன்னியின் செல்வனின்’ வரும் வர்ணனை போல இருந்தது. வேகமாகத் தடுப்பு அணையில் தப்பி தவறி விழுந்து மீனாகிவிடுவோமோ என்று கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது.

ஸ்நானம் முடித்துக்கொண்டு தாயார் சன்னதிக்குச் சென்ற போது தாயார்

‘கொஞ்சம் கிட்ட தான் வாயேன்’ என்று சேவை சாதித்தாள்.
”இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை நீ ஃபிரீ தானே... ஏகாதசி வேற நம்பெருமாள் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருப்பார், நானே சொன்னேன் என்று சொல்லு,
ஈரவாடை பிரசாதம் கொடுப்பார் வாங்கிண்டு போய்யேன்” என்று சொன்ன மாதிரி இருந்தது.

ஊஞ்சல் மண்டபத்தில் ’பெருமாள் திருமஞ்சனம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்’ என்று சொல்ல ஒரு மணி நேரம் என்ன செய்யலாம் என்று
யோசித்தோம். சரி இருக்கவே இருக்கு பெரிய பெருமாள் ’க்யூ’ என்று அதில் நின்றோம். சரியாக ஒரு மணி நேரம் க்யூவில் கைக்குழந்தைகளையும், பூனையையும் வேடிக்கை பார்த்து ‘இங்கே கோவர்த்தன மலை சிற்பம் ‘ என்று

அமுதன் காட்ட மெல்ல நகர்ந்து துவாரபாலகர்களை சேவித்துவிட்டுக் காயத்திரி மண்டபத்தில் கொஞ்சம் குளுமை ஏற்பட உள்ளே நுழைந்து பெரிய பெருமாளை

சேவித்துவிட்டு, துளசி பிரசாதத்தையும், ‘அட்வான்ஸ்’ தீபாவளி வாழ்த்துக்களையும் சேர்த்து வாங்கிக்கொண்டு வெளியே வரும் போது

நம்பிள்ளை காலட்சேபம் செய்த இடத்தையும், ஸ்ரீவிஷ்வக்சேனர்,

ஸ்ரீரங்க விமானம் என்னும் கோயில் ஆழ்வாரையும் சேவித்துவிட்டு வெளியே வரும் போது மடப்பள்ளி புகை வாசனையைக் கடந்து ஊஞ்சல் மண்டபம் வந்த போது நம்பெருமாள் திருமஞ்சனம் ஆரம்பிக்க ஆயத்தமாக இருந்தார்கள்.

அரையர்கள் அங்கே நம்பெருமாள் முன் வந்து கையாலும் வாயாலும் இசைக்க ‘நாதமுனிகள்’ நினைவு வந்தது. குலசேகர ஆழ்வாரின்

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

என்று அரையர்கள் இசைக்க. நம்பெருமாளைப் பார்ப்பதா இல்லை இவர்களின் இசையை அனுபவிப்பதா என்று தவிப்பு வந்து சேர்ந்தது. ஆழ்ந்து அனுபவித்தால் எங்கே தூக்கம் வந்துவிடுமோ என்று தோன்றியது. அப்படி இருந்தது அரையர்களின் இசை. நிச்சயம் வாழ்நாளில் இதை ஒரு முறை முழுமையாகக் கேட்டுவிடுங்கள்.

நம்பெருமாள், அரையர்கள், குலசேகர ஆழ்வார் என்ற கலவையுடன் அனுபவித்துக்கொண்டு இருந்த போது அந்தக் காட்சியை பார்த்தேன்.
இந்த மாதிரி நமக்கு வாய்க்கவில்லையே என்ற ஏக்கமும், துக்கமும் தொண்டையை அடைத்தது.

‘மன்னுபுகழ் கோசலை’ என்று அரையர் ஆரம்பிக்க. அங்கே கோயிலை சுத்தம் செய்யும் பெண்மணி ஒருவர் கையில் இருந்த துடப்பத்தையும், முறத்தையும் கீழே வைத்துவிட்டு கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டு அரையர்களுடன் தானும் ‘மன்னு புகழை’ சேவிக்க ஆரம்பித்தார். அவள் முகத்தில் அப்படி ஒரு பரவசம்.

நம்பெருமாள் ஏன் எப்போது சிரித்த முகத்துடன் இருக்கிறார் இந்த மாதிரி அரையர்களும், அடியார்களும் அவனை சூழ்ந்து கொண்டு இருப்பதே காரணம்.

கோயிலைச் சுத்தம் செய்யும் கைங்கரியம், கூடவே இந்த மாதிரி நம்பெருமாளைப் பார்த்து ‘தாலேலோ!’ சொல்லும் பாக்கியம் எவ்வளவு பேருக்கு கிடைக்கும் ?

நம்பெருமாள் திருமஞ்சனம் அனுபவித்துவிட்டு, ஈரவாடை பிரசாதத்தை முதல் முறை அனுபவித்துவிட்டுக் கிளம்பினேன். இதே பிரசாதத்தை நம் ஆசாரியர்கள் எல்லோரும் அனுபவித்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒரு வித பூரிப்பு ஏற்படுகிறது!.

நம் ஆசாரியர்களை ‘பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்’ என்பார்கள். நம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமே அது தான். ’சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ மாதிரி புதுசாக எதையும் பேச மாட்டார்கள் நம் பூர்வாசாரியர்கள் என்ன சொன்னார்களோ அதையே தான் திருப்பித் திருப்பி சொல்லுவார்கள். சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

நாம் பார்க்கும் ஸ்ரீரங்கம் உருவானதே ஒரு கிளியால் தானே ! சுருக்கமாக அந்தக் கதை :

ஸ்ரீரங்கம் கோவில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிலிருந்து வெளிப்பட்டுத் தோன்றியது. அதற்குப் பிரம்மா நித்திய பூஜை செய்யச் சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இக்ஷ்வாகு, இந்த விமானத்தை வழிபடத் தனது தலைநகரமாகிய அயோத்திக்குக் கொண்டுசென்றான். அதே குலத்தில் வந்த இராமர் இந்த விமானத்தைத் தனது பட்டாபிஷேகத்துக்காக இலங்கையிலிருந்து வந்திருந்த விபீஷணனுக்குப் பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷண ஆழ்வார் தனது தலையின்மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரி ஆற்றின் கரையை அடைந்தார். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினார். பின்னர் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்த போது; எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை; அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினார். ரெங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான், ‘தென்திசை இலங்கை நோக்கி’ பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றிக் கோவில் எழுப்பி வழிபாடு செய்தான்

தர்மவர்ம சோழன் கட்டிய கோவில், காவிரியில் வந்த வெள்ளப்பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. மறைந்த இடத்தைச் சுற்றிக் காடுகள் வளர, கோவில் யாரும் கண்டுபிடிக்க முடியாமல் மறைந்துபோனது.

தர்மவர்ம சோழனின் மரபில் வந்த கிளிச் சோழன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடச் சென்று ஒரு மரத்தின்கீழ் இளைப்பாறிக்கொண்டிருந்த சமயம், அந்த மரத்தின்மேல் இருந்த ஒரு கிளி, “வைகுந்தத்தில் உள்ள விஷ்ணுவின் கோவில் இருந்த இடம் இதுதான்; அக்கோவிலை இப்போதும் இங்குக் காணலாம்” என்ற பொருளில் ஒரு செய்யுளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தது. அதைக் கேட்ட கிளிச் சோழனுக்கு கனவில் விமானம் இருக்கும் இடம் புலப்பட்டது; கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோவில் எழுப்பினான். அதுவே இன்றும் நாம் பார்க்கும் ஸ்ரீரங்கம்!

விமானத்துக்குப் பக்கம் நம்பிள்ளை தூண் பற்றிப் பேசினேன். நம்பிள்ளையும் ‘பட்டர் சொன்னதை’ கிளிப்பிள்ளை மாதிரி கிளி மண்டபம் பக்கம் உட்கார்ந்து சொன்ன இடம்.

ஸ்ரீரங்கத்தில் பல பகுதிகள் கிளி மண்டபம் தான். பல ஆசாரியர்கள் ஆழ்வார் பாசுரங்களில் திளைத்து அனுபவித்துச் சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்ன இடங்கள். அவர்கள் சொன்னதை இன்றும் நம் ஆசாரியர்கள் இன்றும் திரும்ப திரும்பச் சொல்ல நம்பெருமாள் அதைக் கேட்டுக்கொண்டு ஆனந்தமான இருக்கிறார்.

நம்பெருமாள் எல்லா அலங்காரத்திலும் அழகு ஆனால் கிளி மாலையுடன் இருப்பது கூடுதல் அழகு. அந்தக் கிளிகள் ஆசாரியர்கள். அவர்கள் நம்பெருமாள் மீது படர்ந்து கைங்கரியம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒரு தாய் குழந்தைக்குச் சோறு ஊட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தையை இடது கையில் இடுக்கிக்கொண்டு வலது கையால் ஊட்டுவாள். அவனை அனுபவிக்க வேண்டும் என்றால் தன் இடுப்பில் வைத்து கையால் ஊட்டிவிடுவார்.

ஆசாரியர்கள் பலர் இப்படி பெருமாளிடம் சோறு சாப்பிட்டவர்கள் தான். நம்பெருமாள் தாய் போல இவர்களுக்கு ஊட்டி விட்டதைத் தான் இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும் ஏன் ஆண்டாள் இடது கையில் கிளி இருக்கிறது என்று. ஆண்டாள் அந்தக் கிளியை குழந்தை போல பாவித்து சோறு ஊட்டுகிறாள்! அப்போது தானே அது தெம்பாக தூது போக முடியும் !

நம்பெருமாள் தன் இஷ்டப்பட்டவர்களை கிளி போல கூடவே வைத்துக்கொள்வான் அந்த ‘குலசேகர ஆழ்வார்’ சேவித்த அந்த துப்புறவு பணியாளர் மாதிரி !

அடுத்த முறை பெருமாள் மீது அமர்ந்திருக்கும் கிளியை பார்க்கும் போது ஆசாரியர்களை நினைத்துக்கொள்ளுங்கள் !

- சுஜாதா தேசிகன்
5.11.2018
செவிக்கினிய செஞ்சொல்

செவிக்கினிய செஞ்சொல்’ என்றால் அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கும். ஆனால் ‘செஞ்சொல்’ என்றால் என்ன என்று கேட்டால் முழிப்போம். இதே போல் தான் ‘செம்மொழி’, ‘செந்தமிழ்’ போன்ற வார்த்தைகளும்.

செஞ்சொல் என்றால் செம்மையான என்று பொருள். ’செமையா’ இருக்கு என்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் செம்மை இல்லை, செம்மை என்றால் உள்ளதை உள்ளபடி செல்லுவது எதுவோ அது தான் செம்மை.

நல்ல சொற்களை செம்மையாக சொன்னால் அதில் ஈரம் இருக்கும்.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

அன்பாக சொல்லும் சொல்லை ஈரம் கலந்தாக இருக்கும் என்கிறார் வள்ளுவர்.

நஞ்சீயர் பல சாஸ்திரங்களை எல்லாம் மேல்கோட்டையில் கற்றபின் ஸ்ரீரங்கம் வந்து பட்டரிடம் ஆழ்வார்களுடைய பாசுரங்களை கற்ற பின் ஆழ்வார்களின் பாசுரங்களில் இன்சொல்லில் ‘ஈரம்’ இருக்கிறது என்பாராம்.

சென்னை வெய்யிலில் எப்படி ஏ.சி ரூம் சுகமாக இருக்குமோ அது போல ஆழ்வார் பாசுரங்களில் ஈரம் இருக்கும். செஞ்சொல், ஈரம் கலந்த தமிழில் பாடும் போது ஆழ்வார்கள் உருகியது தெரியும்.

ஆடி ஆடி அகம் கரைந்து* இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி* எங்கும்
நாடி நாடி நரசிங்கா! என்று
வாடி வாடும் இவ் வாள்-நுதலே.

என்ற பாடலுக்கு எந்த பொருளும் தேவை இல்லாமல் ஆழ்வாரின் உருக்கம் தெரிவதை அனுபவிக்கலாம்.

பல ரிஷிகளூக்கு இந்த ’உருகும்’ அனுபவம் கிடைக்கவில்லை, ஆழ்வார் பாசுரங்களை நன்கு அனுபவித்தால் நமக்கும் அந்த அனுபவம் கிடைப்பதற்கு காரணம் ஆழ்வார்கள் ‘ஆழ்ந்த’ பக்தியினால் உதிர்த்த செஞ்சொற்களால் கிடைத்த அருளிச்செயல்கள் இவை.

வைகுண்டத்திலிருந்து புறபட்ட பெருமாள் பத்ரியில் கொஞ்சம் காலம் இருந்தார். இங்கே அதிக குளிர் யாரும் வர மாட்டார்கள் என்று கீழே இறங்கி வந்து திருமலையில் கொஞ்சம் நேரம் நின்றுகொண்டு பார்த்தார் சரி அங்கேயும் ( அப்போது ) கூட்டம் இல்லை என்று கீழே இறங்கி வந்து ஸ்ரீரங்கத்தில் படுத்துக்கொண்டு விட்டார்.

இன்றும் ஸ்ரீரங்கத்திலிருந்து தான் வைகுண்டத்தை மேனேஜ் செய்கிறார் என்று சொல்லுவார்கள். அதனால் தான் எந்த பெருமாளுக்கும் இல்லாத செங்கோல் நம்பெருமாளிடம் இருக்கிறது. எங்கு சென்றாலும் ( நாச்சியார் திருக்கோலம் உட்பட) அது அவருடன் கூடவே வரும்.

காதில் சரியாக விழவில்லை என்றால் ஒரு கையை காதுக்கு பக்கம் வைத்து ‘என்ன சொன்னீங்க?” என்பார்கள்.

யாராவது ஒரு பக்தன் ‘ரங்கா’ என்று செவிக்கு இனிய செஞ்சொல் சொல்லுவானா என்று காத்துக்கொண்டு இருக்கிறான். எங்கே அவன் சொன்னது கேட்காமல் போய்விடுமோ என்று இன்றும் பெரிய பெருமாள் ஒரு கையை தன் திருசெவிக்கு பக்கம் வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டு இருக்கிறார்.

பட்டரிடம் ஒருவர் பெருமாள் எப்போது எழுந்துக்கொள்வார் என்று கேட்டாராம் அதற்கு பட்டர் ”சம்சார கிழங்கு எடுக்கும் வரை” என்றாராம். உழவர்கள் புதுப் பயிற்களை நடும் போது பழைய பயிர்களை அடிவேர் உடன் பிடுங்கி எடுத்த பிறகு தான் அடுத்த பயிர்களை உழுவார்கள். அதை கிழங்கு எடுக்கும் வரை என்பார்கள்.

நமக்கு என்ன தோன்றும் பெருமாள் எப்படி எழுந்துக்கொள்வார் அவர் ஒரு சிற்பம் தானே என்று. நம்மாழ்வார் பாசுரத்தை பாருங்கள்

கிடந்த நாள் கிடந்தாய்; எத்தனை காலம்
கிடத்தி? உன் திரு உடம்பு அசைய!*
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் அடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி*
தடம் தோள் தாமரைக்கண் விழித்து நீ எழுந்து உன்
தாமரை மங்கையும் நீயும்*
இடம் கொள் மூவுலகும் தொழ, இருந்தருளாய்-
திருப்புளிங்குடிக் கிடந்தானே!

இதில் கிடந்த திருக்கோலத்தில் அன்று தொடங்கி இன்றுவரை எத்தனை நாளாக இப்படிக் கிடந்த திருக்கோலத்தில் ஒரே மாதிரி படுத்துக்கொண்டு இருப்பாய் ? உன் திருஉடம்புக்கு வலிக்காதோ ? உனக்கு உடம்பு பிடித்துவிடட்டா என்று நம்மாழ்வார் கேட்கிறார்.

முதலாழ்வார்களுக்கு இன்னொரு பெயர் ‘செந்தமிழ் பாடுவார்’ . அடுத்த முறை செந்தமிழ், செஞ்சொல் என்றால் அது ஆழ்வார்களின் பாசுரம் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நம்மாழ்வார் போல திருமழிசை ஆழ்வார் போல ஈர சொற்களால் நம்மால் பட முடியாது, ஆனால் அவர்கள் பாடியதை நாம் சேவித்தால் ’செவிக்கினிய செஞ்சொல்’ கேட்டு எழுந்துக்கொள்வார் பெரிய பெருமாள்.

பிகு: ஆழ்வார்களின் இன்சொல்லை சொல்லிக்கொண்டே இருந்தால் நம் வாயில் ‘தீவிளி விளிவன் வாளா’ என்ற சொற்களே வராது என்று என் அப்பா அடிக்கடி சொல்லுவார். இனிமையாக பேச வேண்டும் என்றால் ஆழ்வார்களின் பாசுரங்களை அனுபவித்து சேவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

- சுஜாதா தேசிகன்
3.11.2018
( ஓவியம் : அமுதன் தேசிகன், ஸ்ரீரங்கம் பெருமாளை சேவித்துவிட்டு வந்த பிறகு வரைந்தது 2017 )














நம்பெருமாளும் மாலைத் தாங்கியும்
Image may contain: people standingஇடிதாங்கி என்று கேள்விப்பட்டிருக்கிறோம், மாலைத்தாங்கி ?



ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் முதல் முதலில் மதுரா விஜயத்தின் போது ஊரைச் சுற்றி வருகிறார்கள். நல்ல துணியை உடுத்த எண்ணி ஒரு சலவைக்காரனிடம் கேட்க அவன் மறுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அடுத்ததாக ஒரு பூக்கடைக்கு சென்று அங்கே சுதாமா என்ற ஒரு மாலை கட்டுபவர் இருக்க அவர் கிருஷ்ணனுக்கு அன்பாக மாலை ஒன்றைத் தருகிறார். ஆனால் கிருஷ்ணனின் சின்ன கழுத்துக்கு அது சரியாக பொருந்தவில்லை. பக்கத்தில் மாடு மெய்க்கும் சிறுவர்கள் வைத்திருக்கும் ஒரு சின்ன கோலை வாங்கி கழுத்துக்கு மாலைத் தாங்கியாக வைத்து மாலை சூட்டி அழகை ரசிக்கக் கண்ணன்

”சுதாமா உனக்கு என்ன வேண்டுமோ அதை நான் தருகிறேன்” என்றதற்கு சுதாமா
“இந்த அழகு முகத்தைப் பார்த்தால் போதும் கண்ணா, வேறு என்ன வேண்டும் எனக்கு?” என்கிறார்.

இன்றும் உற்சவர்களுக்கு சின்னதாக மாலைத் தாங்கி வைத்து அலங்காரம் செய்வதை பார்க்கலாம்.

கண்ணனுக்குப் பூமாலை பிடிக்கும் என்ற ரகசியத்தை உணர்ந்த ஆண்டாள் தினமும் தான் சூடிக் கண்ணாடியில் அழகு பார்த்த மாலையை பெருமாளுக்கு அனுப்பினார்.

ஆண்டாளை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் போதும் ஆண்டாள் கழுத்தில் உள்ள மாலை பெரிய பெருமாள் கழுதுக்கு வந்த பிறகு ஆண்டாள் மறைந்தாள். கடைசியாகவும் அவள் சூட்டிய மாலையையே விரும்பி ஏற்றுக்கொண்டார் பெருமாள்.

ஆண்டாளுக்கு அந்த ரகசியத்தைச் சொன்னது யாராக இருக்கும் ? வேறு யார் பெரியாழ்வார் தான்!.
ஆண்டாள் பாடியது சங்கத் தமிழ் ‘மாலை’

அவரிடமிருந்து அந்த ரகசியத்தை மேலும் ஒருவர் தெரிந்துகொண்டார் அது தொண்டரடிப்பொடி ஆழ்வார். ஸ்ரீரங்கத்திலேயே நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்தார். அவர் பாடியது திரு’மாலை’ என்ற தமிழ் மாலை.

( ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் மாலை என்ற வார்த்தை மட்டும் வைத்து ஒரு Phd செய்யலாம் ! )

நம்பெருமாளுக்கு நாம் மாலை வாங்கிக்கொண்டு சென்றால் அதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

நம்பெருமாள் சுகுமாரன், இரண்டு மாலைகளுக்கு மேல் சாத்திக்கொள்ள மாட்டார். அந்த இரண்டு மாலைகளைச் சாத்திக்கொண்டு தன் நான்கு திருக்கைகளில் இரண்டை மறைத்துக்கொள்வார். ஏன் என்று யோசித்திருக்கிறேன். அதற்கு விடை சமீபத்தில் தான் கிடைத்தது.

நான்கு திருக்கைகளுடன் இருந்தால் நமக்கும் அவருக்கும் ஒரு தோற்றத்தில் வித்தியாசம் ஏற்பட்டு அவரை அணுக ஒரு தயக்கம் ஏற்படுகிறது.
இரண்டு திருக்கைகளுடன் இருந்தால் ‘அட ’நம்’பெருமாள்’ என்று அவரிடம் அன்யோன்யம் ஏற்பட்டு கிட்டே போக எளியவனாகக் காட்சி அளிக்கிறான்.

மலையைத் தாங்கினான், பூமியைத் தாங்கினான், மாலையைத் தாங்குவது அவனுக்குக் கஷ்டம் இல்லை, இருந்தாலும் மாலைத் தாங்கி ஏன் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் அவனிடம் செல்லும் போது இரண்டு கைகளால் நம்மைத் தாங்க மாலை இடையூறாக இருக்கக் கூடாது அல்லவா ? அதனால் தான் அவரை முன்னிலும் பின் அழகிய பெருமாள் என்கிறோம் !

ஸ்ரீரங்கம் நம்பெருமாளை ஸ்ரீரங்க வாசிகள் தாங்கு தாங்கு என்று தாங்குவதால், மாலை தாங்கி எல்லாம் மற்ற திவ்ய தேசம் மாதிரி இங்கே கிடையாது. மாலையை கச்சிதமாக செய்திருப்பார்கள்

கண்ணன் தான் ஸ்ரீரங்க பெருமாள் என்று சொல்லுவது தவறு, ஸ்ரீரங்கம் பெருமாள் தான் கண்ணன் என்று சொல்லுவது தான் சரி.

சும்மாவா சொன்னார்கள் திருவரங்கம் என்றால் ‘பூ’லோக வைகுண்டம் என்று ?

- சுஜாதா தேசிகன்
2.11.2018

எழுதியவர் : - சுஜாதா தேசிகன் (14-Jun-19, 4:29 am)
பார்வை : 61

மேலே