பெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- -----------------கடிதங்கள்

ஜெ,



நான் பெங்களூரில் வசிக்கிறேன். இங்கு ஏதேனும் வாசகர் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றனவா என்பதை அறிய விரும்புகிறேன். தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. ஏதேனும் வாசக நண்பர்கள் வட்ட தொடர்பு பெங்களூரில் கிடைத்தால் என்னுடைய நள்ளூள் அது. இணக்கமான வாசகர்கள் உடன் தொடர்பில் இருப்பது என்னை மிகவும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன்.



நீங்கள் என்னுடைய இந்த பதிவை உங்களுடைய வலைப்பதிவில் பதிவிட்டால் என்னுடைய அலைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டுகிறேன்.



நன்றியுடன்,



நினேஷ் குமார்

பெங்களூர்

96772 60531.



அன்புள்ள நினேஷ்குமார்,



நானறிந்து அவ்வாறு தொடர்ச்சியாக நவீன இலக்கியம் சார்ந்த கூட்டங்கள் எவையும் பெங்களூரில் நடப்பதில்லை. என் பெங்களூர் நண்பர்கள் அனைவரும் ஈரோட்டிலும் கோவையிலும் நிகழும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத்தான் கிளம்பி வந்துகொண்டிருக்கிறார்கள்



வாசகசாலை என்னும் அமைப்பு பல ஊர்களில் இலக்கியச் சந்திப்புக்களை நடத்துகிறது. அவர்கள் பெங்களூரிலும் நடத்துகிறார்கள் என நினைக்கிறேன்.



தமிழகம் முழுக்க நிகழும் இலக்கியச் சந்திப்புக்களை ஒரே தளத்தில் தொகுக்கும் ஒரு முயற்சி நடந்தால் நன்று. ஆனால் தினந்தோறும் வலையேற்றம் செய்யவேண்டும். தொடர்ச்சியாக இற்றைப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்



ஜெ
=============================================================================================================================

ஜெ,

பெங்களூரில் நிகழும் இலக்கியச் சந்திப்புகள் குறித்து வாசகர் ஒருவர் கேட்டிருந்ததைக் கவனித்தேன். இதுவரை நான் பங்குபெற்ற/ பங்குபெறும் இலக்கியச் சந்திப்புகள் பற்றிய குறிப்பை அளிக்கவிரும்புகிறேன்.

பெங்களுரில் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் நடத்திவந்த கம்பராமாயண வாசிப்பு பற்றி அறிவீர்கள். அதுபற்றி உங்கள் தளத்திலும் முன்னர் வெளிவந்திருக்கிறது மொத்தம் 139 வகுப்புகளாக கம்பராமயணத்தின் முதல் பாடலிலிருந்து இறுதிப்பாடல் வரை நிகழ்ந்த வாசிப்பு அது. ஒவ்வொரு வாரமும் 2013 ஏப்ரல் முதல் 2015 அக்டோபர் வரை நிகழ்ந்தது. கம்பராமாயணம் முடிந்தபிறகு சிலப்பதிகாரமும் பாஞ்சாலி சபதமும் அதேபோல் முழுமையாக வாசித்து முடித்தோம். தற்போது பெரியபுராணம் பாதிக்குமேல் முடித்திருக்கிறோம். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர்கள் இச்சந்திப்புகளில் பங்குபெறலாம்.

நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரை ஜடாயு நடத்திவந்த பெங்களூரு வாசகர் வட்டம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடந்துகொண்டிருந்தது. சில சிறுகதை அமர்வுகளில் நான் கலந்துகொண்டேன். இப்போது நிகழ்வதில்லை. இறுதியாக இரண்டாண்டுகளுக்கு முன்னால் அசோகமித்திரன் நினைவுக்கூட்டம் தான் இவ்வட்டம் சார்பில் நிகழ்ந்த கடைசிக் கூட்டம் என நினைவு.

வேறு அமைப்புகள் குறித்து எனக்குத் தெரியவில்லை. வாசகசாலைச் சந்திப்புகளும் அண்மையில் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை. கடிதம் எழுதிய நண்பருக்குப் பழந்தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் இருந்தால் ஹரிகிருஷ்ணன் சார் நடத்திவரும் சந்திப்பில் பங்கேற்கலாம்.

அன்புடன்,
த.திருமூலநாதன்.



அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,



நினேஷ் அவர்களின் கடிதம் கண்டேன்.



வாசகசாலை அமைப்பு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆல்சூர் ஏரி அருகில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் வைத்து சிறுகதை விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.



அவர்களின் முகநூல் பக்கத்தில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகின்றன.



நன்றி

பலராம கிருஷ்ணன்



Save
Share

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (25-Jun-19, 5:09 am)
பார்வை : 111

சிறந்த கட்டுரைகள்

மேலே