புற்று நோயால் பாதிக்கப்பட்ட, அதன் துன்பங்களை அனுபவித்து வரும் ஒரு சகோதரியின் கதை

வலைச்சரம்
வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...


இப்பதிவு ஒரு புற்று நோயால் பாதிக்கப்பட்ட, அதன் துன்பங்களை அனுபவித்து வரும் ஒரு சகோதரியின் கதை. கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற வலைப்பூவினில், தன் நோயைப் பற்றியும், தான் படும் துன்பங்களைப் பற்றியும், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் பற்றியும், பெற்றுக் கொண்டிருக்கிற சிகிச்சைகளைப் பற்றியும், தன் மருத்துவ மனை அனுபவங்களைப் பற்றியும், சந்தித்த நல்ல உள்ளங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

சகோதரி அனுராதா இதுவரை 37 பதிவுகள் எழுதி இருக்கிறார். எட்டாம் வகுப்பு வரையே கற்ற இவர், ஆங்கிலமும் தெரியாத இவர், என்ன அழகாக, தன் துன்ப வரலாற்றை தன் கணவர் மூலம் எழுதி வருகிறார். இவர் சொல்லச் சொல்ல, அருமைக் கணவர் எழுதுகிறார். அத்தனை பதிவுகளும் இவர் சொன்னது தான்.

2003- ஆக்ஸ்டுத் திங்களில், தனக்கு மார்பகப் புற்று நோய் இருக்கிறது என்று அறிந்த உடன், அதற்கு உண்டான சிகிச்சைகளை, முறையாகத் தொடங்கி, இன்று வரை சிகிச்சை பெற்று வருகிறார். நோயின் தாக்கம் முற்றுகிறது. சிகிச்சை, மருந்துகள், மருந்துகளின் தாக்கம், சிகிச்சையின் பின் விளைவுகள் எல்லாம் பாடாய்ப் படுத்துகின்றன. அறுவைச் சிகிச்சையை விரும்பாது, கதிரியக்க சிகிச்சைகளை கடைப் பிடிக்கிறார்.

தான் சந்தித்த ஒவ்வொரு மருத்துவரைப் பற்றியும், ஒவ்வொரு மருத்துவ மனையைப் பற்றியும் எழுதி வருகிறார். சென்னை, ஹைதராபாத், சிங்கப்பூர், மதுரை என வளைய வருகிறார். தற்போது, மதுரையில் தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒவ்வொரு பதிவினையும் படிக்கும் போது, அவர் பதிவிடுவதின் நோக்கம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பெண்கள் மார்பகப் புற்று நோயை எவ்வாறு அறிந்து கொள்வது, வந்து விட்டால், என்ன சிகிச்சை பெறுவது, எங்கு பெறுவது என்ற அனைத்து விவரங்களையும் விளக்கமாகக் கூறுகிறார்.

கணவர் ஏறத்தாழ 38 ஆண்டு காலம் வருவாய்த்துறையில் பணி புரிந்து காலூன்றி நின்றவர். துணை ஆட்சியாளர் பதவி உயர்வு வரப் போகும் நேரத்தில், துணைவியின் நோய் காரணமாக, விருப்ப ஓய்வு பெற்றவர். அன்று முதல் துணைவியாருக்கு இவர் தான் எல்லாம்.

பணியில் இருந்த காலத்தில், பெரும்பான்மையினரைப் போலவே, கணவர் அலுவலகமே கதியாய்க் கிடந்தவர். அக்கால கட்டத்தில், வீட்டில் சகோதரியே ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆக, சகோதரியே, பெற்ற மக்கள் அனைவரையும் நல்ல முறையில் வளர்த்து, மணமுடித்து, பேரன் பேத்திகள் பெற்று, மனமகிழ்ந்தவர்.

தற்போது சகோதரியின் அனைத்துத் தேவைகளையும், துணைவர் அன்புடன், ஆதரவுடன் நிறைவேற்றி வருகிறார்.

சகோதரி அனுராதாவின் ஆசைகள் எல்லாம், புற்று நோயால் அவதிப்படும் நண்பர்களுக்கு, குறிப்பாக சகோதரிகளுக்கு, ஆதரவுக் கரம் நீட்டி, நீண்ட கால பண, மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். இவரது கணவரும் ஒத்த மனதினரைத் தொடர்பு கொண்டு வருகிறார். சீக்கிரமே இவர்களின் எண்ணம் ஈடேறும்.

சகோதரி அனுராதா, பூரண நலம் பெற்று, துன்பங்களிலிருந்து விடுதலல பெற எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்திப்போமாக. கூட்டுப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலனுண்டு.

இறைவா, இவரை துன்பங்களிலிருந்து காப்பாற்று. நோயின் தாக்கத்தைக் குறை.

சகோதரி அனுராதா.



Posted by cheena (சீனா)

எழுதியவர் : சகோதரி அனுராதா. (26-Jun-19, 4:25 pm)
பார்வை : 26

மேலே