சாமுராய் வாள் எப்படி உருவாகிறது சுவாரஸ்ய தகவல்கள்

பண்டைய ஜப்பானியப் போர் வீரர்களான சாமுராய்கள் பயன்படுத்தும் வாட்களை பாரம்பரியம் மிக்க முறையில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எஞ்சிய குடும்பங்களில் ஒன்று, ஜப்பானின் கியூஷு தீவில் வசித்து வருகிறது.

சாமுராய் வாள் தயாரிக்கும் சிக்கலான பணி பல மாதங்கள் பிடிக்கும். இறுதியில் அழகிய வாள் உருவெடுக்கும். இப்பணியில் கோயிமா குடும்பம் ஈடுபட்டு வருகிறது.

சாமுராய் வீரர்கள் கடைப்பிடிப்பதற்கு என புஷிடோ என்ற தனியான நடத்தைக் குறியீடு உள்ளது. இதன் இதயமாக சாமுராய் வாள் விளங்குகிறது. இந்த வாள் சாமுராய் வீரர்களுக்கு ஒரு ஆன்மீகப் பொருளாகும். நீடித்த சகிப்புத்தன்மையை அடையாளம் காட்டும் விதமாக வாய்ந்த சக்தியாகவும் இது கருதப்படுகிறது.

சாமுராய் வாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கோயிமா குடும்பத்தைச் சேர்ந்த ஷிரோ குனிமிட்ஸு கூறுகையில், ''சாமுராய் வாட்களை தயாரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபடும்போது, அதனோடு தொடர்புடைய புனிதத்தன்மையையும் அதில் அழுத்தமாக சேர்க்க விரும்புகிறோம்'' என்று தெரிவித்தார்.

பல தலைமுறைகளை கடந்த வந்துள்ள சாமுராய் வாள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கடைசி குடும்பங்களின் ஒன்றான கோயிமா குடும்பத்தில், வாள் தயாரிக்கும் பணிக்கு தலைமையேற்பவருக்கு ஷிரோ குனிமிட்ஸு என்ற கெளரவப் பெயர் வழங்கப்படுகிறது.

புனிதத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது சாமுராய் வாள்
மிகவும் அழகிய சாமுராய் வாட்களைச் செய்வதற்கு கோயிமா குடும்பம் ஒன்றிணைந்து பணிபுரிகிறது. உருகிய எஃகு துண்டை நன்கு அடிப்பதில் தொடங்கி, கடுமையான உழைப்பால் இறுதியில் ஹமோன் என்றழைக்கப்படும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய வாள் உருவாகும்.

சாமுராய் வாள் உருவாக்கத்தின் படிகள்:

1. மூலப் பொருள்: தாமாஹாகானே

சாமுராய் வாள் செய்வதற்கு தேவையான மூலப்பொருள் தாமாஹாகானே. இப்பொருளை ஒரு தயாரிப்பாளரிடமிருந்து 100 மைல்களுக்கு அப்பால் இருந்து கோயிமா குடும்பம் வரவழைக்கிறது.

அதே வேளையில், பண்டைய காலத்தில் சாமுராய் வாள் உருவாக்கத்திற்கு நகங்கள் அல்லது உடைந்த கலப்பைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன.

2. உலோகத்தை கட்டும் அடிப்படை (ஷிடா-கிட்டே)

''நீண்ட நேரமாக உலோகத்தை அடித்துக் கொண்டிருந்தால், ஒருவரின் கை நடுங்கக்கூடும். சாப்பிட பயன்படுத்தப்படும் ஷாப்ஸ்டிக் குச்சியை கூட பிரிக்க முடியாது'' என்று ஷிரோ குனிமிட்ஸு தெரிவித்தார்.

மிகவும் கடுமையான உடல் பளுவுள்ள பணியில் கோயிமா குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வாள் உருவாகும்முன், சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் தாமாஹாகானேவை சூடாக்க அடுப்பின் வெப்பநிலை அதிகரிக்கப்படுகிறது. தாமாஹாகானேவை பலமுறை நன்றாக தட்டி அடிப்பது, அதில் உள்ள அசுத்தங்களை நீக்குவதற்காக ஆகும்.

3. மடித்து உருக்கப்படும் உலோகம் (ஒருகேஷி டான்ரென்)

தாமாஹாகானே உலோகத்தின் நகல் பகுதி குறுக்கு, நெடுக்காக பலமுறைகள் மடிக்கப்படுகிறது. தாமாஹாகானே உலோகம் சூடாக்கப்பட்டு, பின்னர் தண்ணீரால் ஒவ்வொரு கட்டத்திலும் குளிர்விக்கப்படுகிறது.

பின்னர், இதுவே எஃகு தளத்தை வளியேற்றுகிறது. உலோகத்தின் இறுதி வடிவம் பில்லட் என்றழைக்கப்படுகிறது.

நன்றாக தீட்டப்பட்ட சாமுராய் வாளின் தரத்தை சோதிக்கும் மிட்ஸுடோஷி கோமியா
4 ஹிஸுகுரி வாள் உருவாக்கம்

பெரிய மற்றும் சிறிய சுத்தியல்களால் மிகுந்த சிரத்தையுடன் ஹிஸுகுரி வாளின் வடிவம் உருவாக்கப்படுகிறது. வாள் தயாரிப்பவர்கள் அதன் நுனிகளை வெட்ட மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர்.

5. களிமண் கொண்ட பூச்சு (சூசி-ஓகி மற்றும் யாக்கிபா-சூசி)

அசுத்தங்களை அகற்ற வாள் சுத்தப்படுகிறது. பின்னர் அதன் மேற்புறத்தில் கல் மற்றும் களிமண் கலவையால் பூசப்படும்.இக்கலவையின் விகிதம்தான் சாமுராய் வாள் உருவாக்குபவர்களின் தொழில் ரகசியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

6 இறுதிவடிவம் மற்றும் மெருகூட்டல் (ஷிப்டாஜி டோகி மற்றும் ஷியாகி டோகி)

உறுதியாக்கப்பட்ட உலோகத்தை இறுதியாக தலைமை வாள் தயாரிப்பவரின் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படும். மாறுதல்கள் இருந்தால் அவை சரிசெய்யப்பட்டு, மெருகூட்டப்படும்.

சாமுராய் வாட்களை எவ்வாறு மெருகூட்டுவது என்பதைக் கற்றுக்கொள்ள மிட்ஸுடோஷி கோமியா டோக்கியோவில் பத்தாண்டுகள் செலவழித்தார்.


கையெப்பமிடப்படும் சாமுராய் வாள்

7 இறுதியாக கையொப்பமிடப்படும் வாள் (மே-கிரி)

ஒரு சிறிய உளியைக் கொண்டு வாளில் தனது பெயரை தலைமை வாள் தயாரிப்பவர் கையொப்பமிடுவார். இக்கையெழுத்து வாளின் தரம் மற்றும் அமைப்புக்கேற்றார் போல மாறுபடும்.

எழுதியவர் : பிபிசி தமிழ் : (14-Jul-19, 5:53 am)
பார்வை : 61

சிறந்த கட்டுரைகள்

மேலே