பெண் என்பதாலா பெண்ணே எதிரி ஆகிறாள்

பெண் என்பதாலா பெண்ணே எதிரி ஆகிறாள்?

ஏன் மேடம் இப்படி பண்ணறீங்க? அவங்க அப்ளிகேசன்ல என்ன பிரச்சினை? டாகுமெண்ட்ஸ் எல்லாம் கரெக்டா வச்சிருக்காங்களே, அப்புறம் ஏன் இன்னும் பாஸ் பண்ணாம் இழுத்தடிக்கறீங்க? இன்னைக்கு எல்லாத்தையும் முடிச்சுடறேன் மேடம். சொல்லிவிட்டு எனக்கு விடை கொடு என்பது போல் நின்று கொண்டிருந்தார்கள். சரி போங்க அவர்களை வழி அனுப்பிவிட்டு என்னையே பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் நீங்க தைரியமா போங்கம்மா, இன்னும் ஒரு வாரத்துல முடிச்சு அனுப்பிச்சுடறோம். ரொம்ப நன்றிங்கம்மா, சொல்லிவிட்டு சென்றவளை பெருமூச்சுடன் பார்த்தேன்.
கணவன் இறந்து இன்றோடு இரண்டு மாதம் முடியப்போகிறது. அவனது பணிக்கான கொடை, மற்றும் வரவேண்டிய நிலுவைத்தொகை,போன்றவைகளை பெற வேண்டி இந்த பெண் நடையாய் நடக்கிறாள். ஏற்கனவே ஒரு முறை என்னிடம் வந்து அந்த கிளார்க்கை கூப்பிட்டு கேட்டதற்கு ஒரு சில டாகுமெண்ட்ஸ் வரவில்லை என்று சொன்னார். அந்த பெண்ணிடம் அவர் கேட்ட டாகுமெண்ட்ஸ் கொண்டு வந்தா முடிச்சுடுவாங்க, என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
அந்த பெண்ணும் அலைந்து திரிந்து கேட்ட எல்லாவற்றையும் அந்த கிளார்க்கிடம் கொண்டு வந்து கொடுத்தும், இதுவரை அந்த பெண்ணுக்கு எந்த தொகையும் வழங்கப்படவில்லை. அதனால் மீண்டும் என்னிடம் வந்து புகார் அளித்தாள். அந்த பெண் முன்னாலேயே கூப்பிட்டு சொல்லி அனுப்பி இருக்கிறேன், பார்ப்போம். பெருமூச்சுடன் சீட்டை விட்டு எழுந்து மதிய உணவுக்கு கிளம்பினேன். சாப்பிட போகும்போது அந்த கிளார்க் சீட்டை தாண்டித்தான் போக வேண்டும். என்னை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டார். எனக்கு ஆயாசமாக இருந்தது. இது என்ன கண்ணாமூச்சி விளையாட்டு. ஒருவரின் துக்கம் நமக்கு துக்கமில்லாவிட்டாலும் அவரது துக்கத்தை போக்ககூடிய மருந்து நம்மிடம் இருந்தால் கொடுத்து உதவ மாட்டோமா? பாவம் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு திடீரென கணவனை இழந்து வருமானம் இல்லாமல் எப்படி தத்தளிக்கும் அந்த குடும்பம்? அந்த உணர்வு கூட இல்லாமல் எப்படி பெண்ணாய் இருக்க முடியும்?
காண்ட்டீன் சென்று அமர்ந்து ஒரு தயிர் சாதம் ஆர்டர் செய்து விட்டு தலையை பிடித்து உட்கார்ந்து கொண்டேன். இதே சூழ்நிலையில் தான் என் குடும்பமும் அன்று ஆடிப்போனது. திடீரென அப்பா மாரடைப்பால் இறந்து விட என்னோடு சேர்த்து மூன்று பேர், அதுவும் மூன்றுமே பெண்கள். எப்படி இருந்திருக்கும் அம்மாவுக்கு? பெண்களின் தைரியமே அவள் அநாதரவாய் நிற்கும் போதுதான் வெளிப்படுகிறது. கொஞ்சம் ஆடிப்போனாலும், சுதாரித்து கொண்ட அம்மா என் படிப்பை ப்ளஸ் டூவுடன் நிறுத்த செய்தாள். செலவுகள் மள மள வென குறைக்கப்பட்டன. அதுவரை அப்பா இருந்த தைரியத்தில் வரவுக்கு மீறிய செலவுகளை செய்து கொண்டிருந்த குடும்பம் வரவே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதை மூன்று மாதமாக செய்து காட்டியது. நல்ல வேளை அதே அலுவலகத்தில் பணி புரிந்த அப்பாவின் நண்பர் முயற்சி எடுத்து அப்பாவுக்கு வரவேண்டிய பணித்தொகைகளையும், வாரிசு வேலையையும் மூத்தவளான எனக்கு ஒரு வருட்த்தில் பெற்றுக்கொடுத்தார்.
அதன் பின் என் இளமை வாழ்க்கை எனக்கு பின் பிறந்த இருவரை உருவாக்குவதிலேயே கழிய ஆரம்பித்தது. அம்மா ஆரம்பத்தில் என் வாழ்க்கையை பற்றி கவலைப்பட்டவள், இவர்கள் இருவரின் வளர்ச்சியும், அவர்களை நல்லபடியாக கரை சேர்க்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே என்னை பற்றிய கவலைகளை மனதுக்குள் வைத்து பூட்டிக்கொண்டாள்.
வருடங்கள் ஓடி விட்டன. அவர்கள் இருவரும் இப்பொழுது அமெரிக்காவிலும் அரபு நாட்டிலும் வாழ்க்கையை நிலைப்படுத்திக்கொண்டனர். வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை குடும்பத்துடன் வந்து இரண்டு நாள் இருந்து விட்டு விசாரித்து செல்கிறார்கள். அம்மாவிடம் பேசுவது போல் என்னிடம் அவ்வளவாக பேசுவதில்லை. மரியாதை காரணமாக இருக்கலாம், அல்லது குற்ற உணர்ச்சியாக கூட இருக்கலாம். நம்மால்தானே அக்கா தனி மரமாக இருக்கிறாள் என்ற எண்ணம் கூட இருக்கலாம். இப்பொழுது அம்மாவும் மறைந்த அந்த வீட்டில் “ஹோவென” தனியாய் நான் மட்டும்……. துக்கம் இழுத்துக்கொண்டு போக இருந்த வேளையில் திடீரென தடுப்புக்கு அந்தப்புற டேபிளில் இருந்து வந்த பேச்சுக்குரல்…
என்னடி அந்த கிழம் உன்னை கூப்பிட்டு விசாரிச்சாப்பல இருக்கு? ஆமா அதுக்கென்ன சும்மா அந்த அப்ளிகேசனை பாஸ் பண்ணிடு, பண்ணிடு அப்படீங்குது. அப்படி நம்மால முடியுமா? இதுக்கென்ன பிள்ளையா குட்டியா? இல்லை நம்மளை மாதிரி குடும்பமா?/ ஏதாவது பெயராம என்னால முடியாது.
அப்ப அந்த கிழம் மறுபடி கேட்டா? ஏதோ காரணம் சொல்ல வேண்டியதுதான். காரணமா இல்லை? சிரிப்பொலி இந்த பக்கம் என் காதை தாக்கியது.
சர்வர் கொண்டு வந்து வைத்த தயிர் சாதத்தின் வெண்மை என்னை பார்த்து சிரிப்பது போல தோன்றியது. சர்வரை கூப்பிட்டு இந்த தட்டை அப்படியே மூடி வைக்க சொல்லிவிட்டு விறு விறுவென அலுவலகத்துக்கு வந்து என் டேபிளின் மேல் வைத்திருந்த பேக்கில் இருந்து செக் புத்தகத்தை எடுத்து நேரே அந்த கிளார்க் இருக்குமிடத்துக்கு சென்றேன். என்னை பார்த்ததும் திகைப்புற்று பேசிக்கொண்டிருந்த இருவரும் எழுந்தனர். அந்த கிளார்க்கிடம் சென்று செக்கில் ஒரு தாளை கிழித்து கையெழுத்திட்டு இதில் தொகை எழுதவில்லை. அந்த பெண்ணின் அப்ளிகேசனுக்கு என்ன எதிர்பார்க்கிறீர்களோ அதை இதில் எழுதி பாங்கில் பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது அதிகாரி நான் சொன்னபடி அதை பாஸ் பண்ண முயற்சி செய்யுங்கள்.
சொல்லிவிட்டு விறு விறுவென அந்தப்புறம் நான் முன்னர் உட்கார்ந்திருந்த டேபிளில் சர்வர் மூடி வைத்திருந்த தயிர் சாதத்தை உட்கார்ந்து நிதானமாய் சாப்பிட ஆரம்பித்தேன். தயிர் சாதம் ஜில்லென்றிருந்தது. மனம் கொத்தளித்துக்கொண்டிருந்தது.
என் தனிமையை சொல்லி அவர்கள் பேசியதாலா? இல்லை அந்த பெண்ணின் அப்ளிகேசனுக்கு கையூட்டு ஏதேனும் தரவேண்டும் என்று எதிர்பார்த்த்தாலா? தெரியவில்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Jul-19, 9:45 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 149

மேலே