பன்னிருசீர்ச் சந்த விருத்தம்

பன்னிருசீர்ச் சந்த விருத்தம் ...!!!
********************************************

ஆலால கண்டனே நாதவடி வானவா
ஆதிமுத லானகுருவே !
அலையாடு நதியோடு பாதிமதி யுஞ்சூடி
அம்பலத் தாடுமழகே !
சூலாயு தத்தோடு மான்மழுவை யுங்கொண்டு
துன்பந்து டைக்குமிறையே !
சூழ்ந்திடும் வினைகளைத் தோற்றோட வைத்திடும்
தூயனே கருணைவடிவே !
மூலாதி மூலமாய்ச் சோதியுரு வானவா
முன்னின்று வழிநடத்திடு !
முப்புரமெ ரித்தவா என்பாட்டு நீகேட்டு
மும்மலம கற்றியருளே !
சேலாடு விழியாளை இடமாயி ணைத்தவா
சேயெனைக் காத்தாலென்ன ?
சீர்மிக்க வடியாரை யன்பினா லாண்டிடும்
தில்லையின் நடராசனே !!!

நானென்ற ஆணவம் சிந்தைதனி லேறாது
நாதனே எனைமாற்றுவாய் !
நம்பினே னுன்னையே வாழ்விலொளி ஏற்றவே
நல்லதோர் வழிகாட்டுவாய் !
வானவர் போற்றிடும் தேவாதி தேவனே
வடிவேல னின்தந்தையே!
வளமாக நலமாக குவலயந் தன்னிலே
வாழவைப் பாயீசனே !
ஏனினுந் தாமதம் கேட்கவே விழைகிறேன்
இனியனே விடைவாகனா !
எளியேனை யாட்கொள்ள அட்டியெது முள்ளதோ
இன்றதனை யுஞ்சொல்லுவாய் !
தேனினிய வாசகம் நித்தமும் பாடியுன்
திருவருளை நாடிநின்றேன் !
தில்லையுட் கூத்தனே பார்போற்று மீசனே
செவிகேட்டு விரைவாகவா !!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (17-Jul-19, 10:51 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 39

மேலே