சிந்திப்பானா

உலகாளும் பிரமன் படைத்த
ஓரறிவு உயிருக்குத் தான்
எத்தனை இளகிய மனம்!

பசி போக்க உணவளித்தது!
தாகம் தணிக்க வழி வகுத்தது!
உயிர் வாழ இடம் கொடுத்தது!

பிராண வாயு உவந்தளித்தது!
புல்வெளி அழகு பாய் விரித்தது!
குளிர் தென்றல் சுகம் சேர்த்தது!

அதே பிரமன் படைத்த
ஆறறிவு மனிதனுக்கு மட்டும்
ஏனிந்த இறுகிய மனமோ?

ஆகாயத்தை அளக்கத் துடிக்கும் அவன்
அறம் தவறி மரம் அறுத்து
அடைந்த பயன் தான் என்ன?

வளி மண்டலத்தில் ஓட்டை
வியாதிகள் நிறைந்த வாழ்க்கை
தண்ணீருக்கு விலை
நாளை காற்றுக்கும்..

இவையா சாதனைகள்?

சுயநலம் தவிர்த்து
சற்றே சிந்தித்தால்
சந்திக்கவிருக்கும் பேரழிவு தடுக்கலாம்!
சந்ததிகளும் வாழ வழி விடலாம்!!
சிந்திப்பானா?

எழுதியவர் : சுவாதி (22-Jul-19, 7:07 pm)
சேர்த்தது : சுவாதி
பார்வை : 254

மேலே