பிக்பாஸ் - மோகன் வைத்யாவாக சாண்டி மாஸ்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 'கட்டிக்கொடு' நைனாவின் புகழ்(!) பாடும் தொகுப்பாய்த்தான் இருந்தது. காலையில எல்லாரும் ஒரு குத்தாட்டம் போட்டாச்சு... நைனா இல்லாததால் குத்தாட்டம் முடிந்ததும் முத்தமழை மிஸ்ஸிங்... தப்பிப் பிழைத்த அபிராமியின் சோக முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி... டப்பாப் பாட்டுக்கு பரத நாட்டிய அபிநயம் பிடிப்பதெல்லாம் அதிகமில்லை... அதையும் தாண்டி ரொம்ப அதிகமானது... அனாவசியமானது.



கொஞ்ச நாளா 'சனியன் தொலைந்தது' என நினைத்த காலையில சொல்லிக் கொடுக்கும் கலையற்ற நிகழ்ச்சி மீண்டும் காட்டப்பட்டது. இரயில் வடை விற்றார் மது... வாடை... வாடையின்னு சொன்னதும் நீ என்ன வடை விக்கிறியா வேறெதுவும் விக்கிறியான்னு சேரன் கேட்கவும் வாடை, தொடையின்னு என்னமோ பேசுச்சு... ஷெரின் விக்க வந்ததும் எல்லாருக்கும் வடை வேணும்ன்னு அடிதடி... ரேஷ்மா வடையை சேரன்கிட்ட வித்துச்சு.. நீ அழகா இருக்கே சார்ன்னு சொன்னதும் சரவணனுக்கு மூச்சே நின்னது மாதிரி ஒரு ரியாக்சன்.



இதையெல்லாம்... அதாவது... சொல்லிக் கொடுக்கிற உப்புச் சப்பில்லாத நிகழ்ச்சியெல்லாம் காட்ட வேண்டிய நிலையில்தான் சீசன் - 3 இருக்கு. அடிச்சி ஆடிய வனிதாவையும் விரட்டிட்டானுங்க... கட்டிக்கொடுத்து நவரசங்களைக் காட்டிய மோகனையும் விரட்டிட்டானுங்க... அப்புறம் நிகழ்ச்சி இப்படித்தானே போகும்.



அதன் பின் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த வாரம் யாரை விரட்டப் போறீங்கங்ன்னு சொல்றதுன்னு பிக்பாஸ் பில்டப்பைப் போட்டாலும் அதே மீரா, சேரன், அபிராமி, மது, சரவணன் என அரைத்த மாவுடன் காதலில் பிரச்சினை வந்து மனதளவில் பாதித்த சாக்சி மற்றும் கவின் என அறுவர். சொன்ன காரணங்களையே சொல்லி நாமினேட் செய்வதென்பது ஏற்புடையதல்ல... சாக்சி ஜெயில்ல போட்டார் என்ற தேய்ந்த ரெக்கார்டை, தான் ஜெயிலுக்கே போகவில்லை என்றாலும் சரவணன் சொல்லும் போது அது போன வாரம் இந்த வார காரணத்தைச் சொல்லுங்கன்னு பிக்பாஸ் கேட்கலை... தூங்கிட்டார் போல... சாக்சி, கவின் குறித்த சேரனின் பார்வை சரியானதே என்றாலும் வரும் நாட்களில் கூண்டுக்கிளிகள் மீண்டும் காதல் வானில் பறக்க ஆரம்பிக்கும் அறிகுறியே இருப்பதால் சேரனின் கவலைக்கு வேலையில்லை என்றே தோன்றியது. மதுவும் சேரனின் கருத்தை ஒத்த கருத்தே சொன்னார். இந்த வாரம் நான் வெளியில் போகணும்... அங்க போயாச்சும் யார் என்னைச் சொல்றான்னு பார்க்கணும்ய்யா,.. என ஜாலியாக சேரன் சொன்னதிலும் ஒரு வருத்தம் இருக்கவே செய்தது.



காலையில் நைனாவின் பெர்முடாசை எடுத்து உன் மேல எம்புட்டுப் பாசம் வைத்திருக்கிறேன் பார் நைனாவென சாண்டி செய்ததெல்லாம் ரொம்ப அதிகமாகவே இருந்தது என்றாலும் தன் இடத்தைத் தக்க வைக்க சாண்டியின் நேர்த்தியான காய் நகர்த்தல் சரியென்றும் தோன்றியது, இப்பவே சாண்டிதான் இறுதியில் வெல்வாரென இணைய ஆரூடங்கள் சொல்ல ஆரம்பித்திருக்கின்றன... அதற்க்கு ஏற்றார்போல் தன்னைத் தனித்துக் காட்டுவதில் தீவிர முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார் சாண்டி.



நாமினேசனுக்குப் பிறகு 'நீ நடிக்கலை... எனக்கு முடியாதப்போ நீ பார்த்தே... நான் நீ நடிக்கிறேன்னு சொன்னதெல்லாம் தப்புத்தான்... மன்னிச்சுக்க' அப்படின்னு லாஸ்லியா கவினிடம் சொல்ல, பரவாயில்லை மச்சான் என்பதாய் நகர்ந்தாலும் இந்த முக்கோணக் காதல் ஏதாவது ஒன்றை நிகழ்த்தாமல் சங்கமிக்காது என்பது மட்டும் உண்மை.



ஒரு சீட்டெடுத்து அதில் இருக்கும் பாட்டு யாருக்குப் பொருந்தும் என்றும் அதே போல் இன்னொரு குடுவையில் இருக்கும் பஞ்ச் டயலாக் யாருக்கும் பொருந்தும் என்றும் சொல்லிச் செய்து காண்பிக்க வேண்டிய டாஸ்க் - மரண மொக்கை... அவரவர் எடுத்த சீட்டு அவரவர் சிச்சுவேஷனுக்குத் தகுந்தபடியெல்லாம் வருதல் பிக்பாஸில் மட்டுமே.... சத்தியாமாச் சீட்டை குடுவையில் இருந்துதான் எடுத்தார்கள். கவின் பாட, சாக்சி தலையணையை விட்டு எறிய... ஆஹா... மீண்டும் பத்திக்கிச்சே... பத்திக்கிச்சேதான்... இதுல மனவலியாம்... பைத்தியம் ஆகுமாம்... சரித்தான்.



நைனா புகழைச் சாண்டியும் கவினும் பாடிக் கொண்டிருக்க, மீராவும் ஒத்திசைக்க, அடேய்ங்களா நமக்கெல்லாம் வீட்டுக்குப் போனா ஆளிருக்கு... அந்தாளுக்கு யாருடா இருக்கான்னு சரவணன் சொன்னது எதார்த்தம் என்றாலும் ஏதோ முந்தைய பேச்சுக்களின் புண்ணுக்கு மருந்திடுவது போல்தான் இருந்தது. சரவணன் ரொம்ப அமைதியாய் வீட்டுக்குப் போகணும் என்று சொல்லிக் கொண்டே உள்ளிருப்புக்கான காய்களை அழகாய் நகர்த்திக் கொண்டிருப்பது போல்தான் தெரிகிறது.



மீரா எப்போதும் கட்டிலில் படுத்துத்தான் இருக்கிறார்.... கேட்டால் என்னோட வேலையை நான் சரியாகத்தான் பார்க்கிறேன்... சும்மா சும்மா போட்ரேய் பண்ணுறீங்கன்னு அந்தக்காலத்து அஞ்சலிதேவியாய் வசனம் பேசுவார். நேற்று தூங்க பிக்பாஸ் சுட்டார்... பின் தலைவி ரேஷ்மாவை அழைத்து யாரும் தூங்கக்கூடாது.... அதைப் பார்த்துக் கொள்வது உன் வேலை என்றதும் மீராவை எழுப்பி (இதுக்கும் அது கதைக்கத்தான் செய்தது) பின் யாரும் தூங்கக் கூடாதுன்னு சட்டம் போட்டார். ஆனா அபிராமியும் லாஸ்லியாவும் கார்டன் ஏரியாவில் தூங்க, சாண்டி கத்த, பிக்பாஸ் சுட, ரேஷ்மா சமைத்ததை விடுத்து ஓடிவர, ரெண்டும் பாத்ரூமுக்குள் போய் ஒழிய, உங்களுக்குச் சமைக்கணுமா வேண்டாமா..? என கத்திவிட்டுச் சென்றார் ரேஷ்மா. அதன் பின் இருவரும் மன்னிப்புக் கேட்டு உதட்டில் விரல் வைத்து பேசாது அமர்ந்திருந்தனர்.



சாண்டி நைனா வேடத்தில் போட்ட அலப்பறை செம கலக்கல்... கட்டிப்பிடி முத்தம்... ஆண்களை நிராகரித்தல்... நடை... கோபம்... மேனரிசம் என மனுசன் ஒவ்வொன்றையும் பக்காவாய்ச் செய்து விஜய் படத்தில் வடிவேலு வரும் காட்சிகளாய்... செம கலக்கல்.... நேற்றைய ஒளிபரப்பின் சிறந்த நிமிடங்கள் இவை... நைனா இருக்கும் போதே செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்ன்னு யோசித்துப் பார்த்தாலும் இப்பவும் நைனா வீட்டில் டிவியை உடைக்காமல் இருந்திருந்தால் சரி... இனி இந்தச் சாண்டி கெட்டபய சார்ன்னு இத்துப்போன யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து மனசைத் தேத்திப்பார்... பெண்களுக்கு அவரைப் போல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதாய் நடித்ததில் முத்தம் கொடுக்காமல் சப்தம் மட்டும் கொடுத்ததில் கண்ணியம் இருந்தது.



சாக்சி தன்னிடம் சொல்லியிருக்கலாம் சொல்லாதது குறையே என்ற விதத்தில் லாஸ்லியா காதல் மேட்டரை அவிழ்க்க, சாக்சி இருந்த் நிலையில் நீ இருந்திருந்தா இந்தப் பிரச்சினை இன்னும் மோசமா இருந்திருக்கும்... நீங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிட்டுருப்பீங்க என உண்மையை உள்ளபடி சேரன் சொன்னதில் ஒரு இயக்குநரின் டச் இருக்கத்தான் செய்தது. அதுதான் உண்மையுங்கூட என்றாலும் மீண்டும் கவினை நோக்கி ஏவுகணைகள் திரும்பியிருக்கும் நிலையில் 'சக்களத்தி' சண்டை வரும் வாரங்களில்... சாக்சி இந்த வாரம் வெளியேறாத பட்சத்தில் நிகழும் வானிலையே காணப்படுகிறது. ஒருவேளை சாக்சி வெளியேறிவிட்டால் லாஸ்லியா-கவின் காதல் கதை சிறகு விரித்துப் பறக்க ஆரம்பிக்கும்.

லாஸ்லியாவும் அபியும் இப்போது நகமும் சதையுமாய்... அபியின் காதலன் முகனும் லாஸ்லியாவும் ஒரு பாடலைப் பாடியபடி ஆடும் போது உன்னோட ஆக்சன் வடிவேலு மாதிரியிருக்குன்னு லாஸ்லியாவைப் பார்த்துச் சொன்னதும் அம்மணிக்கு கோபம் வந்து அடுத்தவங்களை மட்டம்தட்டிப் பேசாதேன்னு சொல்லிருச்சு... அவனும் சரி சும்மா ஜாலிக்குத்தான் சொல்லுறான்னு நினைச்சுப் பேச... உண்மையிலதான் சொல்றேன்னு சொல்லிடுச்சு.... வடிவேலு காமெடி பீசென்றாலும் இன்றைய இணையத்தில் அவர்தான் ஹீரோன்னு லாஸ்லியாவுக்குத் தெரியாமப் போச்சு... அப்புறம் பாத்திரம் கழுவும் இடத்திலும் கேட்டு உறுதிப்படுத்தி சாரி கேட்கிறான் முகன். அப்ப என்னடா அவ கூட கடலைன்னு தன் காதலைக் காத்துக் கொள்ளும்விதமாக அபிராமி முகனுக்கு சாக்லெட் தரக் கூப்பிட, லாஸ்லியா சொன்ன கடுப்புல இதுக்கிட்ட கொஞ்சம் வேகமாப் பேசிட்டு... அப்புறம் கழிவறையில் அமர்ந்து விளக்கம் கொடுத்து அபியை சமாதானப்படுத்துகிறான். இந்தப் பயலுக பாவம் இவளுங்ககிட்ட மாட்டிக்கிட்டு படுறபாடு இருக்கெ... யெப்பா... சாமிகளா... இந்த மெழுகுவர்த்திதான் வேணுமான்னு கொஞ்சம் யோசிங்கடா.



அப்புறம் தண்ணியில்லா நீச்சல் குளத்துக்குள்ள கவின், சாண்டி, முகனின் சங்கீதக் கச்சேரி... விளக்குகள் அணைக்கப்படுகிறது. வீடு அமைதியாகிறது.



சாண்டி ரொம்ப சாதுர்யமாக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்...



கவின் விலகியே நகர்ந்தால் நல்லது...



முகன் என்று எப்போது தன் நிஜ முகத்தைக் காட்டப் போகிறாரோ தெரியவில்லை...



சேரன் அப்படி நகர்தல் நலம் என்றே தோன்றுகிறது...



சரவணன் இனியும் இப்படித்தான் இருப்பேன் என்பது நல்லதல்ல...



சாக்சி வெளியேறப் போவோர் யார் என்ற நிலையில் இருப்பதால் கவினுடன் நெருக்கமாகக் கூடும்...



லாஸ்லியா மீண்டும் காதலில் விழாதிருத்தல் உள்ளம் காக்கும்...



மது அடங்கியிருப்பது அவருக்கே ஆபத்தாகும்...



தர்ஷன் காமெடிப் பீஸாகிக் கொண்டிருப்பதில் இருந்து மீள்தல் நல்லது...



அபிராமி ஆட்டம் பாட்டமெல்லாம் மூட்டை கட்டி வைத்திருப்பதால் என்ன லாபம் என்பதை உணர வேண்டும்...



ஷெரின் மொழிப் பிரச்சினைக்குள் மூழ்காதிருந்தால் முன்னேறலாம்...



ரேஷ்மா வடிவேலாக சோலோவாய் மின்னினால் வெல்லலாம்...



மீரா பேசாதிருத்தல் எல்லாருக்கும் நலம் பயக்கும் அவருக்கும் சேர்த்தே...



பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (23-Jul-19, 6:34 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 40

மேலே