தேடிவந்து உன்னிடம் ஒப்படைக்கிறேன்

பிரம்மனின் அதீதக் கற்பனை வண்ணக் கலவையில்
பூத்த ஒற்றை மலராய்
அதோ அந்த அடர் கானகத்தே
கிளை ஏந்தலில்
உயிர் தாங்கி தவித்துக் கிடக்கிறேன்.....

எங்கிருந்தோ வரும் உன் மூச்சுக் காற்று
என்னருகில் வந்து
உன் தேடலை
முணங்கி விட்டுச் செல்கிறது...

ஆறுதலாய் படர்ந்த பனித்துளிகளைக் கூட
ஆதவன் கரங்கள் துடைத்துச் சென்றன....
வருடிய தென்றலை வசந்தம் முந்தானையில் முடிந்துக் கொண்டது......

அதோ...
ஆழ்ந்துக் கொண்டிருக்கிறது உருவமும் பருவமும்.....,

சொல்!எந்த அட்சரேகை தீர்க்ரேகையில்
நீ அமர்ந்து கொண்டிருக்கிறாய்.... ?
உள்வாங்கி தேக்கி வைத்துள்ள என் வாசத்தை
தேடிவந்து உன்னிடம்
ஒப்படைத்துச் செல்கிறேன் .....!

எழுதியவர் : வை.அமுதா (13-Aug-19, 9:13 pm)
பார்வை : 107

மேலே