பிக்பாஸ் - கஸ்தூரியிடம் பல்ப் வாங்கிய கமல்

பிக்பாஸ்ல கமலஹாசனுக்கு உடையலங்காரம் ஏன் இப்படிப் பண்ணுறானுங்கன்னு தெரியல... ஆரம்பத்துல நல்லாத்தான் இருந்துச்சு... இப்பல்லாம் வித்தியாசமாப் பண்றேன்னு என்னமோ செய்யிறானுங்க... நேற்று மாட்டுக்கு மஞ்சக் கொத்து கட்டுன மாதிரி கையில, பாக்கெட்டுலன்னு மஞ்சள் கலர்... என்னமோ போடா நாராயணா... கதர்வேஷ்டி கட்டுனாக்கூட நல்லாயிருப்பே... இந்த உடைகளில் இளிச்சவாயன் மாதிரியே இருக்கேடான்னு சொல்ற மாதிரித்தான் இருக்கு.



நட்பில் மூணு வகை இருக்கு... ஆனா இது நட்புத்தானா..?, புதியவரின் வருகை புயலைக் கிளப்பியதா... புதியவர் வந்தாலே இருப்பவர்களுக்குப் பிடிப்பதில்லை... நான் அரசியல் பேசலை..., பழையனக் கழிதலும் புதியனப் புகுதலும் தேவை என என்னென்னமோ பேசி, இப்பல்லாம் கமல் சிறப்பாய் பேசுவதைவிட அவர் போடும் டுவிட் போலத்தான் புரிந்தும் புரியாமலும் பேசுகிறார். வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகளைப் பாருங்க... நான் கொஞ்சம் வெளிய பொயிட்டு வாறேன்னு பொயிட்டார்.



காலை ஆடல் பாடல் சாக்சி மட்டும் ஆடாமல் சாண்டி எல்லாரையும் ஆட வச்சிக்கிட்டு இருந்தாரு. இதைப் பார்த்த பிக்பாஸ் இனி சாண்டி காலையில் பாடலுக்கு ஆடல் சொல்லித் தருவார்ங்கிற அறிவிப்பை விரைவில் செய்வார் என்றே தோன்றியது. காரணம் இத்தனை நாள் ஆட்டத்தில் இன்றைய ஆட்டம் மிகச் சிறப்பு.



அப்புறம் டைனிங்க் டேபிளில் பழைய ஆட்கள் எல்லாம் எனக்கு சைவம் நல்லாச் சமைக்கத் தெரியும் என உதார் விட்டு சங்கரைப் பொங்கலில் கடலைப்பருப்பு போட்ட கஸ்தூரியைக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். சாண்டி அந்த இடத்தைக் கலகலப்பாக வைத்திருந்தார். கஸ்தூரியை மட்டுமின்றி அபிராமி சிக்கன் குழம்பு என்பதால் தனியே சாப்பிடுவதைக் குறிப்பிட்டு முகனிடம் இன்னைக்குத்தான் நீ நிம்மதியாச் சாப்பிடுவே இல்லையா என நகைச்சுவையாய் கேட்டது செம.



சரி தின்னாச்சு... கதையடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி... எப்பத்தான்டா பத்திக்கும்... மழையில பதத்துப்போன தீக்குச்சி மாதிரி இந்த வாரம் பூராவும் போய்க்கிட்டு இருக்கு... கொஞ்சமாச்சும் பத்திங்கங்கப்பான்னு சொல்லி பேஷன் ஷோ நடத்துங்கடான்னு சொல்லி, இப்பவும் நடுவர் கஸ்தூரின்னு சொல்லிட்டாரு... ஐய்யா பிக்பாசு கஸ்தூரிய வந்த வேலையைச் செய்ய விடு வாத்தியாரம்மாவாகவே வச்சிருந்தியன்ன அது எப்ப குழாயடிச் சண்டையை ஆரம்பிக்கிறது.



ஜோடி போடணும்ன்னு சொன்ன உடனே இருட்டுக் கடை அல்லாவுல கொஞ்சமாய் மிக்சரும் தேனும் கலந்து கடலை உருண்டையைக் கடிச்சிக்கிட்டே திங்கிற மாதிரி தித்திப்போட ஒரு மூணு ஜோடி கிளம்பிடும்... அதுதாங்க கவின்-லாஸ்லியா, முகன்-அபி, தர்ஷன்-ஷெரின்... இனி பிக்பாஸ் இந்த மாதிரி போட்டியில ஜோடியை மாத்திக்கணும்ன்னு சொன்னாத்தான் மாத்துவானுங்க... அதுவரைக்கும் புருஷன்-பொண்டாட்டி கதைதான். சேரன்-மது, பாவம் சாக்சி... நேத்து வந்தவளோட புருஷன் பொயிட்டதால கொழுந்தனோட (கவினின் அண்ணன் சாண்டி) கூட்டுப் போட்டுச்சு.



எல்லாரும் நல்லாத்தான் நடந்தாங்க... சேரனோட ராசிப்படி கைதட்டல், விசில்ன்னு எல்லாமே சூப்பராய் இருந்துச்சு. தர்ஷன் உடம்பைக் காட்டிக்கிட்டு நடந்தான். எல்லாம் முடிந்ததும் கஸ்தூரி 'மிஸ் மெட்ராஸ்' பட்டம் பெற்றவங்க வேறயா... ஒரு நடை நடந்தாங்க... மீரா இருந்திருக்கணும்... குட்டை டவுசரில் கெத்துக் காட்டியிருக்கும். முடிவில் தர்ஷனுக்கும் சாக்சிக்கும் பட்டம் போயாச்சு... அப்புறம் எல்லாருக்கும் டிரஸ் அனுப்பிச்சு வச்சானுங்க.



அப்புறம் ஆளாளுக்கு ஆங்காங்கே பேசிக்கொண்டிருக்க, ஷெரின் எப்பவும் தன் பின்னாலயே திரியலைன்னு ஷாக்சிக்கு வருத்தமாம். தனக்கு உடல் நலமில்லை என்ற போதிலும் அதை விடுத்து கவின் எங்கிட்ட பேசலை அதை என்னன்னு கேளு... முகன் கூட நான் பேசினா அபி சண்டைக்கு வர்றா என்னன்னு கேளு... லாஸ்லியா என்னோட லைன்ல ரொம்பவே கிராஸ் பண்ணுறா அவள என்னன்னு கேளு... எல்லாருமாச் சேர்ந்து எனக்கு முன்ன 'மனசு துடிக்கு அவ்வ... அவ்வா...' பாடுறாங்க என்னான்னு கேளுன்னு கொல்லுறா இவ பின்னாடியே நாந்திரிஞ்சா நானும் எப்பத்தான் விளையாடுறது... தலையாகிறதுன்னு சேரன்கிட்ட புலம்பிக்கிட்டு இருந்துச்சு.



இங்கேருத்தா... அது கருத்தான புள்ள... நம்மள லூசாக்கி அது ஜெயிக்கப் பாக்குதுன்னு எல்லாம் நினைச்சிடாதே... அதுக்கிட்ட கருத்து மண்ணெல்லாம் இல்லை... சின்னப்பிள்ளையாட்டம் எல்லாரும் எனக்கு ஆதரவா இருக்கணும்ன்னு நினைக்கிது... அதுல கொஞ்சம் கூடுதலா உன்னைய ஆத்தாவாட்டம் நினைக்கிதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தார் சேரன்.



அப்புடியே அங்கிட்டு இருக்க கேமரா சாக்சியும் கஸ்தூரியும்... வில்லியும் வில்லியும் லாவணி பாடுவாங்கன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு... இந்த வாரம் நீயா...லாஸ்லியாவா... யாரு போனா நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன்னு சாக்சிக்கிட்ட கஸ்தூரி கேட்க, ரெண்டு பேருமே இருந்தாத்தான் இந்தக் கேம் நல்லாயிருக்கும்... இல்லேன்னா கவின் உனக்கும் ரூட் விடுவான்னு சொல்லிட்டு முகத்தை கக்காவ மித்த குழந்தை மாதிரி வச்சிக்கிட்டு உக்காந்திருச்சு.



பிக்பாஸ் சாண்டிக்கிட்ட நீயும் கவினும் நாமினேசன்ல இருக்க மூணு புள்ளைங்களுக்கும் தனித்தனியா முக்கனியில பாட்டெழுதுங்க... இது உங்க சீக்ரெட் டாஸ்க்... யாருக்கும் தெரியக்கூடாதுன்னு சொல்ல, எப்பவும் போல சாண்டி 'சரி குருநாதா'ன்னதும் பிக்பாஸ் 'நீங்க போகலாம் சிஷ்யா'ன்னு சொல்லிட்டாரா... சாண்டிக்கு செம சந்தோஷம். பிக்பாஸூம் கமலைப் போல சாண்டியோட ரசிகராயிட்டார்ன்னு தோணுது.



இந்தக் கருமத்தை இன்னும் எம்புட்டு நேரமுடா பாக்குறதுன்னு நினைக்கும் போதே ஆண்டவர் எழுந்தருளினார்.



கஸ்தூரியை வரவேற்று போன வேலையைச் சிறப்பாச் செய்வேன்னு பார்த்தேன். ஆனா நீ போன பின்னாலதான் பிக்பாஸ் சிரிப்பாச் சிரிக்குதுன்னு சொல்லி எப்ப ஆரம்பிப்பேன்னு கேட்டுத் தொலைக்க அது என்னவோ பேசிச்சு... அப்புறம் எல்லாரையும் பத்திச் சொல்லுன்னா... நம்மளைக் கொன்னுச்சு... நீ லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறியான்னு ஒரு வசனம் இருக்குமே அதைச் சத்தமாக் கேட்கணும்ன்னு நாம இல்ல உள்ள பக்கத்துல உட்கார்ந்திருந்த எல்லாருக்கும் தோணியிருக்கும்.



ஆத்தா நீ பேசினது போதும் ஹீரோ, ஜீரோ, வில்லன் கொடுன்னு சொன்னதும் தர்ஷன்-ஷெரினைக் கூப்பிட்டு மாலை மாத்திக்கச் சொன்னுச்சு... அடி பாதகத்தின்னு சேரனும் மதுவும் பார்க்க, உன்னைய புரோக்கிராம் தூங்காம நடக்க வழி பண்ணச் சொல்லி அனுப்புனா புரோகிதர் வேலை பாக்குறேன்னு கமல் பயந்து கையில் மாலையைக் கொடுத்துடுன்னு கத்திட்டார். பொண்ணுகளை ஏமாத்துறதால நீதான்டா ஜீரோன்னு கவினுக்கு கொடுத்துச்சு... பய ஒருநாள் காண்டாகி திரும்பத் திரும்ப பேசுறீங்கடான்னு எல்லாரையும் தூக்கிப் போட்டு மிதிக்காம இருந்தாச் சரி.



அப்புறம் ஏம்மா உன்னோட ஹீரோ யாரும்மா... அதைச் சொல்லுன்னு கேட்க, நீங்கதான் சார்ன்னு அப்ளிகேஷனைப் போட்டுருச்சு... ஆத்தாடி நமக்கே ஒரு டுவிட்டை தள்ளிருச்சேன்னு ஆண்டவர் அவசரமா அடுத்த கட்டத்துக்குத் தாவினார்.



முகனிடம் கட்டில் விவரத்தைப் பேசினார்... அபியிடம் இது நட்பா அதையும் தாண்டியான்னு கேட்டதும்... நான் அவனை விரும்புறேன்... இதில் மாற்றுக் கருத்தும் இல்லை... மாத்திக்கவும் முடியாது... வேணுமின்னா அந்தக் குட்டியை காதல் வேண்டான்னு போகச் சொல்லுய்யான்னு சொல்லிடுச்சு. முகன் எனக்கு அவ தோழி அவளுக்கு நான் காதலன்னு சொல்லிட்டான். நீங்க தோழியாகவோ காதலியாகவோ இருங்கள்... ஆனால் முகன் விளையாட, அவர் வந்த நோக்கம் நிறைவேறத் தடையாக இருக்காதீர்கள் என்றார். மேலும் சேரனையும் இழுத்து தெருவில் விட்டு அறிவுரை சொல்லச் சொன்னார் மனதளவில் முகினை விட அபியே அதிகம் பாதிக்கப்படும் சாத்தியக்கூறு இருக்கு எனத் தெள்ளத் தெளிவாய் எடுத்து வைத்தார் இயக்குநர் சேரன். உடனே எப்பவும் போல் பஞ்சரான டயராட்டம் மொகரையை வச்சிக்கிட்டு அழ ஆரம்பிச்சிருச்சு.



அழுது தீருங்கள்... அதுவரை நான் வெளியேன்னு கிளம்பிட்டார். உள்ளே அபிக்கு எல்லாரும் ஆறுதலாய்... நீங்க யாரும் எனக்கு ஆறுதல் சொல்லாதீங்க... நான் கக்கூஸ்ல போயி அழுதுக்கிறேன்னு போக, லாஸ்லியா பின்னாலயே போய்த் தேற்றினார். அனுபவசாலியாய்... பின்னே இருக்காதா என்ன... விவரமாய்ப் பேசினார். முகனுக்கு அவ கூட அதிக நேரம் செலவிடாதே... உன்னால அவ வாழ்க்கை பாதிக்கும்ன்னு சேரன், மது, கவின் என எல்லாருமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.



மீண்டும் வந்த கமல், டெவில் ஏஞ்சல் விளையாட்டை விளையாடினார்... சேரப்பா எனக்கு எப்பவும் ஏஞ்சல் என லாஸ் சொன்னது... அப்பாக்களுக்கு எப்பவுமே மகள்கள் ஏஞ்சல்தான்... இதை மேடை போட்டுத்தான் சொல்லணுமின்னு இல்லை அதனால நான் ஷெரினுக்கு சேரன் கொடுத்தது... லாஸ்தான் என்னோட ஏஞ்சல்... இதை அவ தலையில வச்சா சாக்சி தலைகீழா நின்னிருவா... அதனால எப்பவும் போல சாண்டி தலையில வைக்கிறேன் என கவினும் எனக்கு எப்பவும் ஏஞ்சல் ஷெரின்தான் என தர்ஷனும் வைக்க... அதிகமான ஏஞ்சல் இறகுகளைப் பெற்றவர் ஷெரின்.



சாக்லெட்டை திருடிட்டாங்கன்னு சொல்ற மதுவுக்கு டெவில் என சேரன்... கஸ்தூரிதான் டெவில் என லாஸ், என்னோட என்னைப் புரிஞ்ச டெவில் சாக்சிதான் என ஷெரின், ஷெரினை காயப்படுத்துற அதனால சாக்சிக்கு என தர்ஷனும் முகினைப் படுத்தி எடுக்கிறா அபி என கவினும் சாண்டியும் என்னை தர்ஷனுக்கு குடை பிடிக்க வச்சாங்க கஸ்தூரி என மதுவும் சொல்ல, அதிகமான டெவில் கொம்புகளைப் பெற்றவர் அபியானார்.



அப்புறம் இந்த வாரத் தலைவர் தேர்வு தீர்ப்பில் சேரனுக்கு உடன்பாடில்லை என்பதைக் கேட்டார். நமக்கே தெரியும் அதிகமான சிகப்புக்கலர் இருந்த இடத்தில் சாண்டி வெற்றி பெற்றார் என சொல்லிய வரலாற்றுச் சிறப்பு மிக்க குமாரசாமித் தீர்ப்பின் விவரம்... சேரனும் அதைச் சொல்லி, இருந்தாலும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டேன் சார் என்றார். கமலும் விடாமல் அடுத்த நாமினேசனில் தப்பியிருக்கலாம் தலைவராயிருந்தால் இல்லையான்னு கேட்டதும் ஆமா சார்...எதுக்குக் குத்துறோம்ன்னு தெரியாம எனக்குக் குத்துவானுங்க சார்... இருந்தாலும் சாண்டி இருமுறை நண்பர்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்.... அதனால அவர் வந்ததில் சந்தோஷமே என்றார். இதுதான் சேரனைப் பிடிப்பதற்கான காரணமே.



அடுத்து நாமினேசனில் இருப்பவர்களைப் பார்த்து நாளைக்குச் சொல்றேன்னு கமல் கிளம்பிட்டார்.



கடந்த இரண்டு வாரமாக கமலில் பேச்சில் உற்சாகமில்லை... பல இடங்களில் யோசித்து இழுக்கிறார். கஸ்தூரியை போன வேலையைப் பார்க்கலையேன்னு கேட்கும் போது குணா கமல் போல் இழுத்து இழுத்துப் வார்த்தை வராதது போல் மென்று முழுங்கிப் பெசினார். கஸ்தூரி வில்லி வேலை செய்யாமல் வந்தால் ஏன் செய்யலைன்னு திட்டுவீங்க போலவே சார் எனப் போட்டு உடைக்க என்ன சொல்வதென்று தெரியாமல் அசடு வழிந்தார். எல்லாருக்கும் பல்ப் கொடுக்கும் கமல் பல்ப் வாங்கி பரிதாபமாக முழித்துச் சிரித்து மெல்லக் கரையைக் கடந்து வந்தார்.



கமல் கமலாய்... கம்பீரமாய் நடத்தும் போதுதான் பிக்பாஸ் உண்மையில் பாஸ் ஆகும்... பட்பட்டெனப் பேசும் கமல் எங்கே போனார்...? இன்றாவது மீண்டு வருவாரா..?



பிக்பாஸ் தொடரும்.

-'பரிவை' சே.குமார்.

எழுதியவர் : சே.குமார் (14-Aug-19, 1:19 pm)
சேர்த்தது : சே.குமார்
பார்வை : 62

மேலே