உன்னுள் இருக்கும் உயர்வைப் பேணி வளர்த்துப் பெருக்கினால் பேரின்பம் - நிலை, தருமதீபிகை 390
நேரிசை வெண்பா
உன்னுள் இருக்கும் உயர்வைப் பிறருடைய
இன்னுரையில் கேட்டின்பம் எய்துகின்றாய்; - பின்னுமதைப்
பேணி வளர்த்துப் பெருக்கினால் பேரின்பம்
காணுங்காண் காட்டும் கதி. 390
- நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
உன்னுடைய உயர்வைக் குறித்துப் பிறர் புகழ்ந்து சொன்னால் நீ உவந்து கொள்ளுகின்றாய்; அந்த ஆன்ம மேன்மையை மேலே பெருக்கினால் பேரின்ப முத்தி நேரே தோன்றும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
மனிதனுடைய இன்ப உணர்ச்சிகள் பலவகை நிலைகளில் பரவியிருக்கின்றன. பொறி நுகர்ச்சிகளில் பெரும்பாலும் விரும்பிய சுகங்களை அனுபவித்து வரினும், அறிவு நூல்களைக் கற்பதிலும், அயலார் புகழ்ந்து சொல்லும் துதி மொழிகளைக் கேட்பதிலும் அதிக இன்பங்களை அனுபவிக்கின்றான்.
என்ன வகையிலாவது தன்னைக் குறித்துப் பிறர் உயர்வாக எண்ணவும் பேசவும் வேண்டும் என்றே இரவும் பகலும் ஏங்கி நிற்கின்றான். இந்த ஏக்கம் யாரிடமும் யாண்டும் பரவியிருத்தலால் உயிரினங்கள் எவ்வழியும் உயர்வையே அவாவி நிற்கும் இயல்பின என்னும் உண்மை தெளிவாகின்றது.
‘உன்னுள்ளிருக்கும் உயர்வை’ என்றது உயர்ச்சி புறத்தில் இல்லை; உனது அகத்திலேயே உள்ளது என உணர்த்தியது.
சிறந்த செல்வன், உயர்ந்த பண்டிதன், பெரிய போர்வீரன், அரிய கொடையாளி, நல்ல நீதிமான், தரும சீலன் என்னும் இன்ன வகையான உயர் மொழிகள் மக்களுக்கு உவகையூட்டி வருகின்றன. துதி ஒலிகள் சுக ஒளிகளாய் மிளிர்கின்றன.
தனது தன்மை உயர மனிதன் நன்மையில் உயர்கின்றான். இனிய இயல்புகளும் இத நலங்களும் மனித சமுதாயத்தில் தனியாகவே மதிப்புகள் அடைகின்றன.
நல்ல நீரை யாரும் நயந்து பருகுதல் போல் நல்ல நீர்மையாளனை உலகம் உவந்து புகழ்கின்றது. எண்ணங்கள் உயர்ந்து கண்ணிய நீர்மைகள் கனிந்த பொழுது மனிதன் புண்ணியவானாய்ப் பொலிந்து திகழுகின்றான். அவனிடம் தெய்வத் தேசு மிகுந்துள்ளமையால் வையம் முழுவதும் அவனை வாழ்த்த நேர்கின்றது. அவன் பிறப்பே புனிதமாய் மதிக்கப் படுகின்றது.
A wit’s a feather, and a chief a rod;
An honest man's the noblest work of God. - Pope
‘அறிவனையும், அரசனையும் விட நெறியுடையான் கடவுளின் உன்னத சிருட்டியாய் ஒளி பெற்றுள்ளான்” என்னும் இது ஈண்டு உணரவுரியது.
சத்தியமும் நேர்மையும் சித்த சுத்தியும் வாய்ந்திருத்தலால் உத்தமனை எல்லாரும் போற்றிப் புகழ்கின்றார்.
இனிமையான புனித நீர்மைகளால் மனிதன் உயர்கின்றான்; உயர்வு எல்லாம் அவனிடமே உள்ளன; அயலே யாதும் இல்லை. தன்னைத் தானே உயர்த்திக் கொள்ளாதவன் சின்னவனாய்ச் சீரழிகின்றான். அரிய குணங்கள் பெரிய இனங்களாகின்றன.
பண்பால் உயர்ந்தவன் விண்பாலும் மண்பாலும் வியந்து நோக்க எண்பாலும் இனியனாய் இனிது விளங்கி நிற்கின்றான்.
Man is his own star, and that soul that can
Be honest is the only perfect man. - Fletcher
'தரும சீலன் இனிய திருவினன்; அவனே பரிபூரணமான மனிதன்' என பிளெச்சர் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
குணங்கள் நிறைய நிறைய மனிதன் தெய்வ ஒளியாய்ச் சிறந்து திகழ்கின்றான். மேன்மையான நிலைகள் யாவும் நல்ல பான்மைகளிலேயே பதிந்து வதிந்திருக்கின்றன.
இனிய இயல்பு வளரப் புனித நிலைமை ஒளிர்கின்றது.
’பேரின்பம் காணும்; கதி காட்டும்‘ என்றது தனது தன்மையை நன்மையாக ஒருவன் வளர்த்து வரின் இம்மை, மறுமை முதலிய எல்லா இன்ப நலங்களும் அவனிடம் எளிதே எய்தும் என்பது தெளிய வந்தது.
இன்னிசை வெண்பா
தானே தனக்குப் பகைவனும் நட்டானும்;
தானே தனக்கு மறுமையும் இம்மையும்;
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்
தானே தனக்குக் கரி. 151 அறநெறிச்சாரம்
மனிதன் இயல்பாகவே இனியவன்; உயர்ந்த பொருளிலிருந்து வந்தவன்; பரம் பொருளினுடைய சந்ததி, அவ்வழி மரபு ஒளி மறைவாயுள்ளது; உள்ளம் தூயனாய் உண்மை தெளி; எல்லா நன்மைகளும், இன்பங்களும் உன்பால் இனிது பெருகிவரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.