காதல் வாழ்க

காதல் வாழ்க!
=================================================ருத்ரா

சமுதாயம் எனும்
உடம்புக்குத்தான்
எத்தனை வலி?
எத்தனை வதம்?
கஞ்சிக்கவலையால்
"பசி"பிக் பெருங்கடலின்
பேரலைகள் ஒரு பக்கம்.
சாதி மதம் எனும் அசுரர்களின்
ரத்த வெறி ஒரு பக்கம்.
அரசியல் சகுனிகளின்
சூதாட்டங்கள் ஒரு பக்கம்.
மக்கள் அரசியலின் நியாயங்கள்
பாதாளங்களில்
வீழ்ந்து கிடப்பது ஒரு பக்கம்.
தமிழ் எனும் நம் மொழி
உலகத்துக்கே "அகர முதல"
ஆன போதிலும்
கந்தல் ஆக்கப்பட்டு
சிதைந்து கிடக்கிறது.
ஆனாலும்
நம் இளைஞர்கள்
அந்த விடியல் விளிம்பில் நின்று
இத்தனை வலிகளையும்
கடந்து அல்லது
மறந்து
ஒரு ரோஜாவை ஏந்தி
நிற்கிறார்கள்.
அதன் பெயர் "காதல்".
காதலுக்கு காதல் என்பது
மட்டும் அர்த்தம் அல்ல.
தீர்வுகள் முளைக்கும்
நாளைய புது வெளிச்சத்தின்
நம்பிக்கை என்றும் தான் அர்த்தம்.
"கல் பொரு சிறு நுரை.."
என்று குறுந்தொகை சொல்கிறதே!
அந்த பிரிவு வலியில்
ஊமை வலிகளாய்
எல்லாம் தான் ஒரு கிளர்வுக்கு
துடிக்கிறது.
வலிகள் நிறைந்தாலும்
வழிகளும் உண்டு இங்கு.
அதனால்
காதல் வாழ்க!

=====================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (26-Aug-19, 8:21 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kaadhal vazhga
பார்வை : 66

மேலே