மன்னித்து அருளினார்
கோவில் வளாகத்தில்
கூடி இருக்கும் பக்தர்கள் முன்
சிவனடியார் ஒருவர்
இறைவனின் சிறப்பு பற்றி
சொற்பொழிவு ஆற்றும்போது
நரகாசூரனைப் போல்
நாத்திகன் ஒருவன்
“ முட்டாள் “ என்று எழுதி
துண்டு காகிதமொன்றை
அடியாருக்கு அனுப்பி வைத்தான்
கிடைத்ததும் சிவனடியார்
கண நேரம் அமைதியானார்
கடிதம் பற்றி சொன்னார்
“ கடிதம் எழுதி விட்டு
கையெழுத்து போட
மறப்பவர்கள் மத்தியில்—இவர்
கையொப்பமிட்டு
கடிதத்தை எழுதாமல்
கொடுத்து அனுப்பி இருக்கிறார்,
“என்ன கவலையோ அவருக்கு” என்றார்
தவறிழைத்தவன்
தலை காட்ட முடியாமல்
தலை மறைவானான்,--அவனை
அவமானப்படுத்த மனமின்றி
அடியார் மன்னித்து அருளினார்.