மழலை என்னும் மாமருந்து

வெண்ணெயை திரட்டி வைத்து
பன்னீரில் குழைத்து எடுத்து
சின்னதாய் அச்சு வார்த்து
சன்னமாய் செய்த சிலை மழலை

மண்ணிலே சொர்க்கம் கண்ட
மானிட இரண்டு பேரால்
கருவாகி உருவான காவியக் குவியலே
கரும்பினும் இனிப்பான குழவியாம்

துன்பமெனும் நெருப்பு சூழ்ந்து
துக்கம் வந்து நெஞ்சையடைத்து
அஞ்சு வகை பாவம் வரிணும்
பிஞ்சு முகச்சிரிப்பு நம்மை சிலிர்ப்பாக்குமே

கொஞ்சும் நம் முகத்தைக் காணும்
அஞ்சுகத்தின் அழகையொத்த
நஞ்சுயில்லா நெஞ்சம் கொண்ட
பஞ்சு தேகப்பதுமை பேச்சில் மயங்குவோமே
- - - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (9-Sep-19, 8:31 pm)
பார்வை : 1584

மேலே