காதலிக்க விடு

மௌனமாகவே பேசலாம்
நமக்குண்டான வார்த்தைகள் கொஞ்சமேனும்
அழகாகட்டும்..
காதலில் நனைந்த சொற்கள் கோர்த்து
நாம் பேசும்பொழுது
சூழல் குளிர்ந்து மழைகூட வரலாம்
ஆகவே..எதற்கும் இரு கோப்பை
தேநீர் இருத்தல் சுகம்..
கரம்கோர்க்கும் இதம் போதுமே தேநீர் எதற்கு?
என்கிறாயா...
கரம் கோர்த்தலில் காமம் முளைத்து காதல்
மறைக்கும்
காதலை புசிப்போம்..ஆகவே
தேநீர் போதும்.
இந்த வெளியில்
வேறு யாரும் இருப்பதற்குண்டான அடையாளம் இல்லை..
நம் மூச்சுக்காற்று மட்டுமே சுழல்கிறது
இந்த குளிரும்
நீயும்
என்னுள் வேறு உலகத்தினை உருவாக்கிக்கொண்டுள்ளீர்கள்..
மீண்டுமொருமுறை கிடைக்காத ஏகாந்தமிது
உன் திருமண அழைப்பிதழை கிடத்திவிட்டு
காதலிக்க விடு.

எழுதியவர் : M.Rafiq (11-Sep-19, 5:56 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : kaadhalikka vidu
பார்வை : 117

மேலே