இறைவா

புகழத்தான் மொழிகள் தகுமோ
எழுதத்தான் வார்த்தை தகுமோ
நினைக்கத்தான் உள்ளம் தகுமோ
இறைவா..உன் வல்லமையை..
வான் வெளிகள் விண்மீன்கள்
ஆழ்கடலின் அற்புதங்கள்
காடுமலை நதி வயல்கள்
இறைவா..உன் படைப்பினங்கள்..
ஓருவமை உனக்குண்டோ?
உனதழகிற்கீடுண்டோ?
ஆற்றலுக்கோர் அளவுமுண்டோ?
இறைவா..உன் தகுதி இவை..
கண்கள் காணும் யாவினுமே
கண்கள் அறியா யாவினுமே
உள்ளம் தேடும் யாவினுமே
இறைவா..உன் கற்பனைகள்..
புகழ் மழையை பொழிந்தாலும் - இல்லை
யார் புகழ மறந்தாலும்
ஓரணுவும் குறையாது
இறைவா உன் பெரும்புகழ்கள் ..
ஒப்பவுமை ஏதுமின்றி
தனித்தவனாய் உயர்ந்தவனாய்
இணைதுணை ஏதுமில்லாத
இறைவா ..நீயே இறைவன்
சாட்சி நான் கூறுகிறேன்
உயிர்வரை தர விழைகின்றேன்
தனித்தவன் மிகத்தூயவனே
இறைவா..நீயே இறைவன்.

எழுதியவர் : M.Rafiq (19-Sep-19, 6:49 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : iraivaa
பார்வை : 413

மேலே