உன்னைத்தான் தம்பி
முடக்கிவிடுகிறது மனிதனை
முதுமை,
உடலிலும் மனதிலும்
கைவைத்துவிடுகிறது காலம்..
வியப்புக் குறியாய்
நிமிர்ந்திருந்த முதுகு
வளைந்து
வினாக் குறியாகித்
தடி எடுத்தவனைத்
தடுமாறித்
தடி பிடிக்க வைத்துவிடுகிறது..
ஊனமில்லா உள்ளத்தையும்
முதுமை
ஊனமாக்கிவிடுகிறது
தனிமையில் தள்ளி..
உறவுகளின்
உண்மை நிலைகாட்டிப்
பிறக்கவைக்கிறது ஞானம்..
தம்பி
துடிக்கும் இளைஞனே,
தடுக்கமுடியாது உனக்கும்
முதுமை வருவதை..
அதனால்
தவிக்க விட்டுவிடாதே
முதியவர்களை,
தவிக்கவிடப்பட்டவர்களுக்கு
உதவி செய்து
பரிசாய்ப் பெற்றுக்கொள்-
அனுபவத்தை...!