உற்ற கருமம் மறந்து விடின் மதிகேடு துன்பம் நிறைந்து விடும் - மறதி, தருமதீபிகை 482

நேரிசை வெண்பா

உற்ற கருமம் உரிய பருவத்தே
முற்ற வுணர்ந்து முடியாமல் - சற்றே
மறந்து விடினோ மதிகேடு துன்பம்
நிறைந்து விடுமே நிலைத்து. 482

- மறதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

செய்ய வேண்டிய கருமத்தை உரிய பருவத்தில் கருதிச் செய்யாமல் சிறிது மறதியாயிருப்பின் பெரிய கேடுகள் பல நிலையாய்ப் பெருகி விடும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பருவம், பக்குவம் என்னும் மொழிகள் அரிய இனிய பொருள்களுடையன. யாதொரு எல்லையும் இல்லாமல் எப்பொழுதும் காலம் ஓடிக் கொண்டே யிருக்கின்றது. யாராலும் அணை கோலி நிறுத்த முடியாத அந்தக் காலத்தைத் தக்க சமயத்தில் தனக்கு உரிமையாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றவன் மிக்க பயனை அடைந்து மேன்மையாய் விளங்குகின்றான்.

கருத்தும் கவனமும் வாழ்வை வளம்படுத்தி வருவாயை விருத்தி செய்து வியனான பலன்களை விளைத்தருளுகின்றன. கூர்மையாக ஓர்ந்து செய்த பொழுதுதான் கருமங்கள் சீர்மையாய்ச் சிறந்து திகழுகின்றன.

உரிய பருவத்தில் செய்கின்ற எதுவும் பெரிய சுவையாய்ப் பேரின்பம் தருகின்றது தக்க தருணத்தில் செய்கின்ற உழவன் மிக்க விளைபொருள்களை அடைகின்றான்; அங்ஙனம் சமயம் அறிந்து செய்யாதவன் வருவாய் குன்றி அவலமடைந்து நிற்கின்றான், கவலையுடைய அவன் பின்பு தன்பிழையை உணர்கின்றான். பருவம் தவறி விட்டது என்று பருவரலுறுகின்றான்.

’காற்று உள்ள போதே தூற்றிக் கொள்’ என்னும் முதுமொழி காலத்தைப் போற்றி ஒழுகும்படி மனிதனுக்குப் புத்தி போதித்துள்ளது.

“Time and tide waits for no man"

'காலமும் அலையும் யாருக்கும் காத்து நில்லாது” என்னும் இது எல்லாருக்கும் நல்ல ஒரு நீதியைத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது. பொழுது வழுவின் பழுது வழியும்.

’அலை அடிக்கும் பொழுதே தலை முழுகிக் கொள்ளுக’ என்பது பழமொழி, காலம் வாய்க்கும் போதே காரியத்தைச் செய்து கொள்ளுகின்றவன் வீரியவானாகின்றான். மறந்தோ, அயர்ந்தோ நிற்பவன் சிறந்த பயனை அடையாமல் இழிந்தே போகின்றான்.

There is a tide in the affairs of men,
Which, taken at the flood, leads on to fortune;
Omitted, all the voyage of their life
Is bound in shallows and in miseries. - Julius Ceasar 4-3

'உலக மக்களுக்கு ஒரு பருவ அலை உளது; அதனை உரிமையாகத் தழுவிக் கொண்டவர்களைப் பெரிய செல்வ நிலைகளில் அது இனிது சேர்த்தருளுகின்றது; தழுவாது நழுவவிட்டவர் வாழ்நாள் முழுவதும் வறுமைத் துயர்களில் மறுகி உழல்கின்றனர்' என ரோமாபுரி வீரனான புருட்டஸ் இவ்வாறு ஒருமுறை கூறியிருக்கிறான். இாண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரிருந்த ஒரு இராசதந்திரி பருவம் தவறவிடின் படுதுயராம் என்று பதறியிருத்தலால் மறதியின் கொடுமை எளிதே புலனாகின்றது.

’மறந்து விடின் துன்பம் நிறைந்து விடும்’ உற்ற சமயத்தை உரிமையாகப் பயன்படுத்தாமல் ஒருவன் மறந்து விட்டானானால் பின்பு அவன் அழும்படியான கொடிய துயரங்கள் பெருகி விடும்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

உரியதன் கருமத்தை ஓர்ந்து செய்பவன்
பெரியவன் எனவரும் பெருமை காண்கின்றான்;
கரியபுன் மறதியான் கடையன் ஆகியே
அரியநன் னலமிழந்(து) அவலம் ஆர்கின்றான்.

மறதியால் மனித வாழ்வு பாழ்படுகின்றது; அதனை மருவ விடாமல் மதி நலம் பேணுவது கதிகலம் காணுவதாம்.

உயிர் வாழ்வின் உயர்நலங்கள் எல்லாம் ஊன்றிய உணர்வு நிலைகளால் உளவாகி வருகின்றன; இவ்வுண்மையை ஓர்ந்து நன்மையை மறவாமல் நாடிக் கொள்ள வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Oct-19, 10:19 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே