தமிழ்த்தாய் சூடிய அணிகலன்கள்

எழிலார்ந்த கன்னியவள் இளமையுடன் மிளிர்பவளாம்
மொழிகளுக்கே தாயவளாம் மூன்றாகத் திகழ்பவளாம்
அழகான இலக்கணத்தை அரணாக உடையவளாம்
அழிவில்லா இலக்கியங்கள் அணியாகக் கொண்டவளாம் !!

பொன்னொளிரும் மேனியிலே பொலிவான அணிகலன்கள்
அன்னையவள் தான்சூடி அகம்சிலிர்க்க வைத்திடுவாள்
இன்னமுதை யும்மிஞ்சும் ஈடில்லாச் சுவையுடையாள்
தொன்மைமிக்க அவள்மரபைத் தொல்காப்பி யம்பேசும் !!

அருந்தமிழாள் சூடியுள்ள அணிமணிக்கு நிகரேது
கருணையுள மார்மீது கவின்மிகுசிந் தாமணியும்
மருதாணி யிட்டகையில் மயக்குவளை யாபதியும்
திருவடியில் சிலம்பொலிக்கத் தேன்பாயும் செவியோரம் !!

ஒள்ளொலியாய்ச் சிற்றிடையில் ஒப்பில்லா மேகலையும்
உள்ளமள்ளும் பேரெழிலாய் உச்சியில்சூ ளாமணியும்
கொள்ளையழ காய்க்காதில் குண்டலகே சியுமாட
வள்ளுவனார் திருக்குறளும் மணிமகுட மாய்ச்சிறக்கும் !!

இரட்டைமணி மாலைசூடி இளமையாகச் சிரித்திடுவாள்
திருப்புகழும் வாசகமும் திருப்பாவை தேவாரம்
புருவங்கட் கிடையினிலே பொட்டாக அலங்கரிக்க
வரமருளும் தமிழ்த்தாயின் மலரடியைப் பணிவோமே ...!!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-19, 10:53 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 39

மேலே