மனைவி அமைவதெல்லாம்

ஆயிரம் காலத்து பயிர்
அது கருகிக்போச்சு
உயிர்மூச்சு நின்னுப்போச்சு
விட்டுக்கொடுத்தல் எனும்
நீர் பாய்ச்சாததால்

திருமுடிச்சு மூன்று அதில்
ஒரு முடிச்சு அவிழ்ந்தாலும் வாழ்க்கை சிறகொடிந்த பறவைப்போல்

உனக்காக நான்
எனக்காக நீ
ஈருடல் ஓருயிர்
என அக்னிசாட்சியாய்
இணைந்த பந்தம்
சந்தேக ஜுவாலையில்
சிக்கி தவிக்குது

நீயொரு திசைக்கு
நானொரு திசைக்கு
துடுப்பாட்டினால்
கரைசேருமா
வாழ்க்கையெனும் படகு

ஊடல்
வாழ்க்கையில்
கூடி கலையும் மேகம்போல்
நம்வாழ்வில் மட்டும் அது
கலையாத ஆகாயம் போல் உள்ளது

இன்றுவரை உன்
கருத்துவேறுபாடு எனும்
புயலில் சிக்கி
வளைந்து ஒடியாத நாணலாய்
நிற்கிறேன்
நீயோ சூறாவளி காற்றாய்
வேரறுக்க பார்க்கிறாய்

என்று வருமோ
புயலுக்குப்பின் வரும் அமைதி
நம் வாழ்வில்..

.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (14-Oct-19, 10:05 am)
பார்வை : 262

மேலே