அப்பாவென நீயழைக்கையில்

அப்பாவென நீயழைக்கையில் அகமுழுவதும் சிலிர்க்கும்
எப்போதுமுன் எழிற்பூமுகம் இதயந்தனி லினிக்கும்
முப்போதிலு மென்நெஞ்சமுன் முத்தங்களை நினைக்கும்
ஒப்பாருனக் கிலையெனும்படி உயர்வெய்திட மலைக்கும் !!

துவளுங்கண முன்பார்வையில் துடித்தெழுந்திட வேண்டும்
உவகையில்மனம் துளிர்த்தாடிட உயிர்பூத்திட வேண்டும்
தவப்பயனென ஊர்மெச்சிடும் தகைமையைப்பெற வேண்டும்
அவையத்துனை முன்நிறுத்தியென் அகங்குளிர்ந்திட வேண்டும் !!

அறிவைத்தரும் சிறப்பைத்தரும் அமுதத்தமிழ் பயில்வாய்
அறப்பணிகளில் மனம்லயித்திடில் அன்பேசிவம் உணர்வாய்
சிறகுகள்விரி! தடைகளைமுறி! சிகரத்தினைத் தொடுவாய்
திறன்வளர்த்திடு கடுமுழைப்பொடு செயல்முடிவுற மகிழ்வாய் !!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (23-Oct-19, 1:20 am)
பார்வை : 41

மேலே