கடுதாசி

நாத்து நட போயி
நாப்பது ரூவாயா வாங்கி
படிக்க வச்சன்....
என் ராசவ...

பட்டணம் போய்
படிக்கணும்னு... மிச்சத்துல
பத்துரூவாய சேர்த்து பட்டணமும்
அனுப்பி வச்சேன்....

புள்ளையும் படிச்சான்....
நானும் உழைச்சேன்....
காலாற உக்காந்தாலும்
கனமா கனக்குது ஒன்னெனப்பு...

நீ அனுப்புன கடுதாசி படிக்க எனக்கு தெரியல...
ஊருல படிச்சவனும் இல்ல....
அந்த போஸ்ட்மேனு படிக்க
காசு கேக்குறான்....

சரி வாங்கன்னு சொல்லிட்டேன்....
இருந்தாலும் கைய கழுவிட்டு
நல்லா தொடச்சிட்டு...
பிரிச்சி வச்சிருக்கேன்....

ஏதோ வய நண்டு
வரிசையா போற மாதிரி இருக்கு...
இருந்தாலும் தெரியுது ராசா
உன் நெத்தில உள்ள பழைய தழும்பு....

சரியா... சாப்புட்டியா....
ராத்திரியில ஒத்தயில போவாத....
ஒத்தபாத முனியனுக்கு இன்னும்
கிடா வெட்டுல....

சரி ராசா.... அடுத்த பங்குனிக்குள்ள
இன்னொரு கடுதாசி போடு...

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (25-Oct-19, 5:18 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
பார்வை : 293

மேலே