மருத்துவ வெண்பா - வயல் நீர் - பாடல் 31
வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.
இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர்களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.
நேரிசை வெண்பா
மேகம்போந் தாகம்போம் வெட்டையுட னேசுரம்போந்
தேகங் குளிர்ச்சியுற்றுத் தேறுங்காண் - சோகமெல்லாம்
ஆறு மிரத்தகய மாறுநோய்க் கோபமிக
மாறும் வயற்புனக்கு வை.
– தேரையர், பதார்த்த குண சிந்தாமணி
குணம்:
வயல் நீரை அருந்துவதால் மேகம், தாகம், வெட்டை, சுரம் போய் விடும். உடல் குளிர்ச்சியுற்று நலம் பெறும். சோகம், இரத்த காயம் ஆறும். நோயினால் வரும் தீவிரம் மிகவே மாறிவிடும்.