மருத்துவ வெண்பா - வெற்றிலை பாக்கு போடும் முறை - பாடல் 39
நேரிசை வெண்பா
வெற்றிலைக்கு முன்னம் வெறும்பாக்கை வாயிலிட்டால்
குற்றம் உறும்உறவோர் கூட்டம்போம் - வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம்மார்பின்
மன்னிட்டு வாழும்பூ மாது.
(வெண்பா எழுதியவர் யாரென்று தெரியவில்லை! சித்தர்களில் யாராவது இயற்றி இருக்கலாம்)
பொருளுரை:
வெற்றிலை போடும்போது வெறும் பாக்கை முதலில் வாயில் போடுவது தவறாகும்.
(பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்).
மேலும் உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.
அதனால், முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மென்றால், மகா விஷ்ணுவின் இடது மார்பில் நிலையாக பூமகள் வாழும் மகாலட்சுமியின் அருளும் கிட்டும்.