கெட்டறிப கேளிரான் ஆய பயன் – நான்மணிக்கடிகை 3
இன்னிசை வெண்பா
மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து
ஏறிய பின்னறிப மாநலம் மாசறச்
சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப
கேளிரான் ஆய பயன். 3
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
மாணிக்கம் முதலான மணிகளின் நல்லியல்பை கழுவியறிவார்கள்;
குதிரையின் நல்லியல்பை அதன்மேற் சேணமமைத்து ஏறிய பின் அறிவார்கள்;
பொன்னின் மாற்றை யறிவார் குற்றங்கெட அதனை உருக்கியறிவார்கள்;
உறவினரால் உண்டாகும் பயனை செல்வமெல்லாங் கெட அறிவார்கள்.
கருத்து:
மக்கள், செல்வம் கெட்டு வறுமையுறும் போதுதான் அவர் உறவினரால் அவர்க்கு உண்டாகும் பயன் நன்கு அறியப்படும்.
விளக்கம்:
மண்ணல் - கழுவல். பண் - சேணத்தையுணர்த்துதல்,
பொன்னின் நலமென்பது, வெள்ளி முதலியன:கலவாமை. காண்பார் இதனை மற்றவற்றிற்குக் கூட்டியுரைத்தலுமாம்.
கேளிர் - ‘கேண்மை' யென்னும் பண்படியாகப் பிறந்த பல்லோர் படர்க்கைப் பெயர்.
செல்வ மிக்கான் ஒருவன் தான் வறுமையுற்ற காலத்துக் கேளிரின் நன்றியறிவை நன்கறிவானாதலின் ‘கெட்டறிப.....பயன்' என்றார்.