வெல்வது வேண்டின் வெகுளி விடல் - நான்மணிக்கடிகை 15
இன்னிசை வெண்பா
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசைநடுக தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல். 15
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
இழிவை ஒருவன் விரும்பினால் இரத்தலை மேற்கொள்க;
இவ்வுலகத்தில் எஞ்ஞான்றும் நிலைபெறுதலை விரும்பினால் புகழ் நிறுத்துக;
தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால் அறங்களைச் செய்க;
பிறரை வெல்லல் வேண்டினால் சினத்தை விடுக.
கருத்து:
இழிவை விரும்பினால் இரக்க; அழியாமை வேண்டினால் புகழ் புரிக; உறுதுணையை வேண்டினால் அறஞ்செய்க; வெல்லல் விரும்பினால் வெகுளியை விடுக.
விளக்கவுரை:
இன்னாமை - துன்பம். இங்கு இழிவு என்னுந் துன்பத்தை யுணர்த்திற்று.
புகழ் செய்தாரே உலகில் இறவாது நிற்பர் என்பதனை, ‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்,
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனர்' என்னும் புறநானூற்றா லறிக;
நடுக - நிறுத்துக