பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும் - நான்மணிக்கடிகை 19
இன்னிசை வெண்பா
பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும்
கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - 1பற்றிய
மண்அதிர்ப்பின் மன்னவன் கோலதிர்க்கும் பண்அதிர்ப்பின்
பாடல் அதிர்ந்து விடும். 19
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
கணவன் ஒழுக்கத்திற் கலங்குவானாயின் பெண்மான் போலும் மருண்ட பார்வையை உடைய அவன் மனைவியும் தன் கடமையிற் கலங்குவாள்;
புலவன் அறிவு கலங்கினால் அவன் கற்ற கருத்துக்களும் நிலை கலங்கும்:
தான் கைப்பற்றிய உலகத்திலுள்ள குடிமக்கள் நிலைகலங்குவாரானால் அரசனது ஆட்சியுங் கலங்கும்;
யாழின் நரம்புக்கட்டுகள் அதிர்ந்துவிட்டால் அதிற் பிறக்கும் பாட்டுகளும் அதிர்ந்து போம்.
கருத்து:
கணவன் கலங்கினால் மனைவி கலங்குவள்; கற்றான் கலங்கிற் கருத்துக்கள் கலங்கும்; குடி நடுங்கினாற் கோன் நடுங்குவன்; பண்ணதிர்ந்தாற் பாடலதிர்ந்துவிடும்.
விளக்கவுரை:
பெற்றான் - கொண்டவன், (கணவன்), ‘பொருளதிர்க்கு'ம் - நற்கருத்துக்கள் அவனிடம் பிறவாமையும் தெளிவுபெறாமையும். பண் - இசை; அற்றாயின் - இசை கெட்டாற் செய்யுளுங் கெடுமென்று உரைக்க.