தன்னை வியவாமை யன்றே வியப்பாவது - நீதிநெறி விளக்கம் 19

நேரிசை வெண்பா

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்த்தற்றால் - தன்னை
வியவாமை யன்றே வியப்பாவ தின்பம்
நயவாமை யன்றே நலம். 19

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் குளிர்ந்த நீரை விட்டுத் தீவிளக்கை வளர்த்தது போலாம்;

ஆதலால், வியப்பாவது தன்னைத்தான் புகழ்ந்து கொள்ளாமை யன்றோ நன்மதிப்பாகும்! இன்பத்தை விரும்பாமையன்றோ இன்பமாகும்?

விளக்கம்:

தீ வளரும் என்று நீர்விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகுமென்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பு மிகாது அழிந்தே போகும் எனப்படுகிறது.

மணிச்சுடர் முதலாயின இருத்தலின், இதனைத் தீச்சுடர் என்றார். தீச்சுடர் என்ற குறிப்பால் நல்நீர் என்பது தண்ணீராயிற்று.

சொரிந்து என்னுங் குறிப்பினால் எரியும் போது நெய் சொரிந்து தீ வளர்த்தல் போல வளருமென்று, எரியும் போது தண்ணீர் சொரிந்து அதன் வளர்ச்சியை எதிர்நோக்கினானென்பது பெறப்படும்.

இன்பம் நயவாமையன்றே நலம் என்பதை வியவாமை யன்றே வியப்பு என்பதற்கு உவமையாகக் கொள்ளலுமாம். நலம் - இன்பம்,

கருத்து:

தற்புகழ்ச்சி இகழ்ச்சியைத் தரும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-19, 8:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 69

சிறந்த கட்டுரைகள்

மேலே