சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம் – நான்மணிக்கடிகை 26
இன்னிசை வெண்பா
அலைப்பான் பிறவுயிரை யாக்கலுங் குற்றம்
விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம்
சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம்
கொலைப்பாலுங் குற்றமே யாம். 26
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
கொன்று உண்பதற்காக பிற உயிர்களை வளர்த்தலும் பிழையாகும்; விலைகொள்ளும் வகையால் ஊனைப்பெற்று உண்ணலும் பிழையாகும்;
சொல்லும் வகையின அல்லாதனவாகிய சொற்களை சொல்லிவிடுதலும் பிழையாகும்; கொலைவகைகளும் பிழையேயாகும்.
கருத்து:
பிறவுயிர்களைக் கொன்று உண்பதற்காக வளர்த்தலுங் குற்றம்;
அங்ஙனங் கொல்லாமல் அவற்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்ணலுங் குற்றம்;
சொல்லத்தகாதவற்றைச் சொல்லலுங் குற்றம்;
கொல்லலுங் குற்றமேயாம்.
விளக்கவுரை:
அலைத்தல் - ஈண்டுக் கொலைமேனின்றது, பால் - வகை;
சொலற்பாலவல்லாத - தீயனவுந் தகுதியற்றனவுமான சொற்கூறுகள்.
இதனால் புலாலுண்ணல், தகாதன கூறல், கொலைபுரிதல் முதலியன விலக்கப்பட்டன.