உலகின் விளிநோக்கி இன்புறூஉங் கூற்று – நான்மணிக்கடிகை 27
இன்னிசை வெண்பா
கோல்நோக்கி வாழுங் குடியெல்லாந்; தாய்முலைப்
பால்நோக்கி வாழுங் குழவிகள்; வானத்
துளிநோக்கி வாழும் உலகம்; உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று. 27
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
குடிமக்கள் எல்லோரும் அரசனது ஆட்சியை நோக்கி உயிர் வாழ்வார்;
குழந்தைகளெல்லாரும் தாயின் முலைப்பாலை நோக்கி உயிர் பிழைக்கும்;
உலகத்துயிர்கள் வானத்தினின்றும் விழும் மழைத்துளியை நோக்கி உயிர் வாழும்;
நமன் உயிர்களின் சாவை நோக்கி மகிழ்வான்.
கருத்து:
குடிகள் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர்; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும்; உயிர்கள் மழைத்துளியால் வாழும்; கூற்றுவன் உயிரிகளின் சாக்காட்டை எதிர்நோக்கியிருப்பன்.
விளக்கவுரை:
கோல் - ஆட்சிக்கு வந்தது; அடைமொழி புணராமையின், அது செங்கோலரசையே குறிப்பதாயிற்று :
இயல்பென்ற வளவில் அது நல்லியல்பையே குறித்தல்போல வென்க.
வாழுங்குடி என்பதனாலும் அப் பொருள் காணலாம்.
‘குடி' ‘உலகம்' முதலியன அஃறிணைச் சொல்லால் வந்தமையின், அவை தமக்கேற்ற அஃறிணை வினைமுடிபைக் கொண்டன.
‘நோக்கி' வாழ்த லென்றது. இன்றியமையாமை கருதி வந்தது.