கொலுசு ஒலித்ததில்

கொலுசு ஒலித்ததில்
==========================================ருத்ரா

அவை
ரோஜாவின் சருகுகள் இல்லை.
உன் கொலுசு
உதிர்த்த ஒலிச்சருகுகள் அவை.
அந்த ஒலிப்பிஞ்சுகள்
உலகத்தின் இந்த
இறுகிய மௌனத்தையெல்லாம்
கிழித்து
பூத்தையல் போட்டு விடும்
அழகிய தோரணங்கள் அவை.
அந்த ஒலித்துளிகள் விழுந்த
இடமெல்லாம்
உலகத்துச்சிறந்த
இசை அமைப்பாளர்கள்
ஒற்றி எடுத்துக்கொள்ளும்
இசை வடிவங்கள் அல்லவா
சிதறிக்கிடக்கும்!
மெல்ல நட அன்பே!
அவை நம் இதய ஒலிகள்.
தமிழின்
இன்னிசை அளபடைகளாய்
நம் காதலை அவை
இனித்து இனித்து
ஒலிக்கட்டும்.

===============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (7-Dec-19, 4:42 am)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 167

மேலே