அன்பு மகனுக்கு

அன்பு மகனுக்கு.....

பெண் பிள்ளை வேண்டும் என்ற
தீராத ஆசையினால்....
மூன்றாவது முத்து ஒன்றை...
என் வயிற்றில் சுமந்தேனே...

தேவதைதான்
பிறக்கும் என்று...
மனக்கோட்டை கட்டிக் கொண்டு...
மகப்பேறு அறையினிலே....
மனதார சென்றேனே....

அழுகைச் சத்தம்
கேட்டதுமே...
ஆண் பிள்ளை என்றனரே...
பெண்பிள்ளை ஆசை எல்லாம்...
பேராசையாய் ஆனதென
என் கண்கள் கலங்கியதே....

ஆசை மகனை
அள்ளி தூக்கியதும்..
ஆனந்த பரவசத்தில்
என் மனம் துள்ளியதே...

பேரழகா நீ இருக்க..
பெண்பிள்ளை
எனக்கு எதற்கு....
எங்க வீட்டு கடைக்குட்டி...
எப்போதும் என்
தங்கக் கட்டி....

தாய்ப்பாலை விட்டுக்கொடுத்து...
வேலைக்கு அனுப்பி வைத்தாய்..
தங்க மகன் உன்னை வளர்க்க..
தயக்கமின்றி உழைத்தேனே....

ஒன்றரை மாத குழந்தை உன்னை..
ஒத்தையாய் விட்டுவிட்டு..
ஒன்பது மணி நேரம்..
தவியாய் தவிப்பேனே....

ஐந்து மணி ஆனவுடன்
ஆசை மகனைக் காண....
ஆவலாய் ஓடிவந்து
அள்ளி அணைப்பேனே...

வேலைக்குச் சென்ற கஷ்டமெல்லாம்...
வேலன் உன்னை கண்டவுடன்...
வந்தவழி சென்றதுவே...

கட்டைவிரலை சூப்பிக் கொண்டும்...
என் கழுத்தை கட்டிக் கொண்டும்...
நீ தூங்கும் அழகை காண...
என்ன தவம் செய்தேனோ....

ராமன் லட்சுமணனாய்..
இரட்டையர்கள் துணையிருக்க...
அண்ணன்களின் அன்பிலே..
ஆனந்தம் கொண்டாயே...

தித்திக்கும் முத்தம் தந்து...
திக்குமுக்காட வைத்திடுவாய்....

அரும்பு மொழி பேசி..
கவலை எல்லாம் மரக்கடிப்பாய்....

குறும்பு சேட்டை செய்து
கோபமெல்லாம் விரட்டிடுவாய்....

கவிதையாய் பிறந்தவனே...
என் உலகம் என உருவானவனே....
கனவுகளின் கரு வானவனே......
கற்பனைக்கு கவி யானவனே....
புன்னகைக்கு மொழி யானவனே.....


தவக்கும் வயதில்
தாலாட்ட நேரமில்லை..
நடக்கும் வயதில்
முத்தமிட நேரமில்லை..
மன்னிப்பாயா என் செல்லம்...

அனைத்திற்கும் சேர்த்து..
ஓராயிரம் முத்தங்களுடன்...

கவின் என்ற கவிதைக்கு
கவி பாடும்
அம்மாவின்
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்....
பல்லாண்டு வாழ்க...
💐💐💐💐💐💐💐

எழுதியவர் : பானுப்பிரியா (11-Dec-19, 12:16 pm)
சேர்த்தது : செ பானுப்ரியா
Tanglish : anbu maganukku
பார்வை : 2478

மேலே