கல்விக்கும் ஓதிற் புகழ்சால் உணர்வு – நான்மணிக்கடிகை 103
இன்னிசை வெண்பா
மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய
காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும்
ஓதிற் புகழ்சால் உணர்வு. 103
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
வீட்டுக்கு ஒளி பெண்கள் ஆகும்;
பெண்களுக்கு நல்லியல்புகள் நிறைந்த புதல்வர்கள் ஒளியாகும்;
பெற்றோர் மனத்திற்கு இனிமை தரும் அன்பிற்குரிய புதல்வர்க்கு கல்வியறிவே ஒளியாகும்;
அக் கல்வியறிவிற்கும் சொல்லுமிடத்து கழ் நிறைந்த மெய்யுணர்வே ஒளியாகும்.
கருத்து:
மனைக்கு விளக்கம் நன் மனைவி; நன் மனைவிக்கு விளக்கம் அறிவறிந்த மக்கள்; அம் மக்கட்கு விளக்கம் கல்வி; கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.
விளக்கம்:
மனக்கு அத்துச் சாரியை தொக்கது - மனத்திற்கு,
புகழ்சாலுணர்வு – மெய்யுணர்வு.
முதலில் நின்ற விளக்கம் என்னும் சொல் மற்ற மூன்றிடத்தும் கூட்டப்படுதலால் முதல் நிலைத் தீவக அணியாகும். இச்செய்யுள் மாலா தீவகம்.