தோழமைகளுக்கு மகிழ்ச்சிகரமான புத்தாண்டு வாழ்த்துகள்

புதிய சரித்திரம் படைக்கும் புத்தாண்டு
=======================================
சிற்றிதழ் பூக்கும் சிரிப்பு மலர்கள்
-சிந்தையில் வாசம் சேர்த்திட வேண்டும்
முற்றிய வித்தில் முளைவிடும் மரம்போல்
-முயற்சிகள் யாவு மோங்கிட வேண்டும்
சுற்றிய துன்பம் சுருங்கி மறைந்து
-சுதந்திர தீயால் சுடரொளி வேண்டும்
ஒற்றுமை என்னும் உயரிய இசையை
-உயிரெனக் கொண்டு ஓதிட வேண்டும்
*
வேற்றுமை என்பதன் வேர்களை அறுத்து
-வீதிநாய் களுக்கு வீசிட வேண்டும்
ஊற்றெனப் பாயு முளமுள வன்பால்
-உயிருள வரைக்கு முதவிட வேண்டும்
காற்றினில் தவழ்ந்து கவிதையில் கலந்து
-காதினித் திடுமிசை காதலாய் வேண்டும்
நேற்றினில் நடந்தவை நீங்கிடப் பெற்று
-நீச மகன்றுயிர் நேசமும் வேண்டும்
**
காத்திருந் தேதான் கலங்கிய நெஞ்சக்
-கனவுகள் வெற்றிக் காணவும் வேண்டும்
ஆத்திரத் தாலே அடிக்கடி மூளும்
-அடிதடி சண்டை அகன்றிட வேண்டும்
காத்திர மான கலைகள் வளர்க்கும்
-கலைஞர் வட்டம் கூடிட வேண்டும்
பூத்திடு மிந்த புத்தாண் டிங்கொரு
-புதிய சரித்திரம் படைத்திட வேண்டும்
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Jan-20, 2:19 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 196

மேலே