பெரிய பெரியரான் எய்தப் படும் – நான்மணிக்கடிகை 34
இன்னிசை வெண்பா
இரும்பின் இரும்பிடை போழ்ப - பெருஞ்சிறப்பின்
நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின்
அரிய அரியவற்றாற் கொள்ப - பெரிய
பெரியரான் எய்தப் படும். 34
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
இரும்பினாற் செய்யப்பட்ட கருவிகளாலேயே இரும்பை குறுக்கே வெட்டுவர்;
மிக்க சிறப்புடைய பாயசம் முதலிய நீருணவுகளை யுண்டவர்களும் நீர்கொண்டே வாய் கழுவுவர்;
ஆராய்ந்தால் அரிய செயல்கள் அருமையான முயற்சிகளால் முடித்துக் கொள்வர்;
பெரிய பேறுகள் கல்வி கேள்விகளையுடைய தவப் பெரியோரால் அடையப்படும்.
கருத்து:
இரும்புக் கருவிகளால் இரும்பை வெட்டுவர்; சிறந்த நீருணவுகளை யுண்டார் நீரினால் வாய் கழுவுவார்; அரிய செயல்களை அரிய முயற்சிகளாற் கொள்வர்; பெரிய பேறுகளைப் பெரியோர் எய்துவர்.
விளக்கவுரை:
நீரென்றது, நீருடன் கூடிய சிறந்த உணவை யுணர்த்துகின்றமையின், ‘பெருஞ்சிறப்பின்' என்று அடைமொழி புணர்த்தார். அவ்வுணவு மிகுதி பற்றி நீரெனவே கூறப்பட்டது.
பெருஞ்சிறப்பின் நீர் என்பது பாற்சோறுமாம்.
‘வாய் பூசுப'; இன்னோரன்னவற்றை ‘இடக்கரடக்க' ரென்ப.
அரிய அரியவற்றான் எய்தப்படும் உண்மையை நிகழ்ச்சியிற் கண்டு தெளிக.
பெரிய பேறுகள் பெரியோருதவியினால் அடையப்படும் என்றும் உரைத்துக் கொள்க.