ரத்த வேட்டை-4

ஓடினேன். ஓடிக்கொண்டே இருந்தேன். சிறுஇலை சலசலப்பு சத்தம் கேட்டு கூட அந்த சாத்தான் தான் என்னை துரத்தி வருகிறது என அஞ்சி ஓடினேன். ஒருவழியாக எங்களது சர்ச் குடிலுக்கு வந்து கதவை அறைந்து சாத்திக் கொண்டேன். அப்பா ஊருக்கு சென்றுள்ளதாகவும் மறுநாள் தான் வருவார் என்றும் சொல்லிச் சென்றான் ராபின். எனக்கு சொல்லிக் கதறக் கூட ஆள் இல்லாமல் இருந்தது. அன்று இரவு முழுவதும் நான் கொஞ்சம் கூட தூங்கவே இல்லை. மறுநாள் காவல் நிலையம் சென்றேன்.

அந்த இன்ஸ்பெக்டர் நன்றாக கொளுத்து பெரிய தொப்பையுடன் இருந்தார்.

“சொல்லுங்க என்ன விஷயம்.?”

“சார் என்னை ஒரு சாத்தான் கொல்லப் பார்த்தது.” என்றேன். அவர் நன்றாக சிரிர்த்தார்.

“அதை பேய் ஓட்டுறவன் கிட்ட போய் சொல்லுமா இங்க ஏன் சொல்ற.?” என்று எக்கதாளமாக பதிலளித்தார்.

“சார்.. இது சிரிக்கிற விஷயம் இல்ல. சீரியஸ் விஷயம். நெஜமாவே நேத்து நான் ஒரு சாத்தானைப் பார்த்தேன். விட்டா அது என்னைக் அடிச்சுக் கொன்னுருக்கும்.” என்று அழுகையுடன் சொன்னேன். ஆனால் அதை நம்பவில்லை.

“பேயாவது குட்டி சாத்தானாவது. பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி தெரியுறீங்க. இப்படி கதை சொல்றீங்க. உங்களுக்கு மூளைல ஏதோ கோளாறாகிருக்கும். எனக்கு நல்ல மனநல மருத்துவரைத் தெரியும் வேணும்ன்னா உங்களை அங்க அனுப்பி வைக்கிறேன் போய் பாருங்க.” என்றார் நான் அழுகையுடன் திரும்பி நடந்தேன். விட்டால் என்னை பைத்தியம் என முத்திரைக் குத்திவிடுவார் போல இருந்தது. சாத்தானைப் பற்றி இவரிடம் புகார் செய்ய வந்த நான் உண்மையில் பைத்தியம் தான்.

நான் சொல்வதை யாரும் நம்பப்போவதில்லை இன்று இந்த நிகழ்வின் மூலம் தெரிந்துவிட்டது. எனக்கு வேறுவழி இல்லை. எனது தந்தையிடமே இதைப் பற்றிக் கூறுவது என முடிவெடுத்தேன். அவர் நிச்சயம் நம்புவார்.

அன்று மதியம் ஊரிலில்ருந்து வந்த தந்தையை சந்தித்து அவரிடம் எனக்கு நடந்ததெல்லாம் கண்ணீரோடு சொன்னேன். அவர் மிகுந்த யோசனையோடு சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

“நான் சொன்னதுல நம்பிக்கை இல்லையாப்பா.?”

“உன்ன நம்புறேன் ஜூலி. நான் அந்த சாத்தானைப் பத்தி என்னோட சின்ன வயசுல கேள்விபட்டிடுக்கேன். அது மனுஷ ரத்தங்களைக் குடிச்சு தன்னோட பசிய ஆத்திகும். அப்போ அது பல மனிதர்களைக் கொன்னுச்சு. அப்போ இருந்த இந்த சர்ச் பாதிரியார்கள் மிகுந்த முயற்சி செஞ்சு அதோட சக்தியை குறைச்சு. அதை அடக்குனாங்க. ஆனா இத்தனை வருடங்கள் கழிச்சு அது மறுபடி தன்னோட பழைய சக்திய திரும்ப பெற்றுவிட்டது என்பது உன்னோட அனுபவம் சொல்லுது. நீ மட்டும் அது கிட்ட மாட்டிருந்தா அது உன்னோட ரத்தங்களை குடிச்சிருக்கும்.”

“ஓ மை ஜீசஸ்..”

“அது குறி வச்ச ஆளுங்களை விடாது. தேடி வந்து ரத்தம் குடிக்கும். நாம எச்சரிக்கையா இருக்கணும்.”
“அப்போ அந்த சாத்தான் என்னைத் தேடி வருமாப்பா.?” என்ற என்னை அவர் வாஞ்சையுடன் தலையை வருடிக் கொடுத்தார்.

“நான் உயிரோட இருக்குறவரை அப்படி நடக்க விடமாட்டேன் ஜூலி. கர்த்தர் இருக்கார். புனித சிலுவை இருக்கு. பயப்பட வேண்டாம். அது உன்னை தேடி வர்றதுக்கு முன்னாடி நாம அங்க போய் அதை அழிக்கனும். அந்த இடத்த எனக்கு காட்டு ஜூலி. நாம அங்க போய் அதை அழிப்போம்.”

“போகலாம்ப்பா..” என்றேன் தைரியத்ததுடன். எனது தந்தை பிராத்தனை அரங்கு அருகில் உள்ள அறைக்கு சென்று ஒரு நீண்ட தோல்பையை எடுத்துக்கொண்டார். பிறகு பைபிளை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டார்.

“வா ஜூலி போகலாம்.” நாங்கள் இருவரும் அந்த பிரம்மாண்ட ஆலமரத்தின் அடியில் புதைந்து போன அரண்மனையை நோக்கி நடந்தோம்.

“இதோ இங்கேதான்.” என்றேன் என் தந்தையிடம். பிறகு நாங்கள் இருவரும் மரத்தின் மேல் ஏறி அந்த குறிப்பிட்ட பொந்தினை அடைந்து உள்ளே இறங்கினோம். உள்ளே இறங்கி அவனைத் தேடத் துவங்கினோம். ஒரு ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் நான் பரபரப்பானேன்.

“அப்பா இதோ இங்க தான் அவன் தோன்றினான்.” என்றேன். அப்பா அந்த இடத்தை ஆராய்ந்தார். அது கல்தரையாக இராமல் மரப்பலகையாக இருந்தது.

“ஜூலி தள்ளிக்கோ.” என்றபடியே உடைந்து கிடந்த கட்டிடத்தின் சிதிலம் ஒன்றின் சற்றே பெரிய கல்லைத் தூக்கி அந்த மரப்பலகை மீது வீசினார். எத்தனை வருடங்கள் ஆனதோ, மரப்பலகை சுக்குநூறாக உடைந்தது. நாங்கள் இருவரும் உள்ளே பார்வையை ஓட விட்டோம். உள்ளே நிலவறை செல்லப் படிக்கட்டுகள் தோன்றின. நாங்கள் இருவரும் உள்ளே நடந்தோம். உள்ளே இருட்டாக இருந்ததால். அப்பா பையில் இருந்து டார்ச்லைட்டை எடுத்துக் கொண்டார். உள்ளே மெதுவாக இறங்கினோம். சுற்றிலும் டார்ச்வெளிச்சத்தை ஓட விட்டார் அப்பா.

“அப்பா அதோ அங்கே படுத்திருக்கிறான்.” என்றேன். நாங்கள் இருவரும் அருகில் சென்றோம். சென்றதும் நான் ஆச்சரியத்தால் விழிவிரிந்தேன். அவன் முன்பு பார்த்தது போல பயங்கரமாக இராமல், உடலில் உரோமங்கள் அற்று இருந்தான். நல்ல அழகாய் வாலிபனாய் இருந்தான். ஒரு அழகான வாலிபன் தூங்குவது போலவே இருந்தது. இவன்தானா என்று எனக்கே சந்தேகமாக இருந்தது.

என் அப்பா நெஞ்சில் சிலுவைக்குறி இட்டுக் கொண்டார். பையிலிருந்து ஒரு சிலுவையையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டார். சிலுவையின் முனை மிகக் கூர்மையாக இருந்தது. இதைப்போல சில ஆங்கிலப் படங்களில் டிராகுலாப் பேய்களை நெஞ்சில் சுத்தில் அடித்துக் கொல்வதைப் பார்த்திருக்கிறேன்.

அப்பா அவன் அருகில் முழந்தாளிட்டு அமர்ந்து அவன் நெஞ்சில் சிலுவையை அறைய சுத்தியலை ஓங்கிய அதே வினாடி ஐம்பதுக்கும் மேற்பட்ட நாய்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டன.

-திகில் கூடும்

எழுதியவர் : அருள் ஜெ (30-Jan-20, 12:29 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 68

மேலே